Sunday, May 12, 2013

சாதிப் பொங்கலில் சமத்துவ சர்க்கரை.




களம் 1

அவன் என் சொந்த ஊருக்கு அருகே உள்ள கிராமத்தில் எட்டாம் வகுப்பு வரை படித்து விட்டு ஒன்பதாம் வகுப்பு எங்கள் ஊரில் உள்ள மேல் நிலைப் பள்ளியில் வந்து சேர்ந்தான்.

அவன் அப்பா அம்மா இருவருமே அரசு ஊழியர்கள். இது தவிர அவர்களுக்கு நிலங்கள் தோட்டங்கள் என்று அபரிமதமான பணம் இருந்தது. ஏறக்குறைய சமூக அந்தஸ்த்தில் இருவரும் ஒரே நிலையில் இருந்தோம். 

பள்ளிக்கூட பழக்கம் என்றபோதிலும் குறுகிய காலத்தில் மிக நெருக்கமாக பழகி என்னைத் தேடுபவர்கள் அவன் வீட்டிலும், அவனைத் தேடுபவர்கள் என் வீட்டிலும் வந்து பார்க்கும் அளவிற்கு ஈருடல் ஓருயிராக பழகினோம்.

பத்தாம் வகுப்பில் நான் பெற்ற மதிப்பெண்கள் 65 சதவிகிதம். அவன் பெற்றது 66 சதவிகிதம்.  அருகே உள்ள அழகப்பா தொழில் நுட்ப கல்லூரியில் எங்கள் செட்டில் என்னுடன் 15 பேர்கள் விண்ணப்பித்து இருந்தார்கள். அப்போது பாலிடெக்னிக் என்றால் மிக உயர்ந்த கௌரவம் சார்ந்த படிப்பு.

ஆனால் எங்களுடன் படித்த முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவனுக்கு மட்டும் அங்கே இடம் கிடைத்தது.  அவன் பெற்ற மதிப்பெண்கள் 440.  

எனக்கு நிலமை புரிந்து விட்டது.

டக்கென்று  அதே பள்ளியில் பதினோராம் வகுப்பில் நுழைந்து இயல்புக்கு வந்து விட்டேன். ஆனால் இவனைக் காணவில்லை.  

நானும் மறந்து விட்டேன்.

எப்போதும் போல மாலை வேளையில் எங்கள் வீட்டுக்கருகே உள்ள பாலத்தில் கூட்டாளிகளோடு உட்கார்ந்திருந்த போது  காக்கி பேண்ட் காக்கி சட்டை, புது சைக்கிள், சைக்கிளின் உள்ளே பல கருவிகள் என்று வைத்து சைக்கிளை ஓட்டிக் கொண்டு வந்தவன் நாங்கள் உட்கார்ந்திருந்த பாலத்தின் மேல் ஒற்றைக் காலை வைத்து ஒரு வில்லன் சிரிப்பு சிரிக்க எனக்கு வியப்பாக இருந்தது.

எனக்கு புரிந்து விட்டது.  

இவனுக்கும் பாலிடெக்னிக்கில் சீட் கிடைத்து விட்டது என்று தெரிந்து கொண்டு வாழ்த்து சொன்னேன்.  அவன் மட்டுமல்ல.  அவனது  தம்பிக்கும் அடுத்த வருடம் அதே  கல்லூரியில் சீட் கிடைக்க என் மனதிற்கு மகிழ்ச்சியாகவே இருந்தது.

எனக்கு வேறுவிதமாக அப்போது யோசிக்கத் தெரியவில்லை. 

எப்படியோ திறமையின் அடிப்படையில் கிடைத்து இருக்கும் போல என்று மனதில் வைத்திருந்தேன்.

இதே போல அவர்கள் குடும்பத்தில் அவனது தங்கையும் தொடர்ந்து வந்த வருடத்தில்  +2 முடித்து விட்டு பி.ஈ சீட்டு கிடைத்து படித்துக் கொண்டு இருந்தார்.

