Wednesday, December 05, 2012

குழந்தைகள் 3 - மனம் என்பது வாழ்க்கை.


ஒவ்வொருவரும் தாங்கள் கடந்து வந்த வாழ்க்கையில்  ஏதோவொரு தருணத்தில் பரதேசி கோலம் பூண்டுருப்போம். உடைகளால் என்பது மட்டுமல்ல.  உள்ளத்தால் வாழ்ந்திருந்தாலும் பரதேசி தான். 

படித்த புத்தகம், பார்த்த படம், பாதித்த காட்சிகள் என்று நாம் வாழும் வாழ்க்கையை சரிதானா? என்று சில அதிர்வுகளை உருவாக்கியிருக்கும். பைத்தியம் பிடிக்காத குறையில் பரிதவித்துருப்போம். இதற்கென்ன மருந்து? என்று அலைந்திருப்போம். 

அப்போது சிலருக்கு புத்தி வேகமாக செயல்படுகின்றது. பகுத்தறிய தொடங்கும். புதிய அனுபவங்களை கற்றுக் கொள்ள தயாராய் இருப்பார்கள். மேலும் யோசிப்பை பலப்படுத்தும். ஆனால் பலருக்கும் உள்ளுற இருக்கும் சக்தி இனி இறையே கதியென்று ஆன்மீகத்தை நோக்கி நகர்த்தி விடுகின்றது.

நானும் கடந்து வந்துள்ளேன். 
ஆன்மீகம் என்பதை அழகாய் நெருங்கிப் பார்த்த தருணமது. இறைவன், உருவங்கள், அது வலியுறுத்தும் சக்திகள், உணர்த்தும் பாடங்கள் என்பதைத் தாண்டியும் அறிந்து கொள்ளும் ஆவலில் அலைந்துள்ளேன்.. 

உணர்ச்சிக்குவியலாய் வாழ்ந்த வாழ்க்கையில் உணர்வை இழுத்துப் பிடித்து ஒரு புள்ளியில் சேர்க்க பாடுபட்ட நேரம் அது.

இன்று திரையில் நடிப்பவர்களும், ஆன்மீக உரைகள் மூலம் கலக்கிக் கொண்டிருப்பவர்களும் திருவண்ணாமலை பக்கம் போகாத காலத்தில் நான் அங்கே தொடர்ச்சியாக சென்று கொண்டிருந்தேன். வாழ்க்கை குறித்த தேடலுடன் ஏராளமான ஆசைகளையும் சுமந்திருந்த எனக்கு அதிலிருந்து விடுபடத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். 

நம்மிடம் உள்ள ஒவ்வொரு ஆசைகளும் தான் நம் வாழ்க்கை நகர்த்துக்கின்றது. அதுவே குறிப்பிட்ட காலத்திற்குள் இயல்பான பழக்கமாகவும் மாறிவிடுகின்றது.

கிடைத்து விட்டால் புத்தியைக் குறித்து பெருமிதம் கொள்கின்றோம். கிடைக்காத போது சக்திகளை தூற்றுகின்றோம் அல்லது துணைக்கு அழைக்க முயற்சிக்கின்றோம்.

அவர் சொன்னார், இவர் சொன்னார், அந்த பத்திரிக்கையில் வந்தது என்று ஒவ்வொருவரும் தங்கள் விருப்பங்களை,ஆன்மிகத் தேடலை உள்ளிருந்து தேடுவதில்லை. வெளியிலிருந்து தான் தேடுகின்றார்கள். 

இன்றைய ஆன்மீகம் குறித்த நம்பிக்கைகள் அனைத்தும் பேச்சு மூலம் மட்டுமே அடுத்தவருக்கு கடத்தப்படுகின்றது. நம்ப வைக்கப்படுகின்றது. அந்த கோவிலுக்குள் நுழைந்தேன். மெய் மறந்து நின்றேன் என்ற வார்த்தைகள் தான் இங்கே பலருக்கும் வேதவாக்காக தெரிகின்றது. இறை சக்தியை மட்டுமல்ல. இன்று எதையுமே உணர்ந்து கொள்பவர்கள் குறைவு. உணர்ந்ததாக நடிப்பவர்கள் தான் அதிகம். 

