Saturday, January 29, 2011

சதி சாதி தீ

இப்போது வலைதளமும், இணையமும் நல்ல நோக்கத்திற்காக பயன்பட்டுக் கொண்டிருக்கிறது.. கணினியை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தற்போது இலங்கை கடற்படையினரால் சாகடிக்கப்பட்டுக் கொண்டுருக்கும் தமிழக மீனவர்களின் உரிமை குறித்து குரல் எழுப்புகின்றனர். மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கம், இந்திய வெளியுறவுத்துறை அதன் கொள்கை போன்றவற்றை அந்தப்பக்கம் தூக்கி எறிந்துவிடுங்கள்.  வேறொரு சமயத்தில் விலாவாரியாக பேசுவோம்.  ஆனால் மண்டபம் முதல் பாண்டிச்சேரி எல்லை வரைக்கும் இருக்கும் மீனவர்களுக்காக ஒரு கூட்டமைப்பு இருக்குமே?  அவர்கள் எனன ஆனார்கள்? இதற்காகத் தானே சீமான் குரல் எழுப்பினார்?  வேகமாக இந்திய இறையாண்மைச் சட்டம் பாய்ந்ததே?  குறைந்தபட்சம் மீனவர்கள் கூட இது குறித்து வாய்திறப்பார் யாருமில்லை. காரணம் என்ன?


சீமான் சொல்வது போல தமிழர்கள் கட்சித் தமிழனாக சாதி தமிழனாக பிரிந்து இருக்கும் வரையிலும் எந்த காலத்திலும் விமோசனம் என்பதே இல்லை.  சுண்டைக்காய் நாடு இப்போது மட்டுமல்ல எதிர்காலத்திலும் கூட மண்டப முகாமிற்கு வந்து மிரட்டிவிட்டு கூடச் செல்வார்கள். நாமும் டவிட்டர்களில் பொங்கித் தீர்த்துவிட்டு தூங்கப் போய்விட வேண்டியது தான்,  இதே மீனவ சமூகத்தில் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவம் அதிலும் உட்பிரிவுகள் என்று தொடர்ந்து போய்க் கொண்டேயிருக்க எப்படி இவர்களால் ஒன்று சேரமுடியும்.?

ஈழத்தில் கைது செய்யப்பட்டு கொழும்பு நாலாவது மாடிக்கு கொண்டு செல்லப்பட்ட அங்கையர்கண்ணி, திருமலையிடம் ஈழ புலனாய்வு அதிகாரிகள் எப்படி கொக்கரித்தார்கள் தெரியுமா?  " உங்க சீமானால் தமிழ்நாட்டில் ஒரு தொகுதியாவது ஜெயித்து வரமுடியுமா?" என்றார்களாம். நம்மைப் பற்றி தொடக்கத்தில் ஆங்கிலேயர்கள் சரியாக புரிந்து வைத்திருந்தார்கள்.  இப்போது ஈழத்தில் உள்ள ஆட்சியாளர்கள் பலமடங்கு தெளிவாக புரிந்து வைத்திருக்கின்றனர். ..

நாம் இப்போது இந்தியாவை ஆட்சி புரிந்த ஆங்கிலேயர்களைப் பற்றி பேசினாலும் காஷ்மீர் முதல் கன்யாகுமாரி வரைக்கும் உள்ள இந்த ஜாதிகளைப் பற்றி நாம் பேசித்தான் ஆகவேண்டும்.  இதுவே தான் இன்று வரையிலும் ஆட்சியாளர்களின் அரசியல் கணக்குகளுக்கு உதவியாய் இருக்கிறது.  சக மனிதனுடன் சேர்ந்து வாழ முடியாமல் ஒவ்வொருவர் மனதிலும் வன்மம், குரோதம், பொறாமை போன்ற உணர்ச்சிகளுடன் பிளவுபட்டு நிற்க நம் முதுகின் மேல் எவர் வேண்டுமானலும் குதிரை ஏறத்தானே செய்வார்கள்.

மீனவ சமூகம் என்றாலும் அதிலும் பல பிரிவுகள் உண்டு. இன்று அரசாங்கம் வாரி வழங்க வசதி வாய்ப்புகளை அனுபவித்துக் கொண்டுருக்கும் தாழ்த்தப்பட்டவர்கள் என்றாலும் அதற்குள்ளும் கிளைநதிகள் உண்டு. பள்ளர் என்றால் பறையரை பிடிக்காது. இவர்கள் இருவருக்கும் அருந்ததியரை பிடிக்காது. ஆனால் தொடக்கத்தில் மரமேறி அல்லது சாணார் என்று அழைக்கப்பட்டவர்களின் இன்றைய நிலைமை ஆச்சரியப்படக்கூடியதே. இன்று நாடார் என்று அழைக்கப்பட்டு பொருளாதாரரீதியாக முன்னேறி இன்று சமூகத்தில் சரிசமமாக உயர்ந்து உள்ளனர். அதுவும் ஜாதிக் கலவரத்திற்கு பெயர் போன இந்த இராமநாதபுரம் மாவட்டம் தான் இன்றைய ஜாதிக்கட்சி தலைவர்களுக்கு வழிகாட்டி. உங்கள் வயது நாற்பதுக்குள் இருந்தால் முதுகுளத்தூர் கலவரம், உஞ்சனை கலவரம் போன்றவற்றை கேட்டு இருக்கக்கூடும். குறைந்தபட்சம் அதன் தாக்கத்தை உணர்ந்திருக்க வாய்ப்புண்டு.

இந்து சமூதாயத்தின் அடிப்படையே சாதியாகும்.. 1918 ஆம் ஆண்டு கணக்குப்படி இந்தியாவில் 5106 சாதிகள் இருந்தது. அதுவே தான் இன்று நகர்ந்து நகர்ந்து "சாதிவாரியாக பட்டியல் எடுத்தால் தான் ஆச்சு" என்று நம் அரசியல் வியாதிகள் அடம் பிடிக்கும் வரைக்கும் வளர்ந்துள்ளது. ஒருவர் மதம் மாறினாலும் அவர்களின் மூலக்கூறு மட்டும் மாறுவதில்லை. இந்துவில் தான் கொடுமை என்றால் தற்போது முஸ்லீம், கிறிஸ்துவம் வரைக்கும் பிசாசு போலவே தொடர்ந்து வந்து தலித் கிறிஸ்துவர்கள் என்பது வரைக்கும் முடிவில்லாமல் போய்க் கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் எவரால் ஆதாயமோ அவர்களுக்கு ஒரு தனி ஒதுக்கீடு.  அதற்கு மேலும் ஒரு உள் ஒதுக்கீடு. ஆக மொத்தத்தில் உருவாக் வேண்டிய பிரிவினைகளை ஆட்சியாளர்களும் உருவாக்குகிறார்கள். மக்களும் அதையே தான் விரும்புகிறார்கள்.

பின்னால் வரப்போகும் சம்பவங்களில் நாம் பார்க்கவேண்டிய இந்த சாதி மூலக்கூற்றை இப்போது பஞ்சாயத்தில் நிறுத்தி ஒரு தீர்ப்பை வாங்கிவிடுவோம்.  நான் இந்து என்று சொல்பவர்களில் எத்தனை பேர்களுக்கு இதன் முழுமையான அர்த்தம் தெரியும்? முஸ்லீம் என்றால் ஒரே வார்த்தையில் அல்லா என்றும் கிறிஸ்துவர் ஏசு என்றும் நகர்ந்துவிட முடியும். ஆனால் இந்து மதத்திற்கு?


தொடக்கத்தில் இந்த சாதியை தெய்வீகமானது என்பதாக பரப்பப்பட்டது. அதற்கு பின்னால் இருந்தது முழுக்க முழுக்க திட்டமிடப்பட்ட அயோக்கித்தனம்.   ஹிந்துத்துவம் என்பது இங்கே வாழ்ந்து கொண்டுருந்த பூர்வகுடிகளான திராவிட மக்களிடம் இருந்து பிடுங்கப்பட்டது.  இந்தோ ஐரோப்பாவிலிருந்து வந்த பெருங் கூட்டத்தினரால் இங்கு கொண்டு வரப்பட்டது.  இந்த கூட்டத்தில் உள்ள ஞானிகள்,,முனிவர்கள்,சந்நியாசிகள் போன்றவர்கள் தங்களது வேதங்களை சிந்து நதிக்கரையில் இயற்றினார்கள்.  இது கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. முகமது நபியின் இஸ்லாம் என்கிற நம்பிக்கை கிறிஸ்துவத்திற்கு பின்னால் வந்த ஒன்றாகும்.

இந்திய ஜனத்தொகையில் 85 சதவிகிதம் இந்துக்கள். ஆனால் இந்துக்கள் நம்பும் வேதாந்தம் என்பது வேதங்களைப் பற்றிய அறிவு, ஆராய்ச்சி, விரிவாக்கம், உணர்தல் போன்றவற்றை ஒவ்வொரு இந்துக்களுமே அறிந்து இருப்பார்களா என்பது ட்ரில்லியன் டாலர் கேள்வி?

மொத்தத்தில் வேதம் என்பதன் தொடக்கம் முடிவு எவருக்குமே தெரியாது.  இது குறிப்பிட்ட மக்களின் ஆதிக்கத்தில் வாழையடி வாழையாக கொண்டு வரப்பட்டது.  குரு சிஷ்யன் என்ற போர்வையில், ஏடுகளில், பேச்சில், மந்திரம் போலவே இதன் ரகஸ்யம் காக்கப்பட்டது.  தெய்வத்திடம் ஒவ்வொருவரும் ஏகாந்த சிந்தனைகளில் உரையாடி உருவாக்கப்பட்ட இந்த வேதத்திற்கும் சாமன்ய மக்களின் வாழ்க்கை முறைக்கும் வெகு தூரம்.  இதுவே தான் இன்று ஒவ்வொரு மனிதனையும் ஒன்று சேரவிடாமல் வெகு தூரமாக பிரித்து வைத்தும் உள்ளது. தொடக்கத்தில் பலவிதமான நம்பிக்கையை மக்களிடம் விதைத்தார்கள்.  இதனையே உண்மையென்று நம்பிக்கொண்டு அடித்துக் கொண்டு இன்றுவரையிலும் செத்துக் கொணடும் இருக்கிறார்கள்..

நாம் பள்ளிக்கூட பாடங்களில் இந்து மதத்தில் நான்கு வேதங்கள் உள்ளது என்று படித்துருப்போம். ஆனால் அந்த நான்கு வேதங்கள் எதைப்பற்றி சொல்லியிருக்கிறது என்பதையும் பார்த்துவிட்டு நகர்ந்துவிடலாம்.

ரிக் வேதம் என்பது உலகத்தைப்பற்றிய சூழ்நிலைகள், இயற்கை, நம்மைச் சுற்றியுள்ள விசயங்களைப்பற்றி பேசுவது

யஜுர் வேதம் சடங்குகள்,பலிகள்,வேள்விகள் இவற்றை செய்யும் முறை. இதில் உள்ள மந்திரங்களைப் பற்றி விரிவாக விளக்குவது.

சாமவேதம் சங்கீதம், பாடும் முறை, பயிலும் முறை, அடிப்படை விசயங்கள்

அதர்வண வேதம் மந்திரங்கள், சூன்யம், தந்திரவேலைகள், ஏவல் போன்றவற்றை பேசுவது.

இந்த நான்கிலும் கிளைநதிகள் உண்டு. இந்த ஒவ்வொன்றிலும் மந்திர சம்ஹிதை, பிரமாணம், ஆரண்யகா, உபநிஷித் என்று நான்காக பிரிகின்றது.

ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட ரிஷியினால், ஞானிகளால் உருவாக்கப்பட்டது. அவர் தன்னுடைய சீடர்களுக்கு மட்டும் சொல்லிக் கொடுக்க பயின்ற ஒவ்வொருவரும் இதை மக்களிடம் கொண்டு வந்து சேர்த்தார்கள்.

இதிலிருந்து தொடங்கியது தான் பிரும்மாவின் தலையிலிருந்து தோன்றியவர்கள் பிராமணர்கள், தோள் பட்டையிலிருந்து உருவானவர்கள் சத்திரியர்கள் என்று கூறப்படும் ஆட்சியாளர்கள் மற்றும் படைவீரர்கள். தொடையிலிருந்து வந்தவர்கள் சூத்திரர்கள் என்று சொல்லப்படும் தொழிலாளகள், கைவினைஞர்கள்.  பாதங்களில் மற்றும் பாதங்களின் அடியிலிருந்து  தோன்றியவர்கள் பஞ்சமர்கள்.

இந்த பிரிவுகளில் இருந்து தோன்றியது தான் இன்று நாம் பார்க்கும் கணக்குவழக்கற்ற ஜாதிகள். ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்து நான் அவனைவிட உயர்ந்தவன், இவன் என்னை விட தாழ்ந்தவன் என்று அவரவர் நோக்கப்படி கான்சர் கிருமிப் போல பல்கி பெருகிவிட்டது.

இந்த இடத்தில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இதில் முதல் இடத்தில் வருபவர்கள் பிராமணர்கள் என்று ஒரு சொல்லில் முடித்துவிட்டார்கள்.  ஆனால் இந்த பிராமணர்கள் இந்தியாவில் எத்தனை விதமாக உள்ளனர் தெரியுமா?

பிராமணன் என்றால் நீ எந்த பிராமணன்? ஜலபுஷ்பம் என்று கூறி மீன் சாப்பிடும் வங்காளி பிராமணனா? காலில் shoe போட்டுக் கொண்டு கோட்டு சட்டையுடன் பூசை செய்கிற கங்கோத்திரி பிராமணனா? கையில் உருளை போன்ற ஒன்றை வைத்துக் கொண்டு அதைத் சுழற்றி பூசை செய்யும் பூடான் பிராமணனா? கேரளத்து நம்பூதிரியா? ஆந்திர சாஸ்திரியா? ராவ்ஜீயா? சதுர்வேதியா? தமிழ்நாட்டு பிராமணரா? அதிலும் அய்யரா? அய்யங்காரா?

இதுவே செட்டியார் என்ற மூல சொல்லில் இருந்து பல கிளைநதிகள் பிரிகின்றது. இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள தேவர்கள் என்றால் இன்று முக்குலத்தோர் என்று அழைக்கப்படுகிறது. அதிலும் கள்ளர், மறவர், அகமுடையர் என்று பிரிகின்றது.  கள்ளர் சாதிக்குள் பல பிரிவுகள் உண்டு. இதைப்போலவே இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஜாதிக்குள் ஏராளமான பிரிவுகள்.  அந்த பிரிவுகளுக்குள் கூட வர்ணம், கோத்திரம் போன்ற சொல்லில் இன்னும் கூட தனித்தனியாக பிரிகின்றது.

இது தவிர ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு சாதி.  பல்லாக்குகளைச் செய்தவன் பல்கிவாலா. இனிப்புகளைச் செய்தவன் மிட்டாய்வாலா. பல்லாக்கை தூக்குபவன் போயி என்கிற கீழ் சாதி.  ஒவ்வொரு சாதிக்குள் நுணுக்கமான வரையறை உண்டு இரும்பை உருக்குபவன் ஒரு சாதி. இரும்பைக் கொண்டு பொருள்களைச் செய்பவன் வேறொரு சாதி.  அந்த சாதியில் பிறந்தவன் அடுத்த சாதி மக்களை திருமணம் செய்யக்கூடாது. கடைசி வரைக்கும் ஒரு எல்லையை விட்டு தாண்ட முடியாத அளவிற்கு மிகத் தந்திரமாக உருவாக்கப்பட்ட வலைபின்னல். விரித்தவர்கள் போய் விட்டார்கள்.  அதிலிருந்து விடுபட மனமில்லாமல் நாம் மட்டும் உழன்று கொண்டு இருக்கிறோம்.

இந்து மத வேதங்களை உருவாக்கிய முனிவர்களைப் பற்றி நாம் பேசிக் கொண்டு போனால் நமக்கு முனி பிடித்துவிடும் அளவிற்கு தலை சுத்திவிடும். ஆனால் மொத்த விசயத்தையும் ஒரு குடுவைக்குள் அடக்கிவிடலாம்.

" உலகில் நீ காணும் அத்தனையும் மாயை. ஆத்மா என்பது பிரம்மம். இவற்றை புரிந்து கொள்ள மனிதனால் முடியாது. உலகில் உள்ள அத்தனை பந்தங்களையும் துறக்கவேண்டும். உன்னுடைய பற்றுதல் அத்தனையையும் துறந்த பிறகே உனக்கு மோட்சம் கிடைக்கும். குணம், குணக்கேடு, எல்லாவற்றையும் அறிய வேண்டும் போன்ற எண்ணத்தை விட்ட பிறகு எஞ்சி நிற்பது எதுவோ அதுவே தான் ஆண்டவன்."

இப்போது புரியுமே?

இந்திய வரலாற்றில் ஞானிகளும் ரிஷிகளும் தோன்ற மேலைநாட்டில் விஞ்ஞானிகளும் சமூக சீர்சிருத்தவாதிகளும் தோன்றிய கதையை ஓரளவுக்கு உணர்ந்து கொள்ள முடியும் தானே? மக்கள் ஒருபுறம் அவரவர் சாதிகளை கெட்டியாக பிடித்துக் கொண்டு தங்களுக்குள் தாங்களே பிளவு பட்டு நின்றார்கள். ஆண்டு கொண்டிருந்த மன்னர்கள், சுல்தான்கள், நவாபுகள், பாளையக்காரர்கள், மிராசுகள் போன்றோர்கள் அடுத்தவனை எப்படி அழிக்கலாம் என்று மறுபுறம் யோசிக்க உள்ளே வந்த ஆங்கிலேயர்களுக்கு எல்லாவிதங்களிலும் வாய்ப்புகள் தானாகவே கனிந்து நின்றது.

இது தான் ஆங்கிலேயர்களுக்கு இம்மாம் பெரிய அகண்ட பாரத நாட்டை ஆள்வதற்கு பல விதங்களிலும் உதவி செய்தது.

36 comments:

vinthaimanithan said...

இருட்டறையில் உள்ளதடா உலகம்- சாதி
இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே!

ஹேமா said...

தமிழனுக்குள் ஒற்றுமை இல்லையென்பதை உலகநாடுகளையே புரிய வைத்திருக்கிறோம் இப்போது.அவ்வளவு ந(வ)ல்லவர்கள் நாங்கள் !

http://thavaru.blogspot.com/ said...

எங்கேயோ எப்பொழுதோ தொடங்கியது இன்றளவும் இப்பொழுது உள்ள அரசியல்வாதிகளால் நிலை நிறுத்தப்பட்டுவிட்டது அன்பின் ஜோதிஜி.

சுயமாய் சிந்திக்காத மக்கள் இருக்கும் வரை ஒவ்வொரு பிரிவினருக்கும் தலைவர்கள் தோன்றி கொண்டே இருப்பார்கள்.

நம்மளவில் சரிப்பண்ணி கொண்டே செல்ல வேண்டியிருக்க பெரியமாற்றம் ஏமாற்றமே அன்பின் ஜோதிஜி.

Unknown said...

அருமையான அலசல் சார், ஜாதிக்குள் பிரிவுபட்டு கிடக்கும் வரை தேசிய ஒற்றுமை என்பது வெறும் கனவு மட்டும்தான், நாமும் வழக்கம் போல வெறும் பகல் கனவினை காண்போம், நிஜம் வேறாகத்தான் இருக்கும் :-(

தமிழ்மலர் said...

நல்ல அலசல்....

ஊரான் said...

"இதிலிருந்து தொடங்கியது தான் பிரும்மாவின் தலையிலிருந்து தோன்றியவர்கள் பிராமணர்கள், தோள் பட்டையிலிருந்து உருவானவர்கள் சத்திரியர்கள் என்று கூறப்படும் ஆட்சியாளர்கள் மற்றும் படைவீரர்கள். தொடையிலிருந்து வந்தவர்கள் சூத்திரர்கள் என்று சொல்லப்படும் தொழிலாளகள், கைவினைஞர்கள். பாதங்களில் மற்றும் பாதங்களின் அடியிலிருந்து தோன்றியவர்கள் பஞ்சமர்கள்."

பார்ப்பான,ஷத்திரிய,வைசிய,சூத்திரப் பிரிவுகளே நால் வர்ணத்தில் அடங்கும். பஞ்சமர்கள் அதற்க்கும் வெளியே. சரி பார்க்கவும்.

மற்றபடி நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்!

ஜனநாயக உணர்வுக்கு சாதிய உணர்வு குறுக்கே நிற்கிறது. சாதியம் ஒழியாமல் ஜனநாயக உணர்வு வராது. ஜனநாயக உணர்வு இருந்தால் யார் ஒடுக்கப்பட்டாலும் போராடத் தூண்டும். இதை அய்ரோப்பிய நாடுகளில் பார்க்க முடியும்.

தமிழ் உதயம் said...

சாதி இருக்கிற வரை தான், தாங்கள் நினைத்ததை "சாதி"க்க முடியும் என்கிற எண்ணம் ஆண்டாண்டு காலமாக ஆட்சியாளர்களுக்கு இருந்தது. இப்போதும் இருக்கிறது. இனியும் இருக்கும். வேறென்ன சொல்ல.

ப.கந்தசாமி said...

நாடார் சமூகம் எப்படி முன்னேறியது? இது ஒரு முக்கியமான வரலாறு. இதே முறையை மற்ற சாதியினரும் ஏன் கடைப்பிடிக்கவில்லை?

இந்த சாதிப்பிரச்சினைக்கு தனிமனிதனால் என்ன செய்ய முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.

Thekkikattan|தெகா said...

இந்த பதிவு ரொம்ப முக்கியமான ஒன்னு. ஆழமா பேசி அதன் கூறுகளை அலசி ஆஞ்சு போடணும். ஆனா, பேசி பேசி நாற்றமட்டுமே எஞ்சி இருக்கும் கிழிஞ்சு போன துணி மாதிரிது.

//பாதங்களில் மற்றும் பாதங்களின் அடியிலிருந்து தோன்றியவர்கள் பஞ்சமர்கள்//

பஞ்சமர்கள்னா சமகாலத்தில எனக்கு புரியற மாதிரி என்ன பேர்ல அழைக்கப்படுகிறார்கள். எப்படி பாதத்தில இருந்து மனுசன் பொறக்க முடியும்?

//விரித்தவர்கள் போய் விட்டார்கள். அதிலிருந்து விடுபட மனமில்லாமல் நாம் மட்டும் உழன்று கொண்டு இருக்கிறோம். //

இதுவே நமது சமூகத்திற்கு பிடிச்சு சீக்கு, பிணி அண்ட் சாபம். இதனின்று மீண்டாலேயெழிய 1.3பில்லியன் என்ற கணக்கு வெகு விரையில் 2 என்று போயி நிற்கும். ஏனெனில் இங்கு யாவருமே மைனாரிடி ஒவ்வொரு இனமும், குழுவும் தன்னினத்தை மெஜாரிடியாக ஆக்கிக்கொள்ள முட்டி, மோதிக்கொள்ளும் வித்தையில் பிதுக்கி தள்ளிவிடுவோம் ;-) குழந்தைகளை.

இப்போ தெரியுதா ஏன் இப்படி மக்கள் தொகை பெருகிதுன்னு?

Thekkikattan|தெகா said...
This comment has been removed by the author.
Thekkikattan|தெகா said...

//இந்த சாதிப்பிரச்சினைக்கு தனிமனிதனால் என்ன செய்ய முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.//

மிக மிக முக்கியமான கேள்வி! இது வரைக்கும் டாக்டர். கந்தசாமி சார் இந்த சாதித் தீயை அனைக்கவும், ஒரு சமூகமாக மேலெழும்பவும் என்னவெல்லாம் செஞ்சிருக்காருன்னு சொன்னா, அப்படியே வளரும் தலைமுறையான நாங்களும் செஞ்சிட்டு போறோம். பெரியவர்கள் எவ்வழியோ அவ்வழியே சிறியோர்கள் நாங்களும்.

Anonymous said...

//நாடார் சமூகம் எப்படி முன்னேறியது? இது ஒரு முக்கியமான வரலாறு. இதே முறையை மற்ற சாதியினரும் ஏன் கடைப்பிடிக்கவில்லை?//

நாடார் சமூகத்தின் அயராத உழைப்பும் ஒற்றுமையும் அவர்களது சமூக தலைவர்களின் சரியான வழிகாட்டுதல்களும் அவர்களின் முன்னேற்றத்துக்கு அடிப்படை காரணங்கள். மற்ற ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு இந்தக் காரணிகள் கிடைத்தாலும் அவர்களால் நாடார் சமூகம் போல் முன்னேற முடியாது. இதற்கு முக்கிய கரணம் தென் தமிழகம் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்தின் பொது புத்தியில் நாடார்கள் ஒடுக்கப்பட்டவர்கள் என்பது பதிவாக இல்லை. ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் வாழும் ஒடுக்கப்பட்டவர்கள் மளிகை வியாபாரம், உணவகம் போன்ற தொழில்களில் வெற்றி பெறுவது தமிழ் சமுதாயத்தின் பொது புத்தி மாறும் வரை எளிதல்ல.

Anonymous said...

//இந்திய ஜனத்தொகையில் 85 சதவிகிதம் இந்துக்கள். ஆனால் இந்துக்கள் நம்பும் வேதாந்தம் என்பது வேதங்களைப் பற்றிய அறிவு, ஆராய்ச்சி, விரிவாக்கம், உணர்தல் போன்றவற்றை ஒவ்வொரு இந்துக்களுமே அறிந்து இருப்பார்களா என்பது ட்ரில்லியன் டாலர் கேள்வி?//

ஜோதிஜி, ஹிந்துத்வாவாதிகளிடம் வதைபடப் போகிறீர்கள் :-). இந்து மதம் என்பது, ஆங்கிலேயர்கள் இந்திய துணைக்கண்டத்தில் வாழ்ந்த மக்களின் சமூக அமைப்பையும் சமய நம்பிக்கைகளையும் ஆராய்ந்த பிறகு, சீக்கிய, புத்த, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ மதங்களை சாராத மக்கள் அனைவரையும் கலந்து கட்டி ஒரு குவியலாக்கி அதற்கு இட்ட பெயர்தானே.

துளசி கோபால் said...

அடியாத்'தீ' !!!!!!


இந்தப் பால்கி வாலா மித்தாய்வாலா போலத்தான் வெள்ளையரிடம் ஸர்நேம் உருவானது.

கூப்பர், ஷூமாக்கா, ஸ்மித், டெய்லர், க்ளார்க் இப்படிப்பல......

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாவதாக...

@ சகோ.DrPKandaswamyPhD
சகோ.தெக்கிகட்டண் சொன்னது...

\\\\//இந்த சாதிப்பிரச்சினைக்கு தனிமனிதனால் என்ன செய்ய முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.//---பெரியவர்கள் எவ்வழியோ அவ்வழியே சிறியோர்கள் நாங்களும்.\\\\\

ஏன் இப்படி சுயமாக சிந்திக்காமல் மற்றவரையே பின்பற்ற வேண்டும்?

'மனுதர்மம்/வர்ணாசிரமம்/சாதி எல்லாமே பொய்' என்று தீர உறுதியான சந்தேகமற்ற நம்பிக்கை ஆழ்மனதில் எல்லாருக்கும் தோன்றினால் மட்டுமே... தோன்ற வைத்தால் மட்டுமே, சாதி ஒழியும்... ஒழிக்க முடியும்...

இந்த மனமாற்றத்தை உருவாக்க என்ன வழி...? ஆத்திகர்களுக்கும் நாத்திகர்களுக்கும்... இறைநாடினால் பிப்ரவரியில் எனது அடுத்த பதிவில் சொல்கிறேன்...! (அப்பதிவு முற்றிலும் இவ்வலைப்பூ வாசகர்களுக்காகவே)

ஜோதிஜி said...

வாங்க முஹம்மத் ஆஷிக்

என்னடா மத்தவங்களுக்கு பதில் சொல்லாமல் உங்களுக்கு மட்டும் பதில் சொல்றேன்னு பாக்குறீகளா?

விரைவில் வெளியாகப் போகும் படத்திற்கு வரும் விளம்பரம் மாதிரி போட்டு தாக்கிட்டு நகர்ந்து போயிட்டீங்க. அது என்னப்பு அத்தனை ரகஸ்யம்?
என் காதுக்கு மட்டுமாவது கொஞ்சம் சொல்லுங்களேன்.

தெகா, கும்மி கல்வெட்டு உங்களை நான் வரவேற்க்க மாட்டேன். அப்புறம் நண்பர் டெஞ்சன் ஆயிடுவாரு. நான் அவனில்லை. அவனில்லை.

மற்ற மக்களுக்கு ?

மீண்டும் ஒருமுறை உள்ளே வந்து இந்த விவாதத்தில் கலந்து கொள்கின்றேன்.

'பரிவை' சே.குமார் said...

அருமையான அலசல்.

ஜோதிஜி said...

வாங்க குமார்.

டீச்சர் நீங்க சொல்லியுள்ளபடி பல வெளிநாட்டு ஆண்கள் பெண்கள் வைத்துள்ள பெயர்களைப் பார்த்து நானும் ஆச்சரியப்பட்டுள்ளேன். சமீபத்தில் சந்தித்த ஒரு ஆணின் பெயர் வுட். (கட்டை?)

அய்யா தெகா கொஞசம் பொங்கிட்டாரு விடுங்க. எல்லா பயபுள்ளைங்களும் இந்த மீனவ பிரச்சனை காரணமாக கொஞ்ச நாளாகவே உணர்ச்சிமயத்தான் இருக்காங்க. தனிமனிதன் இந்த எல்லைக்குள் நுழையவும் வேண்டாம். ஆதரிக்கவும் வேண்டாம். குறிப்பாக குழந்தைகளுக்கு இதைப் பற்றி போதிக்காமலேயே இருந்தாலே போதுமானது. நகர்புற வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் பல குழந்தைகள் ஒரு வகையில் புண்ணியம் செய்த ஆத்மாக்கள்.

ஜோதிஜி said...

தமிழ்உதயம் ரசித்த விமர்சனம்.

ராசப்பா படித்தவுடன் என்ன நினைத்தாய்?

ஊரான் நீங்க சொன்னது உண்மைதான். உங்கள் புரிந்துணர்வுக்கு நன்றி.

தமிழ் மலர் இரவு வானம் வருகைக்கு நன்றி.


சுயமாய் சிந்திக்காத மக்கள் இருக்கும் வரை ஒவ்வொரு பிரிவினருக்கும் தலைவர்கள் தோன்றி கொண்டே இருப்பார்கள்.

அற்புதம் தவறு நண்பா.

சி.பி.செந்தில்குமார் said...

>>>மக்கள் ஒருபுறம் அவரவர் சாதிகளை கெட்டியாக பிடித்துக் கொண்டு தங்களுக்குள் தாங்களே பிளவு பட்டு நின்றார்கள்.

s s 100 & true

தாராபுரத்தான் said...

உங்கள் கதைக்குள் சாமர்த்தியமாக நாட்டு நடப்பு...

உமர் | Umar said...

வந்தேன், பேச நேரமில்லாததால் சென்றேன்.

Unknown said...

பல தனிமனிதன்--களின் தொகுப்பு தான் சமுதாயம், நாடு...
கலப்பு திருமணங்களை ஆதரிச்சா அடுத்த 20 - 50 வருடத்தில் சாதியிருக்காது... டாக்டர். கந்தசாமி சார் .. உங்க சொந்தத்தில்.. உங்க வீட்டில் கலப்பு மணம் செய்ய தயாரா ?...

கலப்பு மணம் சொன்னா.. நிறைபேர் சொல்வது போல்..
SC/ST excuse..ண்ணு சொல்லாம .. கலப்புமணம் செய்ய எத்தனை பேர் தயார்ன்னு மனச்சட்சி படி, நெஞ்சை தொட்டு உண்மையை சொல்லுங்க பார்போம்...

மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி... தலைவர்கள் இப்படி செய்தா 10-20 வருடத்திலேய சாதி யிருக்காது....

என் மச்சினனுக்கு பொண்ணு பார்த்தோம்... அப்போதான்...
இந்த சாதி எவ்வளவு மனித மனத்தில் ஊடுருவியிருக்குன்னு புரியுது..

உண்மையில் பார்த்தால் சாதி அப்படிங்கற
அமைப்பு சரிதான்..ஆனா அதுக்கான காரணங்கள் வேறு...

இப்போ இருக்கிறது சாதி வெறி..
சாதியா அமைப்பு தன் தனிதுவத்தை இழந்த் பல நூற்றாண்டுகளாச்சு...
//.ஒரு எல்லையை விட்டு தாண்ட முடியாத அளவிற்கு மிகத் தந்திரமாக உருவாக்கப்பட்ட வலைபின்னல். விரித்தவர்கள் போய் விட்டார்கள். அதிலிருந்து விடுபட மனமில்லாமல் நாம் மட்டும் உழன்று கொண்டு இருக்கிறோம்...//

ஜோதிஜி... நீங்க சொன்னபடி இது தந்திரமாக சுய நலத்துக்காக உருவாகக்க படலை..

சாதியத்தை அதிக ஆளவில் எதிர்த்தவர் பெரியார்..

குறைதபட்சம் அவர் காலத்திலிருத்து பார்த்தாலும் 50 வருடத்துக்கு அப்புறம் தன் சில படிகள் தாண்ட முடிந்து இருக்கு..

எந்த விஷயத்தையும் ஆக்க தான் அதிக காலம் ஆகும்...
அப்படி பார்த்தா.. சாதியை உருவாக்க எத்தனை காலம் பிடித்து இருக்க வேண்டும் ?

இன்று நாம் பயன்படுத்தும் கிரி கோரியன் காலண்டரை ஆங்லேயர்களிம் நாம் பெற்றொம் எனபது நீங்கள் அறிந்ததே..
ஆனால் அந்த காலண்டர் உலகம் முழுவதும் முழு பயன்பாட்டுக்கு வர 300 ஆண்டு காலம் தேவை பட்டது..

சுயநலமா குறுக்கு புத்தியுடன் இருப்பவர்கள் இப்படி 300 - 500 வருடத்த்கு பின் வருபவர்கள் மக்களை பிரித்தாளா வசதியாக சாதியத்தை உருவாக்கி கொடுப்பர்களா?

தனக்கு தன் காலத்தில் பயன்படாத ஒன்றுக்குக்கக உழைத்து இருப்பர்களா ?

சாதியாத்தின் பின் புலம் வேறு... நோக்கம் வேறு...
ஆனால் நடைமுறையில் ஆட்சியாளர்கள் பயன்படுத்துமு முறை வேறு.

அதனால் இன்று சாதியாம் அழிய வேண்டிய ஒன்றாக வீட்டுக்கு வெள்யிலும்.. பாதுக்காக வேண்டிய ஒன்ற்றாக வீட்டுக்கு உள்ளேயும்.. மனித மனங்களீன் வாழ்ந்து கொண்டு இருக்கிறது...

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாவதாக...

@ சகோ.Vinoth,
//ஜோதிஜி... நீங்க சொன்னபடி இது தந்திரமாக சுய நலத்துக்காக உருவாகக்க படலை..//--?!?

"நம்மிடையே நிலவும் சாதியை ஒழிக்க என்னதான் தீர்வு?"

http://pinnoottavaathi.blogspot.com/2011/02/blog-post_04.html

தணல் said...

இது எல்லாம் நான் என்ன நினைக்கிறேன் என்பதே. தவறிருந்தால் திருத்துங்கள்.

தணல் said...

ஒரு மொழி பேசிக் கொண்டு தமிழகத்தில் பரவிய மனித இனம், சிறு குழுக்களாகப் பிரிந்து பல பிராந்தியங்களுக்கு போய் சேர்ந்திருக்க வேண்டும். ஏற்கனவே அங்கே இன்னும் சிலர் வாழ்ந்து கொண்டும் இருந்திருக்கலாம். காடு மலை சமவெளி கரைகள் என்று வாழ்ந்த குழுக்கள், அச்சூலளுக்கு ஏற்ப வாழத் துவங்கும் போது, அவர்களின் மொழி, வழக்கங்கள், சடங்குகள் ஆகியவை மாறுபட்டிருக்க வேண்டும். காடு அதிகமாகவும் மக்கள் குறைவாகவும் இருந்த காலத்தில், இப்போது இருப்பது போன்று பயண வசதிகள் இல்லாததால், ஒரே இடத்திலேயே தங்கி பல தலைமுறைகள் வளர்ந்து, பெருகி, பின் மற்ற குழுக்களை நெருங்க ஆரம்பித்திருக்க வேண்டும். கண்டிப்பாக அப்போதே அடித்துக் கொள்ள ஆரம்பித்திருப்பார்கள். சமவெளியில் பரவியவர்கள், விவசாயம் செய்ய ஆரம்பித்திருக்க வேண்டும். நிலத்தையும் பங்கிட்டு கொண்டு இருந்திருக்க வேண்டும். பஞ்சம் பட்டினி காரணமாகவோ, இல்லை வெல்லப்பட்டு ராச்சியமாக ஒருங்கிணைக்கப்பட்ட போதோ, விவசாயம் செய்யாத மற்ற குழுக்கள் ஏற்கனவே சமவெளியில் இருந்த மனிதர்களுடன் தம்மை இணைத்துக் கொண்டிருந்திருக்க வேண்டும்.

தணல் said...

தங்களது உடல் உழைப்பைக் கொடுத்து, உணவுக் கூலியைப் பெற்று இருக்க வேண்டும். ஒரு சமூகமாக கிராமமாக இனைந்து வாழ ஆரம்பித்து இருந்த போதிலும், ஏற்கனவே இவர்களிடையே வழக்கங்கள், நம்பிக்கைகள், மற்றும் சடங்குகளில் வேறுபாடுகள் ஏற்பட்டுவிட்ட காரணத்தால், தத்தமது குழுக்களுள் உள்ளேயே திருமணம் செய்து வந்திருக்க வேண்டும். இப்படியாக குழுக்களிடையே கலப்பு குறைவாகவும் இனத்து ஒற்றுமை அதிகமாகவும் இவர்கள் வாழ்ந்திருக்க வேண்டும். விவசாய நில ஆதிக்கம் காரணமாக வெள்ளாமை செய்து வந்த குழுவைச் சேர்ந்த மனிதர்கள் அதிக ஆதிக்கம் பெற்று இருக்க வேண்டும் (எனக்கு வேலை செய்தா தான் உனக்கு சோறு என்பது போன்று). வசதியில் ஓரளவுக்கு பிரிவுபட்டு இருந்தாலும், இவர்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு தான் வாழ்ந்திருப்பார்கள். இடையில் வந்த இந்து மதம் எல்லாரையும் பிரித்துப் போட்டு (சூழ்ச்சியோ மூட நம்பிக்கையோ எதோ ஒன்று) தமது ஆதிக்கத்தை நிலை நாட்டியிருக்க வேண்டும்.

ஜோதிஜி said...

இது எல்லாம் நான் என்ன நினைக்கிறேன் என்பதே. தவறிருந்தால் திருத்துங்கள்.


குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா. அற்புதம். தமிழர்களின் தொடக்க வரலாறு முல்லை மருதம் நெய்தல் பாலை போன்ற தொடக்க நிகழ்வில் நீங்கள் சொல்லியுள்ளபடி தான் தொடங்கியுள்ளது.

தணல் said...

தமது குழுக்களுக்கு தமது வேலைகளைக் கற்றுத் தருவதன் மூலம், தொழில் என்பது குறிப்பிட்ட குழுக்கான அடையாளமாக மாறி இருக்க வேண்டும். ஒரு சமூகமாக இவ்வாறு தங்களை ஒழுங்கமைத்து எல்லோரும் ஒன்றாக வாழ்வதில் தவறு இல்லை – எந்த வேலைக்கும் ஒரே மாதிரியான மரியாதையும் சம்பளமும் கிடைத்துக் கொண்டிருந்தால்.... ஆனால், காலப்போக்கில் சில வேலைகள் கவுரவம் என்றும், சிலது கீழே என்றும் போய் விட்டன. மக்களும் அவ்வாறே பிரிந்து விட்டனர்.

தணல் said...

நான் ஏன் இவாறு நினைக்கின்றேன் என்றால் - நமது ஆட்கள் எல்லோருமே endogamous திருமண முறைகளையே இன்னமும் பின்பற்றி வருகின்றனர். அதாவது, சாதிகளுக்குலேயே திருமணம். எனக்குத் தெரிந்து, ஒரு பிசி இன்னொரு பிசி சாதியில் திருமணம் செய்து கொள்வதென்பது கூட மிகக் குறைவு தான். அதே எம் பி சி, எஸ் சி, எஸ் டி ஆகியோருக்கும் சேரும். ஆனால் வடஇந்தியாவில் இப்படி இல்லை - ஒரே வர்ணங்களுக்குள் உள்ள சாதிகள் திருமணம் செய்து கொள்ளலாம். ஆக நம்மாட்கள் குழு வாழ்க்கையினையே பிற்பகுதியில் சாதியாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர் என்றே நினைக்கிறேன். வர்ணாசிரப் பிரிவுகளைப் போன்று அல்ல. ஜாதி என்பதே ஒரு வடமொழிச் சொல்தானே.

தணல் said...

இடையில் வந்த இந்து மதப் பிரிவுகளால், குழுக்களுள் அதிக வேற்றுமைகள் ஏற்பட்டு, வணிக விவசாயக் குழுக்கள் தமிழகத்தில் பிராமணர்களுக்கு அடுத்த ஆதிக்க சாதிகளாக உருமாறியிருக்க வேண்டும். இதர தொழில் செய்தவர்கள் சூத்திரர்களாக தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கப் பட ஆரம்பித்திருக்க வேண்டும். இன ஒற்றுமைக்காகவும் (இல்லையென்றால் இன்னொரு குழுவின் கை ஓங்கிவிடும் என்ற பயத்தில்), சொந்தத்தில் திருமணம் (மாமன் மச்சான்) செய்ததாலும், தங்களுக்குள்ளேயே திருமணம் செய்து செய்து, குழுக்களுக்கு இடையேயான வேறுபாடுகள் மிக ஆழமாகயிருக்க வேண்டும்.

என் எண்ணப்படி, சாதி வேற்றுமைகள் குறைய என்ன நினைக்கிறேன் என்பதை நாளை சொல்கிறேனே..

Unknown said...

redwithanger உடன் என்க்கு கருத்து வேறுபாடு உள்ளது. அனைத்தையும் சொல்ல பின்னுட்டம் போதாது. தனி பதிவாக தான் இட வேண்டும் போல..

தணல் said...

vinoth - please write up what u think. give the link here if you are going to put it as a post.

சேக்காளி said...

//இன்று அரசாங்கம் வாரி வழங்க வசதி வாய்ப்புகளை அனுபவித்துக் கொண்டுருக்கும் தாழ்த்தப்பட்டவர்கள்//.[என்றாலும் அதற்குள்ளும் கிளைநதிகள் உண்டு].
என்றால், இன்று சேரிகள் எரியாமல் இருக்கிறது.எந்த ஒரு காலனியின் கடைசி வீட்டு வாசல் வரைக்கும் காரில் சென்று இறங்கும் சாலை வசதி இருக்கிறது.அங்கிருக்கும் யாருமே ஒரு ரூபாய் ரேசன் அரிசிக்கு வரிசையில் நிற்கும் அவலமில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா?

ஜோதிஜி said...

சேக்காளி நீங்கள் சொல்வது பெரும்பான்மையாக ஏற்றுக் கொள்ளக்கூடியதே

நாடோடிப் பையன் said...

Well written article. Thank you.