இவர்களது தந்தை மிக மிக கண்டிப்பானவர்.  நான் முதல் முதலாக அவர்கள் வீட்டுக்குச் சென்ற போது எங்கள் குடும்பத்தை நன்றாக தெரிந்த காரணத்தால் தான் வீட்டுக்குள் எங்கே வேண்டுமானாலும் செல்ல அனுமதி கிடைத்தது. குறிப்பிட்ட சிலர் மட்டும் வீட்டுக்கு வர முடியும். பெரும்பாலும் எப்போதும் போல அருகே இருந்த புளிய்ந்தோப்பில் தான் மற்ற அத்தனை பேர்களும் கூடுவோம்.

காரணம் அவன் அப்பா டக்கென்று எவராக இருந்தாலும் கை நீட்டி விடும் பழக்கம் உள்ளவர்.  அத்துடன் கொஞ்சம் கூட சங்கடப்படாமல் மூஞ்சிக்கே நேராக நாகரிகமின்றி எதை வேண்டுமானாலும் பேசி விடுவார்.

அவனது தங்கையை பி ஈ படிக்கும் கல்லூரி விடுதியிலேயே சேர்த்து இருந்தார்கள்.

வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது.

நான் கல்லூரி முடித்து ஊரை விட்டு வெளியே வந்து விட்டேன். ஊருக்குச் செல்லும் போது அவனைப் பார்க்கச் சென்ற போதிலும் படித்த படிப்பை அவனும் அவன் தம்பியும் முழுமையாக முடிக்க முடியாமல் வெளியே வந்து சொந்த தொழில் தான் செய்து கொண்டிருந்தார்கள்.  

காரணம் மனப்பாடம் செய்து பள்ளியில் வாங்கிய மதிப்பெண்கள் கல்லூரியில் எடுபடவில்லை. இன்று வரைக்கும் பாக்கி உள்ள பாடங்களை அவர்களால் முடிக்கவில்லை.  

இது நமக்கு முக்கியமல்ல.  

அவனது தங்ககையின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் தான் எனக்கு பல உண்மைகளை பின்னால் புரியவைத்தது.

கல்லூரியில் படித்த தங்கை அங்கே  உடன் படித்த ஒருவரை காதல் செய்து கொண்டிருக்கும்  விசயங்கள் வீட்டுக்கு வந்து சேர வீடே கொந்தளித்துக் கொண்டிருந்தது. காரணம் அந்த பையன் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன். இது அரசல் புரசலாக எங்கள் வீட்டுக்கு தகவல் வர என்னிடம் கேட்டார்கள்.  எனக்கு ஒன்றும் புரியவில்லை.  அன்று பெரிதான சிந்தனைகளோ சமூக வேறுபாடுகள் குறித்த சிந்தனைகளோ அன்று யோசிக்கத் தெரியவில்லை.

ஆனால் நண்பன் வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம் ஒருவிதமான அசாதாரணமான சூழ்நிலை அங்கே நிலவுவதை பலமுறை கவனித்து இருக்கின்றேன்.  திருப்பூரில் இருந்து ஊருக்குச் சென்றால் கட்டாயம் அவன் வீட்டுக்கு செல்லும் பழக்கத்தை உடைய எனக்கு ஒவ்வொரு முறையும் அவன் வீட்டுக்கு சென்றவுடன் என்னை வேகமாக அழைத்துக் கொண்டு பக்கத்தில் உள்ள புளியந்தோப்பிற்கு அழைத்து வந்து விடுவான்.

எனக்குப் புரியவில்லை.  

எப்போதும் அவன் அப்பா அம்மா என்னுடன் நன்றாக பேசுவார்கள். அவர்கள் என்னை தவிர்ப்பதும் கண்கூடாக தெரிந்தது.

ஒரு நாள் உண்மை வெளியே வந்தது.  

நான் சென்ற போதெல்லாம் அங்கே ஒரு அறையில் அவன் தங்கையை அடைத்து வைத்திருந்தது எனக்கு பின்னாளில் தான் தெரிந்தது. 