இதுவே படிப்படியாக கடத்தப்பட்டு கோவிந்தா போடும் கூட்டம் தான் நாளுக்கு நாள் அதிகமாகின்றது.  தன் உள்ளத்தையும் புரிந்து கொள்ளாமல்  அது தரும் உணர்வுகளையும் அறிந்து கொள்ள மனமில்லாமல் வாழும் வாழ்க்கையைத் தான் இங்கே பலரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். 

எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் ஆசாமியாகத்தான் வாழ்ந்து முடிக்க வேண்டும். 

ஆனால் வயதும் வாழ்க்கையும் கொடுத்த அதிர்வுகளை அடக்க வேண்டும் என்று முயற்சித்தேன். எதையும் தெரிந்து கொள்ள வேண்டும் அதனை புரிந்து கொள்ள வேண்டும் என்பதன் தொடர்ச்சியாக தெரிந்தது.

அறியும் ஆவல் இருந்தது. எந்த குருவையும் தேடியதில்லை. எனக்கு தேவையானதை அறிந்து கொண்டதோடு புரியவும் தொடங்கியது. ஆனால் இன்று அதனையும் கடந்து வந்துள்ளேன்.

குழந்தைகள் வளரத் தொடங்கும் போது நம்முடைய கலாச்சாரத்தில் இந்த ஆன்மீகம் இரண்டறக் கலந்து விடுகின்றது. குழந்தை வளர்ப்பின் ஒரு அங்கமாகவே கருதப்படுகின்றது. கிராமத்து வாழ்க்கையில் சாமி என்பது கண்டிப்பு வாத்தியார் என்பது போலத்தான் உருவகப்படுத்தப்படுகின்றது

தப்பு செய்யாதே.  கண்னைக்குத்திடும் என்று சொல்லியே தப்புக்களை மட்டும் அதிகம் செய்ய தூண்டப் படுகின்றது. 

ஒன்று மறுக்கப்படும் போது அல்லது மறைக்கப்படும் போது அங்கே தெளிவு கிடைப்பதில்லை. ஆசைகளும் பிடிவாதமும் தான் அதிகமாகின்றது. தெரிந்தவர்களும் முறைப்படி சொல்லிக் கொடுப்பதும் இல்லை. குரு என்றால் அவர் முன்னால் பணிந்து போக வேண்டும் என்பதே பலரின் கனவுகளை சிறுவயதிலேயே மலர விடாமல் தடுத்து விடுகின்றது.

ஆனால் நான் தெரிந்து கொள்ளவும் முயற்சிக்கவில்லை. சொல்லித் தந்தவர்களை மதித்ததும் இல்லை. மதிக்காத போது மிதிபடுவது இயல்பு தானே? அது தான் நடந்தது. மிதிபடாத மண் பானையாக மாறுவதில்லை.

குழந்தைகளின் வேகம் என்பது இரத்தம் சம்மந்தப்பட்டது மட்டுமல்ல. அது உணர்வு சம்மந்தப்பட்டது.  வளர்ந்தபிறகு உங்களுக்குள் எத்தனையோ கொள்கைகளை உருவாக்கி வைத்திருப்பீர்கள். வாழ்வில் சந்தித்த உங்களின் ஒவ்வொரு அனுபவமும் ஏராளமான பாடங்களை கற்றுத் தந்துருக்கும். அது சரியா தவறா? என்ற ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து கொண்டேயிருந்தாலும் முடிவு தெரியாமலேயே சிலவற்றை ஏற்றுக் கொண்டும் மறுத்தும் இருப்பீர்கள். இறுதியாக ஏதோவொரு உருவகம் உங்களுக்குள் உருவாகியே இருக்கும். 

