Thursday, January 12, 2017

திருமாவளவனும் கிருஷ்ணசாமியும் ஒன்று சேர்ந்து......


இந்நூல் டாலர் நகரத்தைத் தொடர்ந்து ஜோதிகணேசன் அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் கட்டுரை தொகுப்பாக வெளிவந்துள்ளது. டாலர் நகரத்தைப் போலவே இந்நூலும் ஒரு தன் வரலாறு நூலாக ஆரம்பித்தாலும் மெல்ல மெல்லத் தமிழ் சமூகத்தின் வரலாற்றுப்பதிவாகப் பரிணமிக்கிறது. அந்தவிதத்தில் தமிழுக்கு அவர் பெரும் தொண்டு செய்திருக்கிறார். தமிழால் பயனடைந்த நான் அதற்கு நன்றி சொல்ல கடன் பட்டிருக்கிறேன். 

தன்னுடைய மூன்று மகள்களின் பெயரின் விகுதியை தன்னுடைய வலைப்பூவின் (தேவியர் இல்லம்) முகவரியாக வைத்துக் கொண்டு அதில் எழுதிவரும் கட்டுரைகளின் தொகுப்பான இந்நூலைப் படிக்கும் போது ஜோதிகணேசனின் எழுத்தில் (அதாவது அவரின் வாழ்க்கையில்) அவரது மகள்கள் மட்டுமில்லாமல், அம்மாவும், மனைவியும் காரணிகளாக இருப்பதை உணரமுடிகிறது. இவரது அப்பாவும் அவர் மூலம் உண்டான தினமணியின் கட்டுரைகளை வாசிக்கும் பழக்கமும் இவரது எழுத்துக்குப் பெரும் பங்காற்றியிருக்கிறது. இந்நூலுக்காக இவர்களுக்கும் நன்றி சொல்ல நான்(ம்) கடன் பட்டிருக்கிறேன்(றோம்). 

தன் வரலாறு நூலாகத் தன்னைச் சுற்றியுள்ளவர்களால் (மற்றும் இருந்தவர்களால்) தனக்கேற்பட்ட அனுபவங்களையும், அவர்களின் வாழ்க்கையையும் ஒரு காணொளி கேமரா போலப் பதிவு செய்திருக்கிற அதே வேளையில் தகுந்த சமயங்களில் அறச் சீற்றத்துடன் தன்னுடைய விமர்சனத்தையும் பதிவு செய்திருக்கிறார். குறிப்பாகச் சாதி, மத, இன உணர்வுகளை நேர்மையாக விமர்சிக்கும் போது தன் வரலாறு நூலாக இல்லாமல் சமூகச் சிந்தனைகளின் பதிவாக மாறிவிடுகிறது. "திருமாவளவனும் கிருஷ்ணசாமியும் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டமைப்பு உருவாக்கலாமே?" என்ற கேள்வியை எழுப்பி அவ்வாறு செய்தால் "இருவரின் தலையும் அவர்கள் உடம்பில் இருக்காது" என்கிறார். "எனது திருப்பூர் நிறுவன அனுபவங்களில் இங்குள்ள எந்த நிறுவனமும் இஸ்லாமியர்களை ஏற்றுக் கொள்வதில்லை." என்று பலரும் எழுதத் தயங்கும் யதார்த்தத்தைப் பதிவு செய்கிறார். 

அவர் தன்னுடைய வாழ்க்கையைக் கூர்ந்து அவதானித்து நுணுக்கமான விஷயங்களை எழுதியிருப்பதைப் படிக்கும் போது வாசகனையும் தனக்கேற்பட்ட ஒத்த அனுபவங்களை அசை போடவைக்கிறார். எடுத்துக்காட்டாக, தன்னுடைய மகள்கள் காலையில் குளிப்பதற்கு போடும் சண்டையைப் பற்றியும், இரவில் பேச்சு முடிவதற்குள் கை நீண்டு விடுவதையும் படிக்கும் போது எங்கள் வீட்டில் பையன்களிருவரும் இதையே செய்வதை எண்ணிப்பார்க்கும் போதும், "இஸ்லாமியர்களுக்கு ஏன் வீடு வாடகைக்குக் கொடுக்க மாட்டேன் என்கிறீர்கள் என்று கேட்டால், அவர்கள் வேறு நாம் வேறு - என்று என் பெற்றோர் சொன்னதை எண்ணிப்பார்க்கும் போதும், தினமணியின் கட்டுரைகள் என்னைச் செதுக்கியதை எண்ணிப்பார்க்கும் போதும், இந்நூல் ஜோதிகணேசனின் வாழ்க்கையை மட்டும் பதிவு செய்யவில்லை என்று உறுதியாகச் சொல்லலாம். 

குறிப்பாக "தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கின்றார்" என்ற கட்டுரையைப் படிக்கும் போது இதையெல்லாம் நான் ஜோதிகணேசனிடம் சொல்லவேயில்லையே, எப்படி நம் வீட்டில் நடந்ததைப் பார்த்த மாதிரி எழுதியிருக்கிறாரே என்று ஆச்சரியப்படவைக்கிறார். இது மாதிரி படிக்கும் ஒவ்வொருவருக்கும் பல ஆச்சரியங்களை இந்நூல் தரும்.

மோகன்
அமெரிக்கா
https://www.facebook.com/udoitmohan?fref=ts



பழைய குப்பைகள் (மின் நூல்)



இதுவரை வெளியிட்டுள்ள மின் நூல்கள்





6 comments:

எஸ் சம்பத் said...

இது தானய்யா உமது சிறப்பே. திருமாவளவனும், கிருஷ்ணசாமியும் சேர்ந்து.. என தலைப்பு, உடன் ஒரு கரகாட்ட புகைப்படம்..

அடப்பாவி, மார்க்கண்டேய கட்ஜூ மற்றும் சுப்பிரமணியசாமி மாதிரி எதையாவது சொல்லி விமர்சனத்தில மாட்டிக்கப்போறாரே என்ற ஆர்வத்தோடு உடனே படிக்க வைக்கிறது தலைப்பும், படமும். இறுதியில் மற்றொரு நண்பரின் அருமையான மதிப்புரை என அறியும் போது புன்னகை தோன்றுகிறது.

தொடரட்டும் அதிரடியான தலைப்புகளில் பல செய்திகள். வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

"தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கின்றார்" என்பது 100% உண்மை... இதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை...



ஆம்... நாம் நினைக்காத சிந்தனைக்கு அப்பாற்பட்டு...!


'பரிவை' சே.குமார் said...

அருமையானதொரு பார்வை...
ரொம்பச் சுருக்கமாகச் சொல்லியிருந்தாலும் இது ரத்தினச் சுருக்கம்...
தனபாலன் அண்ணன் சொன்னது போல் நம்மிடம் இருந்து சற்றே அல்ல அதிகமாகவே விலகி தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார் என்பதை அவரின் சிந்தையில் உதித்த கட்டுரைகள் சொல்லும்...
அருமை...
வாழ்த்துக்கள் மோகன் சார்.

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களின் வெற்றி எழுத்துக்கள் உலகை வலம் வரட்டும் ஐயா

Rathnavel Natarajan said...

அருமை. நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

தலைப்பைப் பார்த்து ஏதோ என்று நினைத்து உள்ளே வந்தால் படம் முதலில் கண்ணில் பட...சரி தலைப்பில் உள்ளவர்களுக்கும் படத்திற்கும் ஏதோ தொடர்பு என்று நினைத்து மேலே போனால் தங்களின் எழுத்துகளைப் பற்றி....சரி அதைத் தலைப்பில் உள்ளவர்களின் கருத்தோ என்று நினைத்தால் எழுதியவர் வேறு!! அவர் சொல்லியிருப்பது போல உங்கள் எழுத்து வித்தியாசமான பரிமாணத்தில் பாங்குற நடை போடுகிறது. தங்களின் படைப்புகள் மேலும் மேலும் வெற்றி பெற்றிட வாழ்த்துக்கள். மிக அழகாக எழுதிய திரு மோகன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்!