அடித்து துவைத்திருந்தார்கள்.

குடும்பத்தினரால் தங்கையின் பிடிவாதத்தை மாற்ற முடியவில்லை. கடைசியாக தப்பு செய்ய மாட்டேன் என்று உறுதி மொழி சொல்லிவிட்டு பரிட்சை மட்டும் எழுதிவிட்டு வருகின்றேன் என்று சொல்லிவிட்டுச் சென்றவர் பரிட்சை எழுதாமல் இருவரும் சென்று பதிவு திருமணம் செய்து கொண்டார்கள்.

அந்த பையனின் அப்பா தாசில்தார் பணியில் இருந்த காரணத்தால் இவர்களால் அதற்கு மேல் ஒன்று செய்ய முடியவில்லை. 

தலை முழுகி விட்டோம் என்று அறிவித்து விட்டார்கள்.   

அதிகமான சொத்துக்கள் இருப்பதால் தங்கை  மூலம் பின்னால் பிரச்சனை வந்து விடக்கூடாது என்பதால் அது சார்ந்த பல நடவடிக்கைகளையும் செய்தார்கள். குறிப்பாக என் நண்பனின் தம்பி அந்த விசயத்தில் அதி தீவிரமாக செயல்பட்டான்.

அவசரமாக குடும்பத்தில் என் நண்பனுக்கும் அவன் தம்பிக்கும் ஒரே நாளில் திருமணம் நடந்தது. வசதியான குடும்பம், வந்த பெண்களும் அரசுப்பணியில் இருப்பவர்கள்.  .

காலப்போக்கில் என் நண்பன் மட்டும் தன் தங்கையோடு மெதுவாக வீட்டுக்குத் தெரியாமல் தொடர்பை உருவாக்கி வைத்திருந்தான்.  அதுவும் வீட்டுக்குத் தெரியவர தம்பி மூலம் ஏராளமான பிரச்சனைகள். 

நண்பன் வீட்டில் உள்ளவர்களின் தன்மைகளை மாற்ற முடியாமல் பட்டும் படாமல் இன்றும் தங்கையோடு தொடர்பில் இருக்கின்றான்.

இன்று  நண்பனின் தங்கையும், அவர் காதலித்த நபரும் முழுமையாக படித்து முடித்து நல்ல உயர்ந்த நிலையில் உள்ள பதவியில் இருக்கின்றார்கள்.  அவர்களுக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளையும் தாழ்த்தப்பட்ட சமூகம் என்று அரசாங்கத்தில் சான்றிதழ் வாங்கி அவர்களும் இன்று மருத்துவ துறையிலும், கட்டிட வடிவமைப்பாளர் துறையிலும் கலக்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.

இன்று வரையிலும் நண்பனின் தங்கைக்கு குடும்பதோடு தொடர்பே இல்லாமல் போய்விட்டது.  ஆனால் எப்படியாவது தொடர்பை உருவாக்கிக் கொண்டு விடலாம் என்று நண்பனின் தங்கையும் ஏதோவொரு வகையில் போராடிக் கொண்டு இருக்கின்றார்.

இதில் என்ன சிறப்பு என்று உங்களுக்குத் தோன்ற வேண்டுமே? 

தனது சாதீயத்தை இன்று வரைக்கும் உயர்த்திப் பிடிக்கும் அவன் அப்பா தனது மூன்று குழந்தைகளுக்கும் தொடக்கத்தில் செய்த ஒரு காரியம் தான் முக்கியமானது.

ஒவ்வொரு சாதியிலும் பல பிரிவுகள் உண்டு.  

அதிலும் நுணுக்கங்கள் வரையறை உணடு.  ஒரு சின்ன உதாரணம் மூலம் இதை விளக்குகின்றேன்.  

நாயக்கர், நாயுடு என்றால் நமக்குத் தெரியும்.  ஆனால் இதற்குள்ளும் பல பிரிவுகள் உண்டு.

ஒவ்வொரு பிரிவும் ஒரு தனித்தீவுகள்.