இதுபோன்ற தருணத்தில் புதிய விசயங்கள் உங்கள் மனம் ஏற்றுக் கொள்வது கடினமாக இருக்கும். திறந்த பானையில் மட்டுமே தண்ணீரை ஊற்ற முடியும்.. 

ஆனால் குழந்தைகளின் மூளையில் உள்ள ந்யூரான்களில் எந்த செய்திகளையும் பதித்து விடலாம். ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கும் போது சொல்கின்ற விதம் தான் முக்கியம்.  பிறப்பில் புத்திசாலி என்ற குழந்தைகள் இங்கே யாருமில்லை. வளர்ப்பும் அவர்களை அணுகிய விதமும் தான் முக்கியமாக இருக்கின்றது. . 

ஊனமுற்ற குழந்தைகளைக் கூட நொண்டிக்குசும்பு என்பார்கள். நொஞ்சான் பிள்ளைகள் கூட குடும்பத்தில் சவாலாக இருப்பதை பார்த்திருப்போம். குழந்தைகளின் மூளை என்பது எதனாலும் பாதிக்கப்படாமல்  இருக்கும் போது எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள முடிகின்றது. எல்லாவற்றையும் குழந்தைகள் விரும்புவதால் இங்கே பலருக்கும் பயம் வந்து விடுகின்றது. இந்த பயம் தான் பலவற்றை மறைக்கத் தூண்டுகின்றது. 

இந்த வயதில் உனக்கு இது தேவையில்லடா.... என்று சொல்ல வைக்கின்றது.

அய்யோ இதை தெரிந்து கொண்டால் கெட்டுப் போய்விடுவானோ என்று எண்ணத் தோன்றுகின்றது. ஆனால் கெட்டுப் போவதன் அர்த்தத்தையும் எவரும் புரிந்து கொள்ளப்படுவதில்லை என்பது தான் இங்கே ஆச்சரியமான விசயம். குடிகாரர்கள் மேதைகளாக இருந்திருக்கிறார்கள். கொடூரமானவர்கள் தலைவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள். 

கெட்டுப் போவதென்பது உடம்பா? மனசா?  

கெட்ட பழக்கங்கள் உள்ள வளர்ந்த மனிதர்களின் உடம்பின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.  உறுப்புகள் செயல் இழக்கத் தொடங்கும் போது அதன் வேகமும் கிரகிக்கும் வீர்யமும் மாறத் தொடங்குகின்றது. வயதாக. சோர்வும் சேர்ந்து விட காலப்போக்கில் ஏக்கம் தான் மிஞ்சுகின்றது. 

ஆனால் பத்து வயதிற்குள் இருக்கும் எந்த குழந்தையுமே கெட்ட பழக்கங்களை கற்றுக் கொள்வதில்லை. பேசும் வார்த்தைகள் கூட வீட்டுக்குள் கேட்கும் வார்த்தைகள் மூலமே வருகின்றது. சிறுவயதில் குழந்தைகளின் மனசை பாதிப்படையச் செய்ய முடியுமே தவிர அதிலும் கூட முழுமையாக மாற்றம் செய்ய முடியாது. 

குடிகார தகப்பனின் செயலை தினந்தோறும் பார்க்கும் அத்தனை குழந்தைகளும் குடிகாரர்களாகவா மாறுகின்றார்கள். கணவனை மீறி காமத்துக்கு அலையும் பெண்களைப் பார்த்து அவரின் பெண் குழந்தைகள் அத்தனை பேர்களும் காமாந்தாகியாகவா வாழ்கிறார்கள்?.

சூழ்நிலை என்பது ஒரு முக்கிய காரணி.  ஆனால் அதுவே எல்லா நிலையிலும் பொருந்துவதில்லை. என் நண்பன் பத்தாம் வகுப்பு வரைக்கும் ஐந்து பாடங்களிலும் தேர்ச்சி அடைந்து பார்த்ததில்லை. ஆனால் கல்லூரி வரைக்கும் அவனை அடிக்க ஆளே இல்லை என்பதாக மாறிப்போனான். அதே அப்பா. அதே அம்மா. குடும்பத்தில் எப்போதும் இருந்த வறுமை.

