Tuesday, November 20, 2012

மின்சாரம் கனவு - 10 இனி தமிழகம் வாழ வழி உண்டா?





இந்த தொடரின் முடிவில் வந்து நிற்கின்றோம். எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் வழியா இல்லை பூமியில்? என்பதையும் யோசிக்கத்தானே வேண்டும்.

தற்போதைய தமிழக முதல்வர் அடுத்த வருடம் தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றியே தீருவேன் என்று சூளுரைத்துள்ளார்.  ஆனால் நிதர்சனமான உண்மைகள் என்ன என்பதையும் நாம் பார்க்க வேண்டும். அரசியல்வாதிகளுக்கு அன்றைய பேச்சு அன்றோடு போச்சு.  ஆனால் பாதிக்கப்படும் மக்களுக்கு?  
நாம் இதுவரையிலும் தனியார் மின் உற்பத்தியாளர்கள் மூலம் தமிழக மக்களுக்கு எந்த காலத்திலும் பிரயோஜனமில்லை என்பதையும் பார்த்து விட்டோம். ஆனாலும் மத்திய மாநில அரசாங்கங்கள் அவர்களை முன்னுக்கு கொண்டு வருவதில் தான் அதிக அக்கறை காட்டுகின்றது. காரணம் காசு இல்லாவிட்டால் கட்சி நடத்த முடியாது என்பது கட்சி விசுவாசிகள் சொல்லும் காரணமாகும். 

26.3.2012 அன்று சமர்பிக்கபட்ட பட்ஜெட்டில் தமிழ்நாடு அரசு 3,800 மெகாவாட்டுக்கான மின் திட்டங்களை அறிவித்துள்ளது.  அது உடன்குடி 800 மெகாவாட். உப்பார் திட்டம்  எண்ணூர் 1600 மாற்றுத் திட்டம், 600 மெகாவாட், தூத்துக்குடி 4வது கட்டம் 800 மெகாவாட் 

ஆக மொத்தம் 3800 மெகாவாட்.

இதற்கும் மேலாக எண்ணூரில் 600 மெகாவாட்டுக்கான ஒரு திட்டத்தையும் எரிவாயுவினை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் 1000 மெகாவாட்டிறக்ன இரு திட்டங்களையும் தமிழக முதல்வர் அறிவித்து உள்ளார். 

இவற்றால் தமிழகத்தின் மின் பற்றாக்குறையத் தீர்க்க முடியுமா?முதல்வர் சொன்னபடி தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக மாற்றி விடமுடியுமா?

1991 - 2002 ஆம் ஆண்டு காலகட்டத்திற்குள் இந்தியாவிற்குள் மின்சாரத் துறையில் மூதலீடு செய்ய வந்த வெளிநாட்டு நிறுவனங்கள் 4.5 சதவிகிதம்.  அத்தனை பேர்களும் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை விட மகராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களையே தேர்ந்தெடுத்தனர். இந்த மாநில மின்வாரியங்கள் லாபகரமாக செய்ல்பட்டுக் கொண்டுருந்தன என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.


1991 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட புதிய பொருளாதார கொள்கைக்குப் பிறகு மூன்று தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் இந்த துறையில் ஈடுபட அனுமதித்து உள்ளனர்.

முதலாவதாக மாநில மின் வாரியங்களோடு(புரிந்துணர்வு மற்றும் வெளிப்படையான போட்டி என்ற அடிப்படைகளில்) நீண்ட கால மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் செய்து கொள்ள நிறுவனங்கள் அனுமதி அளித்தனர். 

இரண்டாவதாக சுய மின் தேவையை ஈடுசெய்து கொள்வதற்கான சுய மின் உற்பத்தி நிலையங்கள்  இங்கே அனுமதிக்ப்பட்டன. 

மின்சார வாரியத்துடன் மின் கொள்முதல் ஒப்பந்தததை செய்து கொள்வதற்காக நிர்ப்பந்தமற்ற அதே நேரத்தில் தனியார் மின் வணிக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான உரிமையைக் கொண்ட வணிக மின்சார உற்பத்தி நிலையங்களும் அனுமதிக்கபட்டன.

ஆனால் அரசாங்கம் விரும்பிய ஆசைப்பட்ட அத்தனை மாற்றங்களும் கடந்த 1991 க்குப் பிறகு மின்துறையில் நடந்தேறி வந்துள்ளன.  ஆனால் மக்களுக்கு இறுதியில் கிடைத்தது தான் என்ன?

தமிழகத்தின் இன்றைய மின் தேவை 12,000 மெகாவாட் .ஆனால் 8000 மெகாவாட். தான் உற்பத்தியில் இருக்கின்றது. 

2007 ஆம் ஆண்டில் தொடங்கிய மின் வாரியத்தின் சுய உற்பத்தி மற்றும் நெய்வேலி என் எல் சி & என் டி பி சி யின் கூட்டு முயற்சி மின் நிலையங்கள் 2012 ஆண்டின் இறுதிக்குள்ளாகவோ அல்லது 2013 தொடக்கத்திலேயோ தம் உற்பத்தியைத் தொடங்கி விடும். .தோராயமாக 2013 கோடைக காலத்தில் சுமார் 3300 மெகாவாட் மின்சாரம் அதிகமாகக் கிடைக்க வாய்பிருக்கிறது.

திருவள்ளுர் என்சிபிசி மற்றும் தமிழ்நாடு மின்வாரியமும்  இணைந்து 1500 மெகாவாட்.  இதில் த நா மினவாரியத்தின் பங்கு 1041 மெகாவாட்.

வட சென்னை இரு யூனிட் 1200 மெகாவாட். 

மேட்டுர் 600 மெகாவாட்.

நெய்வேலி என் எல் சி உடன் த நா மின்வாரியமும் இணைந்து 1000 மெகாவாட் இதில் மின்வாரியத்திற்கு பங்கு 367 மெகாவாட்.

சிம்மத்ரி 3 வது யூனிட் 95 மெகாவாட்

ஆக மொத்ம் 3323 மெகாவட்.

அணுமின் நிலையங்களில் இருந்து 1100 மெகாவாட் கூடுதலாக மின்சாரம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டாலும் கல்பாக்கம் மற்றும் கைகா அணு மின் நிலையங்கள் இதுவரை 30 சதத்திற்குக் கீழே தான் உற்பத்தியைக் காட்டியுள்ளன என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.  அணு மின் நிலையங்களில் இருந்து அதிக பட்சமாக 500 மெகாவாட் கிடைக்கும் என்பதே பெரிய எதிர்பார்ப்பு தான். .

2013 ஆம் ஆண்டில் மின் தேவை 7.சதம் கூடியிருக்கும் என்று வைத்துக் கொண்டால் அதன் கோடை காலத்தில் தமிழகத்தின் மின் தேவை 13000 மெகாவாட்டாக இருக்கும். அப்பொழுதும் 1200 மெகாவாட் அளவிற்குப் பற்றாக்குறை இருந்து கொண்டு தான் இருக்கும். தமிழகம் நிச்சயம் மின்வெட்டை சந்திக்க வேண்டிதான் வரும்.

2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு 2017 வரை தமிழகத்தில் புதிய மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்க சாத்தியமே இல்லை.

2014 ஆம் ஆண்டில் மாநிலத்தின் மின்  பற்றாக்குறைய 2200 மெகாவாட்டாகக் கூடிவிடும். புதிய தொழிற்கூடங்கள் நிறுவப்படும் பட்சத்தில் இது மேலும் அதிகரிக்கும். 2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் ஆண்டாதலாலும் தேர்தல்கள் கோடை காலத்தில் நடத்தப்படும் என்பதாலும் இந்தக் கூடுதல் தேவையை ஈடுகட்ட அரசானது சந்தையில் கூடுதல் விலை கொடுத்தே மின்சாரத்தை வாங்கும்.  இதன் காரணம் மின்வாரியத்தின் நஷ்டம் படு வேகமாகக்கூடிப்போகும்.

2015 ஆம் ஆண்டில் மின் பற்றாக்குறையானது இன்று இப்போது உள்ளதைப் போல 3300 மெகாவாட்டாகக்கூடிப் போகும். 

2014 ஆம் ஆண்டோடு ஜிஎம்ஆர் நிறுவனத்தின் 2,200 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தின் உற்பத்திக் காலகட்டம் முடிந்து போயிருக்கும்.  2016 ஆம் ஆண்டில் 200 மெகாவாட்டுக்கான மதுரை மற்றும் சாம்பல்பட்டி மின் நிலையங்களின் உற்பத்தி முடிந்து போகும்.

இந்த சூழ்நிலையில் 15 ஆண்டுகள் கடந்து விட்ட திரும்பகோட்டை (107 மெகாவாட்) இருமுறை பழுதுபட்ட குத்தாலம் (101 மெகாவாட்) மின் நிலையங்கள் எப்படி உதவும் என்று சொல்ல முடியாது.

உருவாக்கப்படும் புதிய மின் உற்பத்தி நிலையங்கள் எப்படி உதவும் என்று சொல்ல முடியாது.  புதிய மின் உற்பத்தி நிலையங்கள் வர வாய்பில்லாத சூழ்நிலையில் தமிழகத்தின் மின் தேவை 4500 மெகாவாட்டைத் தாண்டியிருக்கும்.  

எனவே மின்வாரியத்தைக் காப்பாற்வே முடியாத சூழ்நிலை 2016-17 ஆம் ஆண்டில் நிகழலாம்.

இதனை தடுக்க வழிகள் உண்டா?

2003 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மின்சார சட்டத்தினால் உருவாக்கப்படட தனியார் மின நிறுவனங்கள் (ஏறக்கறைய பத்து நிறுவனங்கள்) தமிழ்நாடு முழுக்க பிரம்மாண்டமாக வளர்ந்து கொண்டு இருக்கின்றன.

இந்த பத்து நிறுவனங்களும் உற்பத்தி செய்யப்போகும் 18140 மெகாவாட் ஆகும்.  இவர்கள் தயாரிக்கப் போகும் மின்சாரம் எதுவும் தமிழ்நாட்டு மக்களுக்கு அல்ல. அது வியாபாரத்திற்கு. மேற்கொண்டு நமக்கு அவசியம் தேவைப்படால் அவர்கள் சொல்லும் விலைக்கு நாம் கட்டுப்பாட்டால் வாங்கிக் கொள்ளலாம். இதில் ஒரு நிறுவனம் தான் அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் உள்ள சி. பிரதாப் ரெட்டி அவர்களுடையது.  ஏறக்குறைய 2000 மெகாவாட் அளவுள்ள தமிழ்நாட்டில் மரக்காணத்தில் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிறுவனங்களின் பட்டியல்

COASTAL ENERGEN PVT LTD 1200 MW TUTICORIN
TRIDEM PORT POWER LTD 2000 MW NAGAPATTINAM
UDI INFRASTRUCTURE PVT LTD 2000 MW CUDDALORE
SRI CITY INFRASTRECTURE DEVELOPMENT LTD 1000 MW MANAPPADU
IND BARATH POWER MADRAS PVT LTD 1320 MW TUTICORIN
PEL POWER PVT LTD (PATEL ENGG. LTD) 1050 MW NAGAPATTINAM
NSL NAGAPPATTINAM & INFRATECH PVT LTD 1500 MW NAGAPATTINAM
IL AND FS TAMIL NADU POWER CO LTD 3600 MW CUDDALORE
APPOLLO INTRASTRUCTURE PROJECTS FINANCE CO PVT LTD 2000 MW MARAGGANAM
SRM ENERGY PVT LTD 2000 MW CUDDALORE
TOTAL 18140 MW

சரி, இவர்களால் நமக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. மீதி இருக்கும் வாய்ப்புகள் தான் என்ன? 

1. ஆந்திராவில் உள்ள சிம்மத்திரி முதல் நிலையத்தின உற்பத்தித் திறனான 1000 மெகாவட்டில் தமிழகத்திற்கு சட்டபடி கிடைக்க வேண்டிய ஆனால் இதுவரையிலும் கொடுக்கப்டடாத பங்கு 190 மெகாவாட் ஆகும். தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இரண்டாவது நிலையத் திறன் கூட இன்று வரையிலும் ஆந்திரத்திற்கே வழப்பட்டுள்ளதாக ஆந்திர முதல்வர் தெரிவித்துள்ளார்.

2. நெய்வேலி முதல் நிலையத்தின் உற்பத்தித் திறன் 600 மெகாவாட் ஆகும்.1962ல்நிறுவப்பட்டது. இந்த 600 மெகாவாட்டும் தமிழகத்திற்குத்தான் என்ற ஒப்பந்தம் இருக்கிறது. இது புதுப்பிக்கப்படும் போது அதன் திறன் 1000 மெகாவாட்டாகும்.  இந்த 1000மெகாவாட்டையும் தமிழகத்திற்கு பெற முடியும் .

3 தூத்துக்குடியில் அமையவிருக்கும் என்எல்சி மினவாரியக் கூட்டு மின் நிலைய ஒப்பந்தப்படி உள்ள 387 மெகாவாட்டுக்குப் பதிலாக 750 மெகா வாட்டைப் பெற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. இந்தியாவின் கிழக்கு மேறகுப் பிராந்தியங்களில் இருந்து கிடைக்கும், குறைந்த விலை மின்சாரத்தைத் தமிழகத்திற்கு கொண்டு இன்று போதுமான மின் பாதைகள் இல்லை.  இதை அமைக்க ஏற்பாடு செய்யதாலே பாதிப் பிரச்சனைகள் தீர்ந்து விடும்.

5. தொடக்கம் முதலே தனியாருக்கு மட்டுமே சாதகமான ஒழுங்குமுறை ஆணையத்தை கலைக்கப்படாதவரைக்கும் மின்சாரச் சட்டத்தை நீக்க முயற்சி எடுக்காத வரையிலும் எந்த மாறுதல்களும் நடை பெறப் போவதில்லை.

2016-2017 ஆண்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியம் என்பது இல்லாமல் போயிருக்கும்.  தனியார் மூலம் மட்டும் மின்சாரத்தை பார்க்க முடியும்.

கூட்டு முதலீட்டுத் திட்டங்களான நெய்வேலி அனல் மின் நிலையம் தமிழ்நாடு மின்வாரியம் தேசிய அனல் மின் கார்ப்ரேஷன் தமிழ்நாடு மின் வாரிய திருவள்ளுர திட்டம் ஆகியவை 2002-2003 ஆம் ஆண்டுகளில் ஒப்பந்தம் செய்யப்பட்டன என்றாலும் கூட இவை இந்த பத்தாண்டுக்குப் பிறகே செயல்பாட்டுக்கு வரவிருக்கின்றது.

ரூ 10,000 கோடி முதலீட்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகமும் (டிட்கோ) இணைந்து திரவ இயற்கை எரிவாயு முனையம் ஒன்றினைத் தொடங்க வேண்டும் என்பதற்கான பேச்சுவார்த்தையை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தமிழ்நாடு அரசுடன் 24 மே 2010 ஆம் தேதியன்று தொடங்கியது.  இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்க்கும், தமிழ்நாடு தொழில் வளர்சசிக் கழகத்துக்கும் இடையே ஆகஸ்டு 2010 ல் கையெழுத்தானது.  

இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் இது தான் முதல் மறு வாயுவாக்கம் முனையமாகும்.  இந்த முனையமானது ஆண்டொன்றுக்கு 50 லட்சம் மெட்ரிக் டன் திரவ இயற்கை எரிவாயுவைக் கையாளும் திறனைக் கொண்டிருக்கும். இந்தத் திட்டத்தினை முன்னெடுத்துச் செல்வதற்கான அடுத்த ஒப்பந்தம் 22 மார்ச் 2012 ல் கையெழுத்தானது. 

2015-16 ஆம் ஆண்டு வாக்கில் இந்தத் திட்டம்  செயல்படத் துவங்கும் என்று எதிர்பார்க்கபடுகின்றது.  இந்த திட்டத்திற்குத் தேவையான திரவ இயற்கை எரிவாயுவினை நீணட் கால அடிப்படையில் வாங்குவதற்காக கட்டார், பிரிட்டிஷ், கேஸ் மற்றும் ரஷ்ய நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றது.

இந்த தொடர் முடிவடையும் இந்த நேரத்தில் நீங்கள் இந்த வலைதளத்தை ஒரு முறை விரும்பியவர்கள் பார்த்து விடவும்.


இந்த வலைதளத்தில் உள்ள நிறுவனத்தை துபாய் நாட்டில் உள்ள அஹமது புகாரி நிறுவி உள்ளார். நிலக்கரி வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர். .டாட்டா குழுமம் போன்ற இந்திய நிறுவனங்களுக்கு மற்ற நாடுகளில் இருந்து நிலக்கரி விநியோகம் செய்வது அவரது முதன்மையான தொழில். இவரின் நிறுவனம் தூத்துக்குடியில் 1200 மெகாவாட் நிலக்கரி மின் மையம் மின் உற்பத்தியைத் துவங்கும் நிலையை அடைந்துள்ளது. மேலும் அங்கேயே 1600 மெகாவாட் நிலக்கரி மின் உற்பத்தி மையத்தை நிறுவ முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த மின் நிலையம் டாட்டா பவர் டிரேடிங் நிறுவனத்துடன் அதன் 70 சதவிகித மின்சாரத்தினை மின கொள்முதல் ஒப்பந்தத்தை செய்துள்ளது. மீதமுள்ள 30 சதவிதிக மின்சாரத்தை என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேட்ட போது 

அவர் சொன்ன பதில்

"இந்த மின்சாரத்தை எவருக்கு வேண்டுமானாலும் விற்கு கொள்ளலாம் என்பதற்கான உரிமையை 2003 ஆம் ஆண்டின் மின்சாரச் சட்டம் எங்களுக்கு வழங்கி உள்ளது.  இலங்கை வங்காள தேசம், பாகிஸ்தான் போன்ற தெற்கு ஆசியாவைச் சேர்ந்த நாடுகளில் உள்ள எவருக்கும் இந்த மினச்ரத்தை நாங்கள் விற்றுக் கொள்ளலாம் எனப்தை சட்டம் உறுதிபபடுத்தி உள்ளது.  யார் நல்ல விலை கொடுக்கிறார்களோ அவர்களுக்கு விற்போம்" என்றார்.
                                                               •••••••••••••••••••••••••••

நம்முடைய சட்டங்கள் என்பது சாமானிய மக்களுக்காகவா? என்பது தற்போது உங்களுக்கு புரிந்து இருக்குமோ? .

ஸ்வீட் எடுங்க. கொண்டாடுங்க. புதிய திரைப்படங்களுக்குச் செல்வோம். விமர்சனம் எழுதுவோம். மீதி நேரம் இருந்தால் சிரிப்பொலி, ஆதித்யா சேனல் பார்க்கலாம். நாளைய பொழுதில் என்ன மாறுதல்கள் வேண்டுமானாலும் நடக்கக்கூடும்.  கவலைப்பட்டு என்ன ஆகப் போகின்றது?.

நாம் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். 

இன்றைய சூழ்நிலையில் சென்னையைத் தவிர்த்து மற்ற இடங்களில் அறிவிக்கப்படாமல் 16 மணி நேரம் மின்தடை அமலில் இருக்கிறது.  கடந்த மூன்று ஆண்டுகளில் மின்சாரத்தினால் பாதிக்கப்பட்ட தொழில்களும், நாடு இழந்த தொகையும் கணக்கில் அடங்கா. இன்று வரையிலும் எந்த மாற்றமும் இல்லை. காசு இருந்தால் கவலையில்லை என்று யோசிக்கும் நடுத்தரவர்க்கத்தினர் தற்போது பயன்படுத்திக் கொண்டு இருக்கும் இன்வெர்ட்டர், யூபிஎஸ்க்கு கூட சார்ஜ் ஏற்ற முடியாத அளவுக்கு உருவாகப் போகும் மின்தடையில் வாழப் போகின்ற நம் வாழ்க்கை நம்மை பார்த்தே சிரிக்கும் காலம் வரப்போகின்றது.

அரசியல்வாதிகளின் கொள்ளையை விட நமக்கு அரசியல்கட்சி விசுவாசம் தான் பிரதானமானது. வாழ்க்கைக்குத் தேவையான பிரச்சனைகளை விட தற்போது சாதிப் பிரச்சனைகள் தான் முக்கியமானது. நமக்கு ஏன் வீண் வம்பு என்று பாதுகாப்பாக வாழப் பழகி விட்ட சமூகத்திற்கு அஹிம்சை எண்ணமே நமக்கு முக்கியமானது. 

காந்தி சொன்ன கிராமிய பொருளாதாரத்தைப் பார்த்து கைகொட்டி சிரித்த அத்தனை பேர்களுக்கும் இனி வரும் காலங்களில் அவர் வாழச் சொன்ன வாழ்க்கை தான் சரி என்று உணரும் நேரமாகவும் இருக்கப் போகின்றது. நுகர்வு கலாச்சாரம் என்ற நுகத்தடியில் நாமே நம்மை விரும்பி மாட்டிக் கொண்டுள்ளோம். உணர்ந்துள்ள அரசியல்வாதிகளும் கனவு காணுங்கள் என்று தானே சொல்லி நம் ஆசையை அதிகமாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். பன்னாட்டு, பெரிய நிறுவனங்களின் வளர்ச்சியில் தான் இனி நம் வாழ்க்கையை வாழப் பழகிக் கொள்ள வேண்டும். . 

பத்தாண்டுகளுக்கு முன்னால் சூரிய சக்தியை பயன்படுத்தியே ஆக வேண்டும் என்று அரசாங்கங்கள் முன்னெடுத்து இருந்தால்? இன்று இந்த அளவுக்கு பிரச்சனைகள் உருவாகியிருக்குமா? 

அப்புறம் எப்படி அவர்களால் சம்பாரித்து இருக்க முடியும்? 

வெகுஜன பத்திரிக்கைகளில் கூட இத்தனை விஸ்தாரமாக எழுத முடியாது. அவர்களின் நிர்ப்பந்தங்கள் என்பது தனியாக பேசவேண்டிய சமாச்சாரம். பணத்தை சம்பாரிப்பதை விட சம்பாரித்த பணத்தை காப்பாற்று தான் இந்தியாவில் மிகப் பெரிய பிரச்சனை.. பணம் படைத்தவர்களுக்கு காப்பாற்றியே ஆக வேண்டிய பயம். மொத்தத்தில் அதுவொரு இருண்ட உலகம்.

அது சரி?

இங்குள்ள வளம் அத்தனையும் சுரண்டியபிறகு அரசியல்வாதிகளும் நாமும் எதை வைத்து நாம் நுகரப் போகின்றோம்?

தொடர் இத்துடன் முடிவடைகின்றது.  
                         •••••••••••••••
நம் தமிழ்நாட்டின் முதலமைச்சர்களுக்கு மட்டும் தான் கடிதம் எழுதத் தெரியுமா?  அடுத்த பதிவில்...........
                        ••••••••••••••••
இந்த தொடர் பதிவு எழுத உதவிய புத்தக ஆசிரியர் திரு சா. காந்தி அவர்களுக்கும் உதவி புரிந்த எனது நண்பர்கள் இருவருக்கும் தேவியர் இல்லத்தின் நன்றியை இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன்.. 
                       •••••••••••••••••••  
தொடரை வாசித்த தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அத்தனை நல் இதயங்களுக்கும் என் நன்றிகள்.  
                        •••••••••••••••••
வலைதள வாசிப்பாளர்களுக்கு அப்பாற்பட்டு தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகத்தில் இந்த தொடரை ஒவ்வொருவரும் முறை வைத்து படித்துக் கொண்டு இருப்பதாக நண்பர் அழைத்துச் சொன்னபிறகு வலையில் எழுத வேண்டிய விசயங்களுக்கு அப்பாற்பட்டு பல கூடுதல் தகவல்களை எழுதத் தொடங்கினேன். 

நான் நினைத்தபடியே இந்த தொடர் பலரின் பார்வைக்கும் சென்றடைந்தது மகிழ்ச்சியே.  இன்னமும் எழுத வேண்டிய விசயங்கள் பல இருந்தாலும் முக்கியமான தகவல்களை ஓரளவுக்கு எழுதியுள்ளேன். தேவையான நாம் புரிந்து கொண்டே ஆக வேண்டிய விசயங்களை எழுதியுள்ளேன் என்பதே எனக்கு திருப்தியாக உள்ளது. என்னை உழைக்க வைத்த நண்பர் வவ்வாலுக்கு நன்றி.

இந்த பதிவில் உங்கள் விமர்சனங்களை எழுதி வைத்தால் அது பலரின் எண்ணத்தை பிரதிபலிப்பதாக இருக்கக்கூடும். நிச்சயம் இதில்  நீங்கள் எழுதி வைக்கும் விமர்சனத்திறகெல்லாம் கைது நடவடிக்கை  ஏதும் இருக்காது என்பதை கூடுதல் தகவலாக விட்டுச் செல்கின்றேன்.

34 comments:

அது ஒரு கனாக் காலம் said...

நல்ல கருத்தாக்கம், இது ஒரு நல்ல தீர்வுக்கு தொடக்கமாக இருக்கட்டும்.

ஜோதிஜி said...

ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி.

நன்றி தல.

Anonymous said...

5000 mw *80000000=40000 crores for solar power tamilnad middle class2crores 400000000000/20000000=20000=better than gurusamays- fraud

திண்டுக்கல் தனபாலன் said...

இத்தனை தகவல்களை திரட்டி பதிவிட்டதற்கு ஒரு சல்யூட்...

ஆக இது ஒரு தொடர்கதை என்பதை தெள்ளத் தெளிவாக சொல்லி விட்டீர்கள்... நன்றிகள் பல...

நகைச்சுவை துணுக்குகளும், கூடுதல் தகவலும் தான் மிக்க மகிழ்ச்சி தருகிறது...

(அம்மாவுக்கு சும்மா ஒரு கடிதம் - என்னவாயிற்று...? எனது dashboard-ல் பதிவைப் பார்த்தேன்... தளத்தில் வரவில்லையே... இந்தப் பதிவு தான், சமீபத்திய பதிவாக வருகிறது...)

தீபாவளி வாழ்த்து - எனது பதிவில் உள்ளது தான்... இருந்தாலும் உங்களுக்காக :

உங்களின் இன்பங்கள் யாவும் பெட்ரோல், டீசல், தங்கம், கியாஸ் சிலிண்டர், இன்னும் பலவற்றின் விலைகள் போல தினமும் உயரட்டும்... உங்களின் துன்பங்கள் யாவும் மின்சாரம் போல சுத்தமாக இல்லாமல் போகட்டும்...

நன்றி...

வடுவூர் குமார் said...

ஐந்தாவது பாயிண்ட் - நிறையவே யோசிக்க வைக்கிறது.நல்ல தொடர் அருமையான தகவல்கள்.உங்களுடன் உழைத்த அனைவருக்கும் நன்றி.
கூடிய விரைவில் வீட்டில் சோலார் பேனல் வைக்க முயற்சி எடுத்து அரசாங்கத்து கொஞ்சம் சுமையை குறைக்க வேண்டும்.
பெற்றோர் வீட்டில் மும்முனை இணைப்பு வேண்டி EBக்கு கட்டிய பணம் அவர்களுக்கு உதவுமா என்று தெரியவில்லை.மேலும் ஒரு தெண்டமா?ஹும்!

Anonymous said...

ok

வவ்வால் said...

ஜோதிஜி,

நிறைய உழைத்து பதிவிட்டுள்ளீர்கள்,பாராட்டுக்கள்.

மக்களை சிந்திக்க வேண்டும் என்கிறீர்கள் சரியானதே ஆனால் முழுமையாக சொல்லாமல் ,ஒரு குறிப்பிட்ட வகையில் தகவல்களை கட்டமைக்கிறீர்கள் என்பதே ஆரம்பத்தில் இருந்து சொல்லி வருவது.

நீங்கள் சொல்லி இருப்பதில் பாதி உண்மை, மீதி குறிப்பிட்ட திசையில் கட்டுரை பயணிக்க வேண்டும் என்பதற்காக விடப்பட்டுள்ளது, திசை திருப்பப்பட்டுள்ளது என்பதே எனது கருத்து.தவறாக நான் புரிந்து கொண்டிருப்பின் மன்னிக்கவும்.

ஜோதிஜி said...

தொடக்கம் முதல் நம் இருவருக்கும் ஒரு விசயத்தில் சற்று முரண்பாடு எப்போதும் போல வந்து கொண்டேயிருக்கிறது. உண்மையும் கூட. தேவையானதும் கூட.

1. நிறைய தகவல்கள், உண்மைகள், அசிங்கங்கள், அக்கிரமங்கள், காட்சிகள் ஒரு விசயத்திற்குப் பின்னால் உண்டு. உங்கள் பார்வையில் நான் அத்தனையையும் எழுதுவதில்லை என்ற குற்றச்சாட்டு. உண்மை தான். நான் எழுதுவதில்லை என்பதை விட அது தேவையில்லை என்பது தான் எனது கொள்கை.

2. ஒரு அரசியல்வாதி என்றால் அவரின் வாழ்க்கை பொதுவாக வந்து விடுகின்றது. ஆனால் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையின் அந்தரங்கம் முதல் அவரின் பிரதான ஊழல் வரைக்கும் பேச நிறைய இருக்கின்றது. ஆனால் நம் சமூகம் தனி மனித ஒழுக்கத்தை வாய் அளவில் தான் பேச விரும்புகின்றது. ஆனால் அவரவர் சொந்த வாழ்க்கையில் கடைபிடிக்க முயலுவதில்லை. இதுவே பொதுவான நபரைப் பற்றி அவரின் அந்தரங்கத்தைப் பற்றி பேசும் போது எல்லோருக்கும் தோன்றுவது இயல்பான வக்கிரமான எண்ணங்கள் மற்றும் ஆர்வம் கலந்த ஆசைகள். ஆனால் அவர் மூலம் இந்த சமூகம் எந்த வகையில் திசை திருப்பப்பட்டது? என்ன பாதிப்புகள் உருவானது என்பதையும் பற்றி யோசிப்பதிலலை. அவரின் அந்தரங்க வாழ்க்கை தெரிந்த கொண்ட திருப்தியில் அடுத்த நபரை நோக்கி நகர்ந்து போய்விடுகின்றது.

3. சொல்ல வந்த விசயங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்துக்கள் அம்போ என்று கேள்வி கேட்பாடு இல்லாமல் போய்விடுகின்றது. என்னுடைய கொள்கை கருத்து ரீதியான தாக்கம். அதன் மூலம் எடுத்துக் கொள்ளும் விசயம். அவர் வாழ்க்கையை உணர்ந்து கொள்ளுவது முக்கியம்.

4. நாம் எல்லோருமே மாற்றத்திற்கு ஆசைப்படுகின்றோம். ஆனால் நாம் எந்த அளவுக்கு மாறத் தயாராய் இருக்கின்றோம் என்பதே மிகப் பெரிய கேள்விக்குறி. மாற்றம் என்பது வெளியே இருந்து தான் வர வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம்.

5. இந்த தொடரில் நான் சொல்ல வந்த விசயம் மின்சாரத் தடைக்கு காரணங்கள் என்ன? யார் காரணம்? எங்கிருந்து இந்த பிரச்சனை தொடங்கியது? எதனால் தொடங்கியது? ஏன் இன்னமும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது? என்ன தான் மாற்று ஏற்பாடு?

6. பத்திரிக்கை எனறால் பலருக்கும் போய்ச சேரும். ஆனால் வலைதளம் என்பது அதன் வீச்சு என்பது படித்தவர்கள் என்றாலும் கூட பாதிக்கப்பட்டவர்கள், தெரிந்து கொள்ள ஆசைப்படுவர்கள், கணினி முன்னால் பொறுமையாக அமர்ந்து படிக்க நேரம் கிடைப்பவர்கள் இந்த மூன்று வட்டத்திற்குள் அதுவும் குறுகிய வட்டத்திற்குள் தான் இந்த செய்திகள் சென்றடையும். நாமும் அதைத்தான் எதிர்பார்க்க முடியும்.

அதைத்தான் நான் தொடக்கம் முதலே இன்று வரையிலும் ஒரே நிலையில் ஒரே பாதையில் என் எண்ணங்களை கோர்வையாக்கி எழுதி வைக்கின்றேன்.

மாற்றுக் கருத்து இருந்தால் சொல்லுங்க. எழுத்து என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் முயற்சித்துக் கொண்டேயிருப்பது. ஒரு வேளை சில மாறுதல்களை உருவாக்கும் பட்சத்தில் அடுத்தடுத்து எழுத வேண்டிய விசயங்களுக்கு உதவக்கூடும். நன்றி வவ்வால்.

Anonymous said...

Excellent.... compilation...
but idhuvum kadanthu pogum


http://sivaparkavi.wordpress.com/

ஜோதிஜி said...

புத்திசாலித்தனமான முடிவு. உடனே முயற்சி செய்யவும்.

ஜோதிஜி said...

தனபாலன் அது அடுத்த பதிவு. வரும். நிச்சயம் வரும். ஒரு வேளை வவ்வால் போன்ற நண்பர்களை அந்த பதிவு திருப்திபடுத்தும்.

ஜோதிஜி said...

மின்சாரத்துறை சார்ந்த நண்பராக இருப்பீங்க போலிருக்கு. முழுமையாக சொல்லாமல் சென்று விட்டீங்க.

ஜோதிஜி said...

இதுவும் கடந்து போகுமா? ஏற்கனவே வவ்வால் கொல வெறியோடு என்னை கடித்து வைத்ததை பார்த்துமா?

முனைவர் இரா.குணசீலன் said...

சமூகத்தின் உண்மையான நிலையைப் புள்ளிவிவரங்களோடும், நிழற்படங்களோடும் அழகாகப் படம்பிடித்துக்காட்டியுள்ளீர்கள்.

நன்று.

ஜோதிஜி said...

அண்ணாமலை பல்கலைகழகம்(மின வெட்டை காரணம் காட்டி ஆட்குறைப்பு சம்பள குறைப்பு நடவடிக்கை செய்வது) போல உங்கள் கல்லூரி எப்படி இருக்கிறது நண்பா?

வவ்வால் said...

ஜோதிஜி,

நீங்க 10 பாகமாக பதிவு எழுதி இருப்பதை மறுக்கவில்லை, ஆனால் ஆங்காங்கே மொட்டையாக ,தொடர்பில்லாமல், முழுமையாக இல்லாமல் , தர்க்க ரீதியாக எப்படி எனப்பார்த்தால் வாய்ப்பில்லாதவைகளை அடுக்கி வைத்துள்ளது புரியும்.

நீங்கள் சொல்வதில் ஒன்று மட்டுமே சாத்தியம், தனியாரிடம் மின்சாரம் வாங்கும் சூழல் அதிகரிகர்க்கும் என்பதே ஏன் எனில் இத்தனை காலமாகவும் தனியார் அல்லது விலைக்கு வாங்கிய மின்சாரம் 60% தமிழக அரசு உற்பத்தி 40% என்ற விகிதத்தில் உள்ளது, அதே விகிதாச்சாரம் தொடரலாம், அல்லது அதிகரிக்கலாம்.

//இலங்கை வங்காள தேசம், பாகிஸ்தான் போன்ற தெற்கு ஆசியாவைச் சேர்ந்த நாடுகளில் உள்ள எவருக்கும் இந்த மினச்ரத்தை நாங்கள் விற்றுக் கொள்ளலாம் எனப்தை சட்டம் உறுதிபபடுத்தி உள்ளது. //

இது எப்படி சாத்தியம் மின்சாரத்தை காற்றில் அனுப்பினால் தான் உண்டு.

இலங்கைக்கு கடல் வழி கம்பிவடம் அமைக்கும் திட்டம் மட்டும் காகிதத்தில் இருக்கு , மற்றபடி எந்த நாட்டுக்கும் ,அதுவும் தூத்துக்குடியில் இருந்து பங்களாதேச், பாகிஸ்தானுக்கு என சொல்வது சாத்தியமில்லாத நிலையில், தனியார் தயாரிக்கும் அவ்வளவு மின்சாரமும் எங்கே போகும், பெரும்பாலும் தமிழக அரசு தான் வாங்கும், அதில் கமிஷன் விளையாடும்.

ஒரு மாநிலம் விட்டு மாநிலம் கொண்டு சென்றாலே டிரான்ஸ்மிஷன் லாஸ் அதிகம் ஆகிவிடும், இந்த இழப்பினை வாங்குபவர்கள் தான் ஏற்க வேண்டும் என விதிமுறை இருப்பதால், தொலை தூரத்தில் இருக்கும் யாரும் தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கி இழப்பை அதிகரித்துக்கொள்ள மாட்டார்கள்.

ஒரே வழி அத்தனை தனியாரும் தமிழ்நாடு மின்வாரியத்தினை வாங்க வைக்க முயல்வார்கள், அதில் பேரம் பேசி ,கமிஷன் அதிகம் கொடுப்பவர்களிடம் மின்சாரம் வாங்கிவிட்டு ,அரசுக்கு நஷ்டம் என கணக்கு காட்டுவார்கள்.

இதான் உண்மை இதனை 10 பாகத்திலும் நீங்கள் குறிப்பிடவில்லை, தனியார் மிக அதிக அளவில் தமிழ்நாட்டில் மின் உற்பத்திக்கு முதலீடு செய்ய காரணமே இங்கே எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பேரம் பேசி காரியம் முடிக்கலாம் என்ற "வியாபார நெளிவு சுளிவு" அனைவருக்கும் தெரிந்திருக்கிறது.

எனவே தனியார் மின்சாரம் தமிழ்நாட்டுக்கு கிடைக்காது என சொல்லாதீர்கள், கிடைக்கும் ஆனால் செலவு வைக்கும் :-))

------------

//2014 ஆம் ஆண்டோடு ஜிஎம்ஆர் நிறுவனத்தின் 2,200 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தின் உற்பத்திக் காலகட்டம் முடிந்து போயிருக்கும். //

இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் எங்கே ஜிஎம்மார் 2,200 மெ,வாட் மின் உற்பத்தி நிலையம் செயல்ப்படுத்திக்கொண்டிருக்கிறது என்பதை அறிய தந்தால் உபயோகமாக இருக்கும்.

//2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு 2017 வரை தமிழகத்தில் புதிய மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்க சாத்தியமே இல்லை.
//

2013 க்கு பின்னரே பல மின் உற்பத்தி திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும், அப்படி இருக்கையில் அதன் பின்னர் உற்பத்தி இருக்காது என எப்படி சொல்கிறீர்கள்.

கூடுதல் தகவல்,

திருவள்ளூர் அனல் மின்நிலையத்திட்டம் முழுவதும் தமிழ்நாடு மின்வாரியமே வாங்கிவிட்டது.

தூத்துக்குடி உடன்குடி திட்டத்தில் இருந்து பெல் நிறுவனம் அகற்றப்பட்டு முழுவதும் தமிழ்நாடு மின்வாரியம் ஏற்றுக்கொண்டுவிட்டது.இத்திட்டம் உற்பத்தியை 2013 க்கு பின்னர் தான் துவங்கவே வாய்ப்புள்ளது.

மேலும் பல தனியார் திட்டங்களும் 2013க்கு பின்னரே உற்பத்தியினை துவக்க முடியும் எனவே 2013க்கு பின்னர் நிறைய மின்சாரம் தமிழ்நாட்டில் இருக்கும் ,அதனை வாங்க அரசிடம் பணம் இருக்குமா என்பதே கேள்வி :-))

ஜோதிஜி said...

இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் எங்கே ஜிஎம்மார் 2,200 மெ,வாட் மின் உற்பத்தி நிலையம் செயல்ப்படுத்திக்கொண்டிருக்கிறது என்பதை அறிய தந்தால் உபயோகமாக இருக்கும்.

200 MW என்பது தவறுதலாக 2200 என்று வந்துள்ளது. மன்னிக்கவும்.

செயல்பாட்டுக்கு வரும் என்பது ஏட்டளவில் உள்ளது. ஆனால் நடைமுறை சாத்தியங்கள், அனுமதிகள் என்று இழுத்துக் கொண்டே செல்லும் வாய்ப்பு தான் அதிகம்.

உங்கள் கூடுதல் தகவல்கள் எனக்கும் புதிய தகவல்கள் தான் நன்றி.

மேலும் தனியார் உற்பத்தி நிறுவன அதிபர் புகாரி சொன்னது ஆணவத்தின் உச்சமாக என்பதாக எடுத்துக் கொள்ளவும். ஆனால் நீங்கள் செர்ன்னது எதார்த்தம். நீங்கள் சொல்வதில் வாய்ப்பு அதிகம். ஏற்றுக் கொள்கின்றேன்.

அது ஒரு கனாக் காலம் said...

ஒரு காலத்ல அரசாங்கம் தான் எல்லாத்தியம் கொடுத்தது ... தண்ணீர் ,மின்சாரம் , ரோடு ,ரோடு மேல பஸ் ...இன்னும் பல சமாசாரங்கள். குழாயில் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக மாறி , இப்போ சிறிதும் பெரிதுமாய் உள்ள பாட்டில்களில் நிறைய வருகிறது, இந்த மினரல் வாட்டர் கிராமங்களில் கூட வர தொடங்கி விட்டது. பேருந்து வண்டிகளும் ..கொஞ்சம் கொஞ்சமாக , கட்டபொம்பன், ஜீவா அது இதுன்னு...எல்லாம் நஷ்டத்தில் அதற்க்கு பதில் நிறைய தனியார் பஸ்கள் . நல்ல சாலை , வேலை செய்ய ஆட்கள் ரெடி ... ஆனால் போக்குவரத்து கழகத்தை நடத்த நாதியில்லை. ...அதே தான் மின்சாரத்தில் நடக்கிறது. நிறய காரணங்கள், உற்பத்தி குறைவு, நஷ்டம் , திருடு , ஊழல் , திறமையற்ற நிர்வாகம், ... எரிபொருள் பற்றாக்குறை ... இதுக்கு தீர்வு தான் என்ன , நம்ப தொழில் நுட்ப கல்லூரி மாணவர்கள் எல்லோரும் முனைந்தால் ஏதாவது நடக்கலாம்.... இப்போ எல்ல்லாம் ஒரு கலங்கலா இருக்கு , தெளிவு வரும் என்று நம்பிக்கை வைப்போம்.

ஜோதிஜி said...

நீங்க 10 பாகமாக பதிவு எழுதி இருப்பதை மறுக்கவில்லை, ஆனால் ஆங்காங்கே மொட்டையாக ,தொடர்பில்லாமல், முழுமையாக இல்லாமல் , தர்க்க ரீதியாக எப்படி எனப்பார்த்தால் வாய்ப்பில்லாதவைகளை அடுக்கி வைத்துள்ளது புரியும்.

ஈழம் தொடர் எழுதிய போதே பிறகு வந்து படித்தவர்கள் சொன்ன குற்றச்சாட்டும் இஃதே. நீங்கள் சொல்வது உண்மையும் கூட. இதில் சில பிரச்சனைகள் இருக்கிறது. சிலர் திடீரென்று உள்ளே வருவார்கள். சிலர் குறிப்பிட்ட தலைப்பு பார்த்து மட்டும் வந்து அந்த தலைப்பை மட்டும் படித்து விட்டு சென்று விடுவார்கள். முழுமையான தொடரை தொடர்ந்து வருபவர்கள் மிகச் சொற்பமே.

ஒவ்வொரு தலைப்பையும் தொடர் என்கிற ரீதியில் எழுதினாலும் அதுவொரு தனித் தலைப்பாக கருதிக் கொண்டு தான் எப்போதும் நான் எழுதிகின்றேன். புத்தகம் என்றால் இந்த பிழைக்கு வாய்ப்பு மிகக்குறைவு. என்னுடைய பார்வையில் உங்களைப் போன்று நுணுக்காமாக ஆர்வத்தோடு விசய மேய்ச்சலில் உள்ளவர்கள் மிகமிக குறைவு. படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக திண்டுக்கல் தனபாலன் போல துணுக்குகளைக் கொண்டு சற்று கதம்பமாக கட்டியுள்ளேன்.

மேலும் தொழில்முறை எழுத்தாளர் என்றால் இதே வேலையாக இருக்க முடியும். ஆனால் நம்ம பொழப்பு வேற தானே? இது போன்ற விசயங்களை வலையில் எழுத யாராவது ஒருவராவது வேண்டுமே?

பிழைகளை மன்னித்து ஏதாவது போட்டுக் கொடுங்க எசமான். (ச்சும்மா ஜாலிக்கு)

நோ டென்ஷன்.

விடுங்க அடுத்தடுத்து தேத்திடுவோம். கற்றுக் கொள்வதில் தப்பில்லை தானே. இப்பத்தானே முழுசா நாலு வருசம் முடிஞ்சுருக்கு. அடுத்தடுத்து மேலே வந்துருவோம். கவலைப்படாதீங்க வவ்வால்.

வவ்வால் said...

ஜோதிஜி,

நல்ல வேளை நீங்க டென்ஷன் ,ஆகாம சகஜமாக எடுத்துக்கொண்டீர்கள்,நன்றி!

தொழில்முறையாக எழுதவில்லை என்றீர்களே ,உண்மை தான், அதனால் தான் நாமும் குறைவாக எழுதுவது, தெரிந்தாலும் எழுத இயலாத நிலை, எழுதினால் மட்டும் என்ன நடந்த்திட போகுதுனும் ஒரு அலட்சியம் எனலாம்.

உண்மையில் தனியார்கள் பலர் இங்கே ஓடிவந்து முதலீடு செய்கிறார்களே அவர்கள் எல்லாம் அறியாமலே ஒரு டிராப்பில் மாட்டியிருக்கிறார்கள், திட்டம் செயல்பாட்டுக்கு வரும் போது "கடை விரித்தேன் கொள்வாரில்லை" என புலம்புவார்கள், மத்திய ,மாநில அரசை வாங்க சொல்லி கெஞ்சுவார்கள், கமிஷன் விளையாடும், அப்படியே கமிஷன் கொடுத்து வாங்க வைத்தாலும் முழுதும் விலையாகுமா என்பது "கேள்விக்குறி" எனவே உபரி மின்சாரத்தினை என்ன செய்வது என தெரியாமல் குறைவாக உற்பத்தி அதனால் ரிடர்ன் ஆன் இன்வெஸ்ட்மென்ட் குறைய நட்டம் என நிற்பார்கள்.

எனவே யார் முதலில் திட்டத்தினை முடித்து அரசுக்கு விற்று காசை அள்ளுவது என ஒரு ரேஸ் நடக்கும்!

என்ரான் போல மூடிக்கொண்டு போனாலும் போவார்கள், அப்போது நட்டம் இந்நிறுவனங்களுக்கு கடன் கொடுத்த வங்கிகளின் தலையில் விடியும்(கிங் ஃபிஷர் நட்டம் வந்தால் கடனை கட்ட மாட்டேன் என செய்வது போல)

எனவே தனியார் ஓடி வராங்களே ,எல்லாம் அம்போ என கவலைப்படுவதில்லை நான் எதிர்காலத்தில் என்ன ஆட்டம் நடக்குது என பார்ப்போமே :-))

ஆனால் இப்படி ஒரு ரிஸ்க் இருக்கு என தெரிந்தே எப்படி தனியார் முதலீடு செய்கிறார்கள் என்ற கேள்வி வரலாம், இதன் பின்னால் பங்கு சந்தை என்ற சூதாட்டம் இருக்கிறது, திட்டம் செயல்பாட்டுக்கு வருமுன்னரே பங்குகளை விற்று காசு எடுப்பார்கள், அதற்கு வாய்ப்புள்ளவர்களுக்கு பொருளாதார ரீதியாக நட்டம் வராது, எனவே பவர் செக்டார் பங்குகளை வாங்குபவர்கள் இப்படி புதிதாக முளைத்தவற்றின் பங்குகளை வாங்க கூடாது.

டாடா பவர் டிரேட் , கோஸ்டல் எனர்ஜியில் 70% வாங்கியிருப்பதும்,இப்படி பங்கு சந்தையை கணக்கில் வைத்தே, ஏன் எனில் டாட்டா முன்னரே பங்கு வணிகத்தில் உள்ள நிறுவனம், அதன் பவர் செக்டார் இன்வெஸ்ட்மெண்ட் கணக்கினை கூட்டி காட்டவே வாங்கியுள்ளது, ஆனால் அடிமாட்டு விலைக்கு 70% சத பங்குகளை வாங்கிவிட்டு பெரிய விலைக்கொடுத்ததாக கணக்கு காட்டியிருக்கும் :-))

ஜோதிஜி said...

ஆனால் போக்குவரத்து கழகத்தை நடத்த நாதியில்லை

ஒவ்வொரு ஆட்சியிலும் போக்குவரத்து துறைக்கு அமைச்சர்களாக இருந்தவர்கள் இன்று பெரிய தொழில் அதிபர்களாக மாறிப் போனார்கள்.

இந்த மினரல் வாட்டர் கிராமங்களில் கூட வர தொடங்கி விட்டது

நம் நிலத்தில் உள்ள தண்ணீரை பெப்சி கோக் என்று சாயம் கலந்து விற்க நாமும் வெட்கமின்றி அரைலிட்டருக்கு 35 ரூபாய்க்கு மேலே கொடுத்து வாங்கிக் குடிக்கின்றோம். முறையான தண்ணீர் ஆதாரம் அழிந்துபோக இன்று ஒரு லிட்டர் 12 ரூபாய்க்கு வாங்கிக் குடிப்பதை பெருமையாக கருதும் சமூக வளர்ச்சியின் தாக்கம் இது. இதைத்தான் அலுவாலியா தண்ணீர் என்பதை தனியார் மூலம் தான் மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற அற்புத எதிர்கால கனவை சொல்லியுள்ளார்.

உற்பத்தி குறைவு, நஷ்டம் , திருடு , ஊழல் , திறமையற்ற நிர்வாகம், ... எரிபொருள் பற்றாக்குறை ... இதுக்கு தீர்வு தான் என்ன

பொதுத்துறை நிறுவனங்கள் வைத்திருக்கும் பணத்தை தொழில் துறையில் போடாவிட்டால் அந்த பணத்தை ரிசர்வ் வங்கியே எடுத்துக் கொள்ளும். சில நாட்களுக்கு முன்பு நம்முடைய நிதியமைச்சர் ப சிதம்பரம் சொன்ன கருத்து. ஒரு வேளை பணம் புடுங்கிக் கொண்டு போய்விட்டால்? நமக்கு தான் ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவதுமாதிரி தானே. நரம்பு மண்டலத்தையே செயல் இழக்கச் செய்த்து விட்டு உடம்பு நன்றாக இல்லையே என்று நாம் வேடிக்கை பார்க்கும் சூழ்நிலையில் நம்முடைய ஜனநாயகம் பலருக்கும் இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கு என்று தங்களை அர்ப்பணித்து பாடு பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் சொன்ன விடிவு காலம் விரைவில் தெரியும். ஏழைகள் அப்போது யாரும் இருக்க மாட்டார்கள். உயிருடன் இருந்தால் தானே பிரச்சனை.

ஜோதிஜி said...

இந்த பங்கு சந்தை விபரங்கள் சில இடங்களில் குறிப்பிட்டுள்ளேன்.

ரிலையன்ஸ் பவர் பங்கு சந்தையில் வந்த போது அள்ளிக் குவித்தார்கள். சாதாரண மக்கள் கூட ஆசைப்பட்டு வாங்கினார்கள். ஆனார் தேத்திய தொகையை சாதாரண வட்டி போட்டு கொடுக்க நினைத்தாலும் வரக்கூடிய இறுதி லாபத்தை அந்த பங்குகள் கொடுக்கவில்லை. யார் கேட்க முடியும்? கதை முடிந்தே போய்விட்டது.

இந்திய மக்களின் மனோபாவம் விசித்திரமானது.

இவர்களின் தன்மையை அத்தனை சீக்கிரம் மாற்றி விட முடியாது. ஆசைப்படுவார்கள். ஆனால் தொடர்ந்து ஆசைப்பட மாட்டார்கள். மேலை நாட்டு நாகரிகத்தில் அள்ளிக்குவித்த வால்மார்ட் இங்கே ஜெயிக்குமா என்று என்னைக் கேட்டால் ரொம்ப நாளைக்கு நீடிக்காது என்று தான் சொல்வேன்

ஆசைப்பட்டவர்கள் (அலங்காரங்களைக் கண்டு) இறுதியில் அவஸ்த்தைப்படுவார்கள். இறுக்கிக் கட்டிக் கொண்டு வாழ்பவர்கள் இன்னும் கொஞ்சம் நாளைக்கு தாக்குபிடித்து வாழ்க்கையை முடித்து விட்டு சென்று விடுவார்கள்.

என்னவொன்று ஒவ்வொரு சமயத்திலும் அரசாங்கத்தில்இருப்பவர்கள் பெறக்கூடிய சலுகையின் காரணமாக தனியார்கள் எப்போதும் தப்பித்து அரசாங்கத்தின் வராக்கடன் என்பதை அதிகப்படுத்தி ஒரு குறிப்பிட்ட காலத்தில்

என்ன நடக்கும் என்பது சொல்லவும் வேண்டுமா?

ஜோதிஜி said...

எழுதினால் மட்டும் என்ன நடந்த்திட போகுதுனும் ஒரு அலட்சியம் எனலாம்.

இந்த மனோபாவம் தவறு. பகிர்தல் என்பது குடும்பம் முதல் வலை வரைக்கும் மிக அவசியமானது. மாற்றம் வேண்டும் என்று ஆசைப்படுவர்கள் அத்தனை பேர்களும் அவரவருக்கு தெரிந்த வகையில் இந்த உலகில் ஏதோவொரு மூலையில் தங்களால் முடிந்த தங்கள் சக்திக்கு உட்பட்டு ஏதோ ஒன்றை செய்து கொண்டே தான் இருக்கிறார்கள். என் நண்பர்கள் பலர் களத்தில் நின்று போராடுகின்றார்கள். நான் எழுத்தில் நிற்கின்றேன்.

சரியோ தவறோ விசயங்கள் அத்தனையும் பகிரப்பட வேண்டும் என்பதை உறுதியாக இருக்கின்றேன். வெட்டி அரட்டையில் செலவழிக்கும் ஒவ்வொரு தருணத்தையும் நான் எழுத்தாக மாற்ற வேண்டும் என்றே விரும்புகின்றேன்.

நான் எழுதியதால்தானே என் குறைகளை நான் திருத்திக் கொள்ள வேண்டியதை உங்களால் சொல்ல முடிகின்றது. எனக்கே நான் எழுதிய பிறகு தான் இதில் உள்ள விசயங்கள் முழுமையாக புரிந்தது. என் எதிர்காலம் குறித்து என்னால் தெளிவாக யோசிக்க முடிகின்றது. எழுத்து மிகப் பெரிய ஆயுதம். பலன் உடனே கிடைக்கும் என்றால் அது சாத்தியமில்லை.

அடுத்த பதிவில் என் அவதானிப்பு உங்களுக்கு புரியும். களத்தை பொறுத்து வாள் சுழற்ற கற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் காற்றோடு தான் சண்டை போட வேண்டியிருக்கும்.

Anonymous said...

gurusamay fraud=susi emu form

ஜோதிஜி said...

http://deviyar-illam.blogspot.in/2012/08/blog-post_27.html

Anonymous said...

தாயகம் திரும்பி தொழில் தொடங்க வேண்டும் என்ற நினைப்பில் கடந்த மூன்று ஆண்டுகளாய் இருக்கிறேன்...

உங்கள் தொடரை வாசிக்கையில் பேசாமால் எனக்கும் நம்மூருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாதுன்னு சொல்லி

"இனி இந்தியா மூளையை உபயோகிக்காதவர்களுக்கு மட்டுமே.."

என்ற தலைப்பில் கொஞ்ச நாட்களாய் ட்ராப்டில்...நிறைய பேரை காயப்படுத்தும் என்பதற்காக ஆறப்போட்டுள்ள என் பதிவை வெளியிட்டுவிட்டு கண்ணுக்கெட்டா தொலைவில் தொலைந்து போகலாம் போல இருக்கு நண்பரே...



Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

Knowing you...Not surprised that you still have the drive to write on issues like this...

Hats off to you bro..

ஜோதிஜி said...

நன்றி. நானும் பல மாநிலங்கள் நாடுகள் என்னளவில் சுற்றியிருக்கின்றேன். ஆனால் வாழ்வதற்கான சிறந்த இடம் தமிழ்நாடு போல வேறு எதுவும் எனக்குத் தெரியவில்லை. உங்கள் ஆதங்கம் புரிகின்றது. ஆனால் மாற்று ஏற்பாடுகள் நிறைய உள்ளது நண்பரே.

வாழ்வில் சம்பாரிப்பது எத்தனை முக்கியமோ நமது வாழ்க்கை அமைதியாக விரும்பும்படி வாழ்வதும் முக்கியம் தானே.

ஜோதிஜி said...

மாற்றுக் கருத்துக்கள் எப்போதும் தேவை. சீக்கிரம் வெளியிடுங்க. படிக்கலாம்.

indrayavanam.blogspot.com said...

தகவல்களை திரட்டி பதிவிட்டதற்கு நன்றி....
பயமாத்தான் இருக்கு....

ஜோதிஜி said...

பயம் கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா
முகத்தில் உமிந்து விடு பாப்பா.

ஒரு வேளை பாரதி பாப்பாவுக்கு மட்டும் சொல்லியிருப்பாரோ?

Anonymous said...

Amen.

minnal nagaraj said...

how did u coollect all this informations remarkable pls continue with informations and detiails