இதே போல ஒவ்வொரு சாதியிலும் குலம், கோத்திரம் என்கிறார்கள்.  நாட்டுக்கோட்டை நகரத்தார் என்றால் பொதுவாக செட்டியார் என்ற ஒரு பிரிவில் வந்து விடுகின்றது.  ஆனால் எந்த சாமியை நீங்க கும்புடுறீங்க என்ற கிளைநதிகள் பிரிகின்றது.  

இது போக செட்டியார் என்றால் அதிலும் பல செட்டியார்கள் உள்ளன.

இதை இங்கே குறிப்பிடக் காரணம் நண்பனின் அப்பா செய்த காரியம் நாயக்கர் என்ற வார்த்தை முன்னால் காட்டு என்று சேர்த்து காட்டு நாயக்கராக மாற்றி விட அது எஸ்டி என்ற பிரிவுக்கு சென்று விட அரசாங்கத்தின் கதவு அகல திறந்து விடுகின்றது. 

இப்படி செய்து தான் மதிப்பெண்கள் குறைவாக பெற்ற மூவரையும் கல்லூரியில் சேர்த்து இருக்கின்றார்.
.
ஏறக்குறைய பத்து வருடங்கள் கழித்து தான் இதில் சொல்லப்பட்ட பல விசயங்கள் என் காதுக்கு வந்தது.

இது குறித்து அவன் சொன்னதும் இல்லை. 

நானும் கேட்டுக் கொண்டதும் இல்லை.

களம் 2

அவனும் என் நெருங்கிய நண்பன் தான்.  ஒன்பது, பத்தாம் வகுப்பில்  முதல் பெஞ்சில் உள்ள நான்கு பேர்களில் இவனும் என்னுடன் தான் இருந்தான்.  இவனும் அருகே உள்ள கிராமத்தில் இருந்து தான் பள்ளிக்கு வந்து கொண்டு இருந்தான்.  அப்பா கோவில் குருக்கள் வேலையில் இருந்தார்.

கிராமத்து கோவில் என்பதால் வருமானம் மிக மிக குறைவு.  அவன் உடைகள், நடவடிக்கை என்று அத்தனையிலும் அவனின் ஏழ்மை நன்றாகவே தெரியும். ஆனால் எதையும் வெளியே காட்டிக் கொள்ள மாட்டான்.  முற்பட்ட வகுப்பில் இருந்தாலும் எங்களுக்கு அத்தனை கெட்ட காரியங்களையும் கற்று தந்தவன்.  ஆனால் வாய்ச் சொல்லில் மட்டும் தான் வீரன்.  எந்த தவறான பழக்கம் பக்கமும் செல்ல மாட்டான். படிப்பில் சுமார் ரகம் தான்.

குடும்ப சூழ்நிலையின் காரணமாக பத்தாம் வகுப்பு முடிந்தவுடன் குடும்பத்தின் வறுமையைப் போக்க அவன் தேவகோட்டை ரஸ்தாவில் உள்ள ஐடிஐ யில் போய் சேர்ந்தான்.  பிட்டர் துறையில் படிப்பதாக சொன்னான்.

பல காலம் அவனைப் பார்க்க முடியவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் காரைக்குடியில் உள்ள செக்காலை பகுதியில் ஒரு பேக்கரி கடையின் உள்ளே செல்ல காரை ஓரமாக நிறுத்திவிட்டு குழந்தைகளை உள்ளே அழைத்துக் கொண்டு சென்ற போது ஒருவர் வந்து என்னை அடையாளம் தெரிகின்றதா? என்று என்னிடம் கேட்க குழப்பத்துடன் தெரியவில்லையே என்றேன்.  

பெயர் சொல்லி நான் தான்டா? என்றான்.  

திகைத்துப் போய்விட்டேன்.

சமவயது உள்ளவன் ஏறக்குறைய அறுபது வயது தோற்றத்தை பெற்று இருந்தான். அருகில் இருந்த பேரூந்து நிறுத்தத்தில் அவனது குடும்பமும் இருந்தது. அவர்களை அழைத்துக் கொண்டு கடைக்கு உள்ளே மொத்தமாக சென்று அவனுடன் ஏறக்குறைய ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தது இப்போதும் மனதில் பாரமாக உள்ளது.