என்ன காரணம்?

தொடக்கத்தில் பாடங்களில் கவனம் செலுத்தும் பல குழந்தைகள் காலப்போக்கில் மாறிவிடுகின்றார்கள்.

வேலை பார்க்கும் இடங்களில்  கேட்டுருப்பீங்களே?

சொல்லி புரியவைப்பா? என்று. ஆனால் இங்கே எவரும் புரிய வைக்க முயற்சிப்பதே இல்லை.  காரணம் கவனிப்பும், அனுசரனையும் குழந்தைகளை மட்டுமல்ல 

வளர்ந்த மனிதர்களுமே மற்றவர்கள் தனக்கு அனுசரனையாக இருப்பதை மட்டும் தான் விரும்புகிறார்கள்.. இந்த அனுசரனை மனிதர்களை மகத்தான சாதனையாளர்களாக மாற்ற உதவுகின்றது.   

நாம் தான் புரிந்து கொள்வதேயில்லை.  குழந்தைகள் குறித்து, அவர்களின் வளர்ப்பு குறித்து தேவையில்லாத பயங்களை பட்டியலிட்டு நாமும் வாழாமல் அவர்களையும் வாழவிடாமல் நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

சமூகத்தில் நாம் படித்து முடித்து நுழையும் தருணத்தில் எத்தனையோ கனவுகள் உள்ளூற இருக்கும். பலருக்கும் பல விதமான விருப்பங்களை அடைகாத்தே வந்திருப்போம். பலருக்கு. சுற்றுலா, உணவு, வீடு என்று இயல்பான நடைமுறை வாழ்க்கை விருப்பங்கள் இருக்கும். பலருக்கும் வாழ்நாள் முழுக்க உழைத்தாலும் பாதி கூட கிடைப்பதில்லை.

ஆனால் தொடக்கம் முதலே என் விருப்பங்கள் இயல்பான மனிதர்களின் ஆசைகளுக்கு அப்பாற்பட்டதாகவே இருந்தது. அனுபவங்கள் அதை புரியவைத்தது. அனுபவங்களோடு சேர்ந்த வாசிப்பு தான் அருமையாக பொருந்தி விடுகின்றது.  இது போன்ற பொருந்தாத விருப்பங்கள் தான் ஒவ்வொரு சமயத்தில் பல பிரச்சனைகளை என்னிடம் கொண்டு வந்து சேர்த்தது. . 

முதல் பத்து வருடங்கள் திருப்பூர் எனக்கு ஏராளமான அனுபவங்களை தந்திருந்தது. தேடியலைந்த பணம், ஓய்வே இல்லாத உழைப்பு, ஒவ்வொரு சமயத்திலும் கிடைத்த ஏமாற்றங்கள், தேடிக் கொண்டிருந்த அங்கீகாரம் என்ற இந்த நான்கு மூலைக்குள் என் வாழ்க்கை என்னை புரட்டி எடுத்துக் கொண்டிருந்தது. 

என் திருமணம் குறித்து யோசிக்க நேரம் இருந்ததில்லை.  தொழில் மற்றும் அது சார்ந்த எண்ணங்கள், வெற்றி பெற வேண்டிய இலக்கு மட்டுமே உள்ளுற ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் உள்ளுற ஒரு கனவை மட்டும் தனிப்பட்ட முறையில் அடைகாத்து வைத்திருந்தேன். நமக்கு குழந்தை பிறக்கும் போது இந்த திருவண்ணாமலையில் தான் பிறக்க வேண்டும் என்பதை மனதில் வைத்திருந்தேன். நடைமுறையில் அதனை செயலாக்கிய போது எதிர்ப்புகள் என்பது எட்டு பக்கமும் என்னை தாக்கியது. அஞ்சாமல் நினைத்தபடியே ஜெயித்தேன்.

ஏனிந்த விருப்பம் உருவானது என்பதை விட அங்கே என் குழந்தைகளுக்கு கிடைத்த மருத்துவரைப் பற்றியும் குழந்தைகளின் மூன்று வயது வரைக்கும் நான் பார்த்த மருத்துவர்களைப் பற்றியும் தான் நாம் பேசப் போகின்றோம்.

குழந்தைகள் பேசத் தொடங்கும் போது தான் கேள்விகள் வருகின்றது.  அதன் பிறகு அவர்களின் மூளையில் விருப்பமும் ஆசைகளும் பதியத் தொடங்கின்றது.  ஆனால் முதல் மூன்று வருடங்களும் அவர்களின் உறுப்புக்கள் சம்மந்தப்பட்ட ஆரோக்கியத்தில் தான் நாம் கவனமாக இருக்க வேண்டும்.  அஸ்திவாரம் என்பது சாதாரணமாக இருந்தால் அந்த குழந்தைகளின் ஆயுட்காலம் வரைக்கும் அவஸ்த்தை தான்.

கிராமத்து வாழ்க்கையில் பிரசவம் என்பது பத்து நிமிடங்களில் முடிந்த நாட்டு மருத்துவச்சி என்ற ஏதோவொரு கிழவியின் கைங்கர்யமாக இருக்கும். ஆனால் இன்று அது பல லட்சங்கள் செலவு பிடிக்கும் ஆடம்பர சமாச்சாரம். அவஸ்த்தைகள் அதிகமாகி பயத்தை உருவாக்கி, பயத்தோடு வாழ வைத்து உடல் உழைப்பே இல்லாமல் வாழும் பெண்கள் ஏறக்குறைய மறுபிறவி தான் எடுக்கின்றார்கள்.

அவஸ்த்தைகளோடு தான் குழந்தைகளை பெற்று எடுக்கின்றார்கள். இயல்பாக பிறக்க வேண்டிய  பல குழந்தைகள் நேரம் தீர்மானிக்கப்பட்டு வெளியே எடுக்கப்பட வேண்டியவர்களாக மாறிப்போனார்கள்.

அறுவைச் சிகிச்சை அதிகமானதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. இன்று முக்கால்வாசி பெண்கள் அறுவை சிகிச்சை மூலம் அரை மனுஷியாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிற்ர்கள். .

மருத்துவர்களின் பண ஆசையா? பெண்களின் ஆரோக்கியம் தந்த பரிசா? என்பதை விட மாறி வரும் உலகில் தேவைப்படாத மாற்றத்தையும் நாம் விரும்புவதால் இப்படித்தான் நடக்கும் என்பதுடன் இதை விட்டு வெளியே வந்து விடுவோம்.

இன்று உடலுக்கும் உள்ளத்திற்கும் நிறையவே மருந்துகள் தேவைப்படுகின்ற உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். முதல் இருபது வருடங்கள் எனக்கு எந்த மருந்துகளும் தேவைப்பட்டதில்லை. ஆனால் அடுத்த பத்து வருடங்களில் மருந்தே தான் வாழ்க்கையாக இருந்தது.  அந்த அனுபவங்கள் கற்றுத் தந்த பார்வைகள் தான் என் குழந்தைகள் குறித்த கனவின் எல்லைகளை விரிவாக்கியது.

என் திருமணம், எங்கள் குழந்தைகள், குடும்ப ஆரோக்கியம் என்று பரந்து விரிந்தது. ஒவ்வொன்றாக அதனை இப்போது நினைத்துப் பார்க்கின்றேன்.

இரட்டையர்களின் மூன்று வயது வரைக்கும் அடுத்து வந்த கடைக்குட்டி வரைக்கும் மூன்று பெண் மருத்துவர்களை சந்தித்து இருக்கின்றேன்.  

திருவண்ணாமலையில் உஷா கல்யாணி, திருப்பூரில் ஷெரிப் காலணியில் சிவகாமி, மற்றும் கொங்கு நகரில் இருக்கும் சித்ரா.

குழந்தைகளின் முதல் மூன்று வருட வாழ்க்கையில் இவர்களின் வழிகாட்டுதல், அக்கறையான கவனிப்பு, எங்களை புரிந்த கொண்ட விதம் இதற்கு மேலாக மருத்துவத்தை சேவையாக நினைத்த பாங்கு என்று  இவர்களைப்பற்றி சொல்ல நிறைய இருந்தாலும் குழந்தைகளின் பள்ளிக்காக வீடுகள் மாறிய போது, அதற்குப் பிறகு சந்தித்த மருத்துவர்கள் கொடுத்த பயமும் பாடமும் அநேகம்.  

இன்று குழந்தைகள் தும்மினால் பயம்.  இருமினால் அதைவிட பயம்.  மொத்தத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் சூழ்நிலையில் இருப்பவர்களின் வாழ்க்கையில் செத்து செத்து பிழைப்பது தான் நடந்து கொண்டிருக்கின்றது.  குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை எப்போதும் நான் கனவு கண்டதில்லை. ஆனால் ஒரு குழந்தை எப்படி வளர்க்கப்பட வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தேன். இன்று வரையிலும் அப்படித்தான் இருக்கின்றேன்.

காரணம் கிராமத்து கூட்டுக்குடும்பம், பெரிய குடும்பங்களில் வாழ்க்கை வாழ்ந்த ஒவ்வொரு குழந்தைகளும் தாங்கள் மனதில் வைத்திருந்த ஓராயிரம் கனவுகளையும் இழந்து விட்டுத்தான் சமூகத்திறகுள் வருகிறார்கள். நானும் அப்படித்தான் வளர்ந்தேன். சமூகத்திற்குள் வந்தேன். பாதிப்புகளை மனதிற்குள் வைத்திருந்தால் அதற்குப் பெயர் மனநோய்.  அதையே நேர்மறை எண்ணமாக்கி அவரவர் தங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தால் பாடம்.

ஆனால் இங்கே அனுபவங்களை பாடமாக எவரும் எடுத்துக் கொள்ள விரும்புவதே இல்லை.  ஒவ்வொரு சமயத்திலும் அதனை மறக்கவே விரும்புகின்றார்கள். காரணம் உள்ளூற பொங்கும் இயலாமையின் தவிப்பில் ஏக்கம் தான் இறுதியில் மிஞ்சுகின்றது. கனவுகளை மட்டும் பொறித்துக் கொண்டு எந்த கோழியும் வாழ்வதில்லை. ஆனால் மனிதர்கள் கனவுகளை மட்டும் தான் விரும்புகிறார்கள்.

இதனால் தான் இதுபோன்ற குடும்பத்தில் இருந்த வந்த மாணவர்களின் செயல் திறன் சிறகடித்து பறக்காமல் நொண்டியடிக்கத் தொடங்குகின்றது. பள்ளிக்கூடங்களில் பொறுத்துப் பார்த்த ஆசிரியர்களும் இறுதியில் நீ என்ன கூமுட்டையா? என்று கேட்கின்றார்கள்.

இந்த மருத்து உலகத்தையும் மருத்துவர்கள் தரும் பாடங்களையும் நாம் பார்ப்போம். வாழ்வில் மனிதர்களுக்கு இரண்டு விசயங்கள் மிக முக்கியமானது. அதுவும் குழந்தைப் பருவத்திலிருந்து தான் தொடங்குகின்றது. 

ஒன்று உடல் நலம். மற்றொன்று மனநலம். 

இரண்டும் சரியான அளவில் இல்லாத போது தான் சமூகம் பல சங்கடங்களை சந்திக்க நேர்கின்றது. 

நடைவண்டி பயணம் தொடரும்..........

தொடர்புடைய தலைப்புகள்

.

7 comments:

semmalai akash said...

ஆன்மீகம் பற்றி நிறைய சொல்லிருக்கிறீர்கள். அருமை உண்மைதான் ஆசைதான் எல்லாத்துக்கும் காரணம் அதை கையாள தெரிந்திருக்கவேண்டும்.

அருமையான பகிர்வு.

முனைவர் இரா.குணசீலன் said...


இன்றைய ஆன்மீகம் குறித்த நம்பிக்கைகள் அனைத்தும் பேச்சு மூலம் மட்டுமே அடுத்தவருக்கு கடத்தப்படுகின்றது. நம்ப வைக்கப்படுகின்றது.

தாங்கள் கூறுவது உண்மை.

ஆழமான தேடல்.
அருமையான பகிர்வு.

முனைவர் இரா.குணசீலன் said...

கனவுகளை மட்டும் பொறித்துக் கொண்டு எந்த கோழியும் வாழ்வதில்லை. ஆனால் மனிதர்கள் கனவுகளை மட்டும் தான் விரும்புகிறார்கள்.

மறுக்கமுடியாத உண்மை நண்பரே.

Anonymous said...

ஜோதிஜி மிக அருமையான தொடர்.

//குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை எப்போதும் நான் கனவு கண்டதில்லை. ஆனால் ஒரு குழந்தை எப்படி வளர்க்கப்பட வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தேன்.
இது போல இருக்க வேண்டும் என்றுதான் நானும் நினைக்கிறேன். ஆனால் எவ்வளவு முடியும் என்று தெரியவில்லை. உதாரணதிற்கு படிப்பு விஷயத்தில் வலுகட்டயமாக திணிக்க கூடாதென்பது என் கொள்கை. ஆனால் இருக்கும் போட்டியில் எவ்வளவு முடியும் என்று தெரியவில்லை.

// காரணம் உள்ளூற பொங்கும் இயலாமையின் தவிப்பில் ஏக்கம் தான் இறுதியில் மிஞ்சுகின்றது.

அப்படியே ஒத்து போகிறேன். ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு விதமான இயலாமை/தவிப்பு. நம் எல்லைகள் நமக்கு தெரிந்தாலும் மனம் ஏற்றுகொள்ள மறுக்கும் போது ஏக்கம் பிறக்கிறது.

//வாழ்வில் மனிதர்களுக்கு இரண்டு விசயங்கள் மிக முக்கியமானது. அதுவும் குழந்தைப் பருவத்திலிருந்து தான் தொடங்குகின்றது. ஒன்று உடல் நலம். மற்றொன்று மனநலம்

இரண்டுமே சரியாக அமைந்து பிரச்சனை குறைவாக வாழ்கை அமைந்து விட்ட பலரிடம் கர்வம் இயல்பாக இருக்கும். கடைசியில் அனைவரும் மண்/தீ இவற்றில் போக வேண்டிய சதை பிண்டங்களே என்பதை உணர்ந்து தெளிந்தால் நிறைய பிரச்சனைகள் தீர்ந்து விடும். ஆனால் அந்த உணர்தல் மிக எளிதான காரியம் கிடையாது.


இன்னும் நிறைய எழுதலாம். ஆனால் அதுவே ஒரு பதிவு மாதிரி ஆகிவிடும் அபாயம் உள்ளது :)

ஜோதிஜி said...

மிகச் சரியாக சொன்னீங்க. நன்றி.

ஜோதிஜி said...

உண்மைகள் எப்போதுமே உண்மைதான். நாம் உணர விரும்புவில்லை. நன்றி குணா.

ஜோதிஜி said...

எத்தனை பேர்கள் படிப்பவர்கள் என்பதை விட எப்படி உள்வாங்க வேண்டும் என்பதற்கு உங்கள் அக்கறையான வரிகளே சான்று. மிக்க நன்றி. பகிர்தலில் எந்த அபாயமும் இல்லை. பகிர்தல் நன்றே.