Sunday, November 25, 2012

காரைக்குடி உணவகம் - விருந்தும் மருந்தும்

அறிவே தெய்வம். 

எனக்கு இணையம் அறிமுகமான பின்பு தான் எனது தொழில் வாழ்க்கை மேலேறத் தொடங்கியது. தமிழ் இணையம் அறிமுகத்திற்குப் பின்பே அறிவென்ற வீட்டின் ஜன்னல் கதவு என்று திறந்து வைக்க முடிந்தது. நல்லது கெட்டது, தேவையானது, தேவையற்றது என்று காற்றில் கலந்து வந்து கொண்டேயிருந்தாலும் எதை தேர்ந்தெடுக்க வேண்டும், எப்போது எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற சுதந்திரம் ஒவ்வொருவரும் அவரவர் அனுபவம் தான் தீர்மானிக்கின்றது.

தீர்மானிக்க முடியாமல்  வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை.

உங்களை பிரச்சனைகளை உங்கள் தலைமுறையின் தோளில் இறக்கி வைத்து விட்டு மறைந்து விடுவீர்கள். தலைமுறைகளில் வாழ்க்கையில் உங்கள் பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வரும் போது அவர்களின் வாழ்க்கையும் முடிவுக்கு வந்திருக்கும்.

முடிவே இல்லாத சுழற்சி இது.  ஒரு தலைமுறை செய்யும் தியாகங்கள் தான் பல தலைமுறைகள் சிறப்பாக வாழ உதவுகின்றது.

பகிர்தல் நன்றே. 

தேடல் என்பது ஒரு பயணம் போன்றது.  அதுவும் சாதாரண பயணமா இல்லை சாகச பயணமா என்பதை நம் தேடலின் தீவிரம் தான் நமக்கு உணர்த்தும். உங்கள் தேடல் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் உங்கள் மனதை திறந்து வைத்திருந்தால் தான் மாற்றங்கள் உருவாகும். அல்லது உருவாக சூழ்நிலை உருவாகும். தமிழ் இணையம் என்பது இன்றைய பொழுதில் உலகமெங்கும் வாழக்கூடிய தமிழர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம்.

இங்கே தேடல் உள்ள பலருக்கும் அறிவு வாசல் என்பதன் நீளம் அகலம் என்ன என்பதையும் ஓரளவுக்கேனும் இணையம் மூலம் தற்போது உணரந்து கொள்ள முடிகின்றது.  பத்திரிக்கைகள் என்பது ஒரு குறுகிய வட்டத்திற்குள் குறிப்பிட்ட விசயங்களை குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே கொடுக்க முடிகின்ற ஒன்று.

பகிர்தலில் பத்திரிக்கைகள் செய்த, செய்து கொண்டிருக்கின்ற பாவச் சாமச்சாரங்களை விட தமிழ் இணையம் அந்த அளவுக்கு மோசமாக இல்லை.

கறை நல்லது. 

வாசிப்பனுக்கு ஒரு கருத்தில் மாற்றுக் கருத்து உருவானால் அதிகபட்சம் படித்த பத்திரிக்கைக்கு வாசகர் கடிதம் எழுதலாம். மாற்றுக் கருத்தில் உண்மையான விசயங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தால்  அது எங்கே போகும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 

எழுதத் தெரிந்தவர்களுக்கு அந்த பத்திரிக்கையின் உள்ளடக்கத்திற்கேற்றவாறு எழுத கற்றிருக்க வேண்டும்.  நடை, உடை, அலங்காரம் என்று பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்க வேண்டும். அது மேலும் செதுக்கப்படும்.  தெளிவான கருத்துக்களை வாசிப்பவனுக்கு கொண்டு போய்ச் சேர்ப்பதை விட குறிப்பிட்ட பக்கத்திற்குள் பொருந்திப் போக வேண்டும்.  

குறிப்பாக அந்த விசயம் அந்த சமயத்தில் பேசப்பட வேண்டியதாக இருக்க வேண்டும். இது அத்தனையும் உடைத்து இன்று உலகமெங்கும் உள்ளக்கிடக்கைகளை அப்படியே கொட்ட உதவிக் கொண்டிருப்பது தமிழ் இணையமே. இணையத்தில் எழுத வாய்ப்பு அமைந்தவர்கள் ஒரு வகையில் பாக்கியவான்களே. தமிழ்நாட்டின் முதல் அமைச்சருக்கு எழுதிய கடிதத்தை படித்தவுடன் அழைத்துப் பேசிய நண்பர்கள் மூலம் நான் உணர்ந்து கொண்ட உண்மை இது.

தொட்டால் தொடரும்.

கடந்த பத்து பதிவுகளாக மின்சாரம் குறித்து நான் எழுதிய பிறகு அது சம்மந்தப்பட்ட விட்டுப் போன விசயங்கள் என்னவென்று பழைய பத்திரிக்கைகள், இணையம் சார்ந்த செய்திகள் என்று எல்லாநிலையிலும் பார்த்த போது தான் பல உண்மைகள் புரிய வந்தது.  நான் தேடிப்பார்த்த எந்த பத்திரிக்கைகளிலும் அரசின் கொள்கைகள், மின்சார ஒழுங்கு முறை ஆணையம் குறித்து மிகத் தெளிவான எந்த விசயங்களையும் குறிப்பிடப்படாமல் பிரச்சனைகளின் வெளியே நின்று தான் பலரும் பேசியிருக்கிறார்கள். எழுதியிருக்கிறார்கள்.  இன்று வரையிலும் வெளிவரும் அத்தனை கட்டுரைகளிலும் இப்படித்தான் இருக்கினறது.

இந்த மின்சாரம் குறித்து கவலைப்பட்டு எழுதும் எந்த பத்திரிக்கையிலும் முழுமையான தகவல்கள் ஏதும் இருந்ததாக தெரியவில்லை. ஏனிந்த அவலம்? எதனால் உருவானது? அரசாங்கம் உடனடியாக செய்ய வேண்டிய தீர்வு என்ன? என்று எவரும் உரத்துச் சொல்ல பயப்படுகிறார்கள்.

காரணம் என்னவாக இருக்கும்?

தமிழ் தலிபான்கள்

முகநூல் என்பதை நண்பர்கள் ஃபேஸ்புக் என்று தான் சொல்லவேண்டும் என்கிறார்கள். தமிழ் பிழைத்துப் போகட்டும். விட்டு விடுங்கள் என்று ஏகடியம் பேசுகிறார்கள். இணையம், பின்னூட்டம், பின்தொடர, வழித்தடம் போன்ற வார்த்தைகள் இதே போல தொடக்கத்தில் நொண்டியடித்தன.  இப்போது பயன்பாட்டில் உள்ளதைப் போல நண்பர்கள் சொன்ன இந்த மூஞ்சிபுக் என்ற வார்த்தையும் காலப்போக்கில் மாறும் என்றே நம்புகின்றேன். இணைய போராளிகள் போல இணைய தாலிபான்களையும் நிறைய பார்க்க முடிகின்றது. எழுதும் வார்த்தைகளில் ஆங்கிலத்தை வலிய திணிக்கும் லாவகத்தை கவனிக்கும் போது அவர்கள் சொல்லும் காரணம் பேச்சு மொழி இப்படித்தான் இருக்கின்றது என்கிறார்கள்.

ஆனால் கிராமவாழ்க்கையை அடித்தளமாகக் கொண்டு இன்று அலுவலக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் எவருக்கும் என்னைத் தவிர என் வாழ்க்கையைத் தவிர வேறு எது குறித்தும் அக்கறைப்படத் தேவையில்லை என்பதை அவரவர் எழுத்தின் மூலமே புரிந்து கொள்ள முடிகின்றது.  அக்கறை என்பது காசு பணம் கொடுத்து உதவுவது மட்டுமல்ல

உணரத்தெரியாதவர்கள் வாசித்த வார்த்தைகள் கூட நல்ல வாழ்க்கையை இழந்தவர்களின் சோகம்  போலத் தான் தெரிகின்றது  அன்றாடம் ஒருவருக்கு தன் மன அழுக்கை துடைக்க நேரம் கிடைத்தாலே போதுமானது.

கற்றுக் கொண்டால் குற்றமில்லை.

சமூகம் நிறைய கற்றுத் தருகின்றது.  பார்த்தால் என்ன தருவாய்? பழகினால் என்ன லாபம்? சொன்னால் என்ன கிடைக்கும்? பகிர்ந்தால் பலன் உண்டா? என்று எல்லா நிலையிலும் பொருள் சார்ந்த அடிப்படையில் ஒவ்வொருவரும் நகர்ந்து கொண்டேயிருப்பதால் உள்ளூற எப்போதும் ஒரு நிச்சமற்ற நிலைமை இருந்து கொண்டே தான் இருக்கிறது. 

மொத்தத்தில் வியாபார உலகத்தில வியாபார தந்திரங்களோடு வாழ பழகியிருக்க வேண்டும். ஒவ்வொன்றையும் குறையோடு சுட்டிக்காட்ட எத்தனையோ விசயங்கள் நம்மிடம் உள்ளது.  ஆனால் நம் குறைபாடுகளை மறந்து விடுவதால் தான் மற்றவர்களின் குறைகளை கண்டு குதுகலிக்க முடிகின்றது.  ஒவ்வொரு உரையாடலின் முடிவிலும் ஓராயிரம் தரிசனங்கள் நமக்கு கிடைத்துக் கொண்டே தான் இருக்கிறது.  நாம் அதை எப்படி உணர்ந்து கொள்கின்றோம் என்பதில் தான் நமக்கான  வாழும் வாழ்க்கையும்  இருக்கிறது.எனபதை எளிதாக மறந்து போய் நகர்ந்து கொண்டேயிருக்கின்றோம்.

மனப்பாடமே கல்வி

கடந்த ஒரு மாதமாக தேவியர்களின் பாடங்களில் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றேன். ஆசிரியர்களை நிறையவே பிடிக்கும். துப்புரவுத் தொழிலாளர்கள் அத்தனை பேர்களும் இந்த சமூகத்தின் ஆரோக்கியத்தின் அஸ்திவாரம். 

ஆனால் பள்ளி, கல்லூரிகளின் ஆசிரியர்களோ நிகழ்கால எதிர்கால சமூக கட்டுமானத்தின் அஸ்திவாரம்.

ஆனால் எத்தனை பேர்கள் இந்த பணியை உணர்ந்து செய்கினறார்கள் என்பது கேள்விக்குறியே?

குழந்தைகள் ஐந்தாவது படிக்கும் வரையிலும் எந்த தொந்தரவும் செய்யாமல் அவர்கள் விருப்பப்படியே படித்து வர வேண்டும் என்று மனதில் வைத்து வீட்டில் இந்த பொறுப்பை ஒப்படைத்திருந்தேன். கடந்த இரண்டு வருடமாக குழந்தைகள் படிக்கும் பள்ளியின் தரம் அதளபாதாளத்திற்கு போய்க் கொண்டிருக்கினறது.

காரணம் நிர்வாக விரிவாக்கம், கட்டிட வளர்ச்சி, சிபிஎஸ்சி பாடத்திட்டம் அறிமுகம் என்று ஒரு கார்ப்ரேட் கலாச்சாரத்திற்கு சென்று கொண்டிருப்பதால் கவனம் செலுத்தியே ஆக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன்.  மாலையில் வீட்டுப்பாடங்கள், தினந்தோறும்  வகுப்பறையில் எழுத வேண்டிய பரிட்சைகள் என்று அடிப்படைக்கடமைகள் முடிந்தவுடன் எனது பாடங்கள் தொடங்குகின்றது.  இது அடுத்த நாள் காலை ஒரு மணி நேரம் மேலும் மேலும் பாடங்களுக்கு அப்பாற்பட்ட புரிதலான வாழ்க்கையை தினந்தோறும் அறிமுகப்படுத்திக் கொண்டேயிருக்கின்றேன்.

தற்போது கல்வித்திட்டத்தில் உள்ள ஒவ்வொரு பாடமும், அதன் நோக்கமும், தற்போதையை ஆசிரியர்களின் நிலைப்பாடுகள், அவர்கள் தரம், உடன் பழகும் பள்ளிக் குழந்தைகள், குழந்தைகள் கற்றுக் கொள்ளும் பாடங்கள், பயம் தரும் மாற்றங்கள் என்று எழுத பகிர நிறைய உள்ளது.  பதிவுகளின் வழியே இது குறித்து விரைவில் பேசுவோம்.

தேடி வந்த இனிப்பு

கோவி கண்ணன் சிங்கப்பூரிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த போது சந்திக்க விருப்பம் தெரிவித்து இருந்தார். நிகழ்காலத்தில் சிவா மற்றும் என்னையும் சந்திக்க வந்திருந்தார்.  கோவி கண்ணன் மூலம் எனக்கு ஒரு நல்ல பஃபே ஸ்டார் வகையான விருந்து கிடைத்தது.

உணவு என்பது எவருக்கும் எப்போதும் வீட்டில் கொடுக்கப்பட வேண்டியது என்பதை  நான் கொள்கையாக வைத்திருப்பவன். ஆனால் கண்ணனின் பயணத் திட்டம் வேறு விதமாக இருந்து கடைசியில் அது மாறுதலாகி திருப்பூரில் உள்ள பாப்பீஸ் ஹோட்டலில் சிவா விருந்து கொடுத்தார். ஆனால் சிவாவும் கோவி கண்ணனும் கொத்தித் தின்றதை பார்த்த போது அவர்களின் கட்டுப்பாடு புரிந்தாலும் நமக்கு நாக்கு என்பது அடக்க முடியாத சமாச்சாரம் என்பதை மீண்டும் ஒரு முறை உணர்ந்து கொண்டேன்.  

கோவி கணணனின் தைரியமான எழுத்துக்கு நான் ரசிகன் என்பதைப் போல கோவி கண்ணன் கொடுத்து விட்டுச் சென்ற இனிப்பு வகைகளுக்கு தேவியர்களும் அடிமையாகி எங்கே அவர்? என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  கோவி கணணனுக்கு தேவியர்கள் சார்பாக. சிவாவுக்கு என் சார்பாக.நன்றி.

பொருள் செய்ய பழகு

சமீபத்தில் அதிகம் பாதித்த சம்பவங்களில் ஒன்று தர்மபுரியில் நடந்த கலவரம். ஏற்கனவே இடஒதுக்கீடு குறித்து எழுதியிருந்தேன்.  இப்போது இந்த பிரச்சனையைக் குறித்து நிறைய யோசித்துக் கொண்டிருக்கின்றேன். பலதரப்பு நியாயங்களை, பல கட்டுரைகளை, செய்திகளை உள்வாங்கிக் கொண்டிருக்கின்றேன்.  எழுத வேண்டும். புதியதலைமுறை யில் திருமாவளவன் பேசிய பேச்சில் வெளியே சொல்லமுடியாத அளவுக்கு ஒரு விரக்தி மனப்பான்மையே மேலோங்கி நிற்கின்றது.

வருத்தங்களும், இழப்புகளுமே நம் வாழ்க்கை வாழ்ந்தாக வேண்டும் என்ற சபதத்தை எடுக்க வைக்கின்றது.  .

அறிவு சூழ் உலகு

புதுக்கோட்டையில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஞானாலயா நூலகம் குறித்து, அங்கு சென்று வந்ததைக்குறித்து இன்னமும் முழுமையாக எழுதாமல் இருக்கின்றேன்.  இந்த வருடத்தில் நிகழ்காலத்தில் சிவா மூலம் அறிமுகமான மிகச் சிறந்த  மனிதர் புதுக்கோட்டை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அய்யா அவர்கள்.  மிகுந்த சிரமத்திற்கிடையேயும் தான் கொண்ட கொள்கையில் பின்வாங்காமல் எவரையும் அதிக அளவு தொந்தரவு செய்யாமலும் புதிய கட்டிட பணியை தொடங்கி தற்போது முடியும் தருவாயில் வந்து நிற்கின்றது.

இது குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு மற்ற நண்பர்களுக்கு கடிதம் வாயிலாக தெரிவித்ததைப் போலவே அவருக்கும் ஒரு கடிதம் மூலம் தகவல் அனுப்பியிருந்தேன். நான் எதிர்பார்க்காத நிலையில்  எனது கடிதத்தை தயக்கம் ஏதுமில்லாமல் அப்படியே வெளியிட்டு இருந்தார்.  அவர் மூலம், அந்த கட்டுரையின் மூலம் பல நண்பர்கள் கிருஷ்ணமூர்த்தி அய்யா அவர்களை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள்.

உதவிக்கரங்களையும் நீட்டியிருக்கிறார்கள் . பாதை தூரம் என்றாலும் நம்பிக்கை கீற்று தெரிந்து கொண்டேயிருக்கின்றது.

திரு. ஜெயமோகன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை இங்கே எழுதி வைக்கின்றேன்.  இது குறித்து நிறைய எழுத வேண்டியுள்ளது.




புதுக்கோட்டை திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள்  ஒவ்வொரு முறையும் என்னிடம் பேசும் போது சொல்லும் வார்த்தைகளை இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன்.

"உதவிக்கரம் என்பது இரண்டாம் பட்சமாக இருக்கட்டும்.  விரும்பும் நபர்கள் இந்த நூலகத்தை வந்து பார்க்க வேண்டும். எனது உழைப்பை இலவசமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனக்குப் பின்னாலும் பல இளைஞர்களுக்கு இந்த நூலகம் பயன்பட வேண்டும்.  தமிழ்நாட்டில் உள்ள மற்ற எந்த நூலகத்திலும் இல்லாத பல புத்தகங்கள் இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும்."

திரு. கிருஷ்ணமூர்த்தி (புதுக்கோட்டை ஞானாலயா) அலைபேசி எண்
99 65 63 31 40

22 comments:

வவ்வால் said...

ஜோதிஜி,

நல்ல கலவை!

அரசாங்கம் ஒரு நூலகம் கட்டினா அதுக்கு பின்னாடி வர அரசு மூட இல்ல சொல்லுது.

தனி ஒருவரின் முயற்சியில் ஒரு நூலகம் உருவாவது நல்ல முன்மாதிரி.

இது போல பாலம் என்ற அமைப்பும் ஒருவர் நிறுவி நடத்துவதாக முன்னர் படித்தேன்.

தி.தமிழ் இளங்கோ said...

ஒரே பக்கத்தில் பல் வேறு தலைப்புகளில் கருத்துச் சிதறல்கள்!

எம்.ஞானசேகரன் said...

உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. தரமான தமிழ் எழுத்து உங்களிடம் தஞ்சம் புகுந்திருக்கிறது என நினைக்கிறேன். எழுத்து மட்டுமே கைகொண்ட பலருக்கு சமூக பிரக்ஞை இருப்பதில்லை. சமூகத்தைப்பற்றியும், எதிர்கால தலைமுறைகள் பற்றியும் நியமான அலசல்களை உங்கள் பதிவுகளில் மட்டுமே பார்க்க முடிகிறது.

எனக்கும் உங்களைச் சந்திக்க ஆவலாக இருக்கிறது!

மலைநாடான் said...

அழகு, அருமை, சுவை!

Avargal Unmaigal said...


நீங்கள் பகிர்ந்த செய்திகள் மட்டுமல்ல உங்கள் வலைத்தளமும் மிக நன்றாக இருக்கிறது. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

அகலிக‌ன் said...

குழந்தைகள்தான் நம் குணம்காட்டும் கண்ணாடி.
தக்கார் தகவிலார் எனும் குறளில் அவரவர் எச்சத்தார் காணப்படும் என்பதை நம் வளர்ப்பில் விட்டுச்செல்லும் சந்ததியினரைதான் குறிகிறார் என நினைக்கிறேன். எனவே பிள்ளைகளுடன் செலவிடும் நேரம் பாடபுத்தகங்களைத்தான்டித்தான் இருக்கவேண்டு. இதை தாங்கள் வாய்ப்புக்கிடைக்கும்போதெல்லாம் வலியுருத்திவருவது மகிழ்ச்சி.

ஜோதிஜி said...

உங்களுக்கு கூர்மையான அவதானிய்பு. எந்த துறையில் இருக்கீங்க?

ஜோதிஜி said...

இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா? நன்றி நண்பா. இப்போது தான் நான் விரும்பியது ஒரு முடிவுக்கு வந்துள்ளது. இனி வேறெந்த மாறுதலும் தேவையிருக்காது.

ஜோதிஜி said...

நன்றி தலைவரே

ஜோதிஜி said...

உலகம் சிறிதானது. வாருங்கள் சந்திப்போம்.

ஜோதிஜி said...

தொடர் வருகைக்கு நன்றிங்க.

ஜோதிஜி said...

பாலம் குறித்து முடிந்தால் முழுமையான தகவல் தரவும். நன்றிஜீ

Unknown said...

சமூக பார்வையுடன் சிந்தனையை எழுத்து ஆகமாற்றிஉள்ளிர்கள்நன்றி

கிரி said...

"இணையம், பின்னூட்டம், பின்தொடர, வழித்தடம் போன்ற வார்த்தைகள் இதே போல தொடக்கத்தில் நொண்டியடித்தன. இப்போது பயன்பாட்டில் உள்ளதைப் போல நண்பர்கள் சொன்ன இந்த மூஞ்சிபுக் என்ற வார்த்தையும் காலப்போக்கில் மாறும் என்றே நம்புகின்றேன்."

ஜோதிஜி நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். இணையம் பின்னூட்டம் என்பவை சரியான மொழிபெயர்ப்பு காரணம் இவை பெயர்ச்சொற்கள் அல்ல ஆனால், facebook என்பது பெயர்ச்சொல். இதை முகநூல் என்று மொழி பெயர்க்ககூடது. சுருக்கமாகக் கூறினால் face என்பதையும் book என்பதையும் அப்படியே மொழி பெயர்க்க முடிந்ததால் மட்டுமே இவ்வாறு கூறுகிறார்கள். இதே faceluk என்று இருந்தால் பாதி மட்டும் தமிழில் மொழிபெயர்த்து கூறுவார்களா!! இது பற்றி நான் முன்பு எழுதியது. http://www.giriblog.com/2012/04/funny-tamil-translation.html

அகலிக‌ன் said...

நன்றி ஜொதிஜி! சொல்லிக்கற அளவு ஒன்னுமில்லை Industrial Photographer கூடவே கல்யாணம் காதுகுத்து எல்லாமும் எடுப்பேன் சென்னை அம்பத்தூரில் STUDIO இருக்கு.

திண்டுக்கல் தனபாலன் said...

ஒவ்வொரு தலைப்பு வாரியாக நல்ல தகவல்கள் + கருத்துக்கள்...

விரைவில் உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும் என்று நினைக்கிறேன்...

தலைவரின் மீள்பதிவு முன்பே படித்தது... நன்றி...

நிகழ்காலத்தில்... said...

கோவியாரின் மிகக்குறைவான நேரம், விரிவான ஏற்பாடுகளைச் செய்யவோ, பிற நண்பர்களை அழைக்கவோ இடமில்லாமல் செய்துவிட்டது. மற்றபடி அவரின் தயவில்தான் அந்த ஓட்டலை நானும் பார்த்தேன். நான் வலையுலகிற்கு வந்த புதிதில் என்னை உற்சாகப்படுத்தியதில் அவருக்கு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு.

ஞானாலயாவிற்கு வலைதளம் எந்தவகையிலாவது நண்பர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் துவங்கப்பட்டது. அதற்கு தங்களின் உழைப்பினைக்கண்டு மகிழ்கிறேன்.

ஜோதிஜி said...

வாங்க தனபால். அருண்க்கிட்ட சொல்லி தப்பு தாளம் மேளம் எல்லாம் கலக்கிடலாம்.

ஜோதிஜி said...

நன்றி சிவா.

ஜோதிஜி said...

நன்றி.

ஜோதிஜி said...

தொடர் உரையாடலுக்கு நன்றி கிரி

ஜோதிஜி said...

நன்றி. உங்கள் பார்வை கேமரா பார்வை.