நண்பன் ஆள் நோஞ்சானாக இருப்பானே தவிர வேலைகளுக்கு அஞ்சும் ஆளில்லை.  ஐடிஐ யில் பிட்டர் முடித்து விட்டு முறைப்படி ஒரு வருடம் பயிற்சி எல்லாம் எடுத்து விட்டு நிறுவனங்களில் வேலை கேட்டு செல்லும் போது அவனை ஒவ்வொரு வித்யாசமான பிரச்சனைகளும் தாக்கி தடுமாற வைத்துள்ளது.

ஏம்பா நீயெல்லாம் இந்த வேலைக்கு வர்றே? உங்களுங்க இதுக்கெல்லாம் லாயிக்கு பட மாட்டாங்கப்பா? என்று ஒவ்வொருவரும் அலைக்கழிக்கத் தொடங்கியுள்ளனர். அவனது பள்ளிக்கூட மாற்று சான்றிதழில் உள்ள சாதிப் பெயர் காட்டிக் கொடுக்க அதைக் காட்டாமல் அனுபவ அடிப்படையில் கொஞ்சம் சில இடங்களில் வேலை பார்த்துள்ளான்.   

இவனும் விடாமல் பல கையில் முயற்சித்துக் கொண்டிருக்க, வேலை தொடங்க உள்ளே நுழைந்தால் சட்டையை கழட்டி விட்டு வேறு சட்டை போடத் தொடங்கும் போது இவன் உடம்பில் இருந்த பூணூல் பார்த்து அங்கேயிருப்பவர்கள் ஆராய்ச்சியைத் தொடங்குவார்கள்.

கடைசியாக இவனை ஒதுக்கத் தொடங்க ஒவ்வொரு விதமான பிரச்சனைகளும் உருவாக குறிப்பிட்ட கால கட்டத்திற்கு மேல் போராட முடியாமல் ஊரில் உள்ள கோவில் வேலையில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளான். 

திருமணம் ஆகி குழந்தைகள் வர மேலும் பொருளாதார சிக்கல்கள் விரிவடைய திருமணத்திற்கு காத்திருக்கும் தங்கைகள் என்று அழுத்தம் அதிகமாகிக் கொண்டேயிருந்தது.  இடையே தொடர்ச்சியாக அப்பா, அம்மா இருவருமே இறந்து விட நான்கு பக்க கணைகளும் ஒரே சமயத்தில் தாக்குவதைப் போல திக்குமுக்காடத்தில் மாட்டிக் கொண்டான்.

இப்போது அவன் பார்த்துக் கொண்டு இருக்கும் வேலை இறப்பவர்களுக்கு காரியம் செய்யும் வேலைகள்.

"சுற்றியுள்ள கிராமத்தில் யாராவது இறந்தால் தான் எங்கள் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்" என்று அவன் சொன்ன போது திருப்பூர் திரும்பும் வரைக்கும் என் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது.

களம்  3

வீட்டில் குழந்தைகள் தூங்கும் போது தான் அவர்களது உரையாடல் தொடங்கும். மூவரில் ஒருவர் படுத்தவுடன் தூங்கி விடுவார்.  இருவர் சரியான வாயடிகள். அதிலும் ஒருவருக்கு பேச்சு முடிவதற்குள் கை நீண்டு விடும்.  உள்ளே அலறல் சப்தம் கேட்பதை நான் கண்டு கொள்ளாமல் கணினியில்  என் வேலையில் கவனம் செலுத்தி பார்த்துக் கொண்டுருப்பேன். 

உள்ளே சமையறையில் இரவின் இறுதி வேலையில் இருக்கும் மனைவி ஓடிவர கப்சிப் பென்று அமைதி நிலவும்.  அதுவும் கொஞ்ச நேரம் தான்.  மறுபடியும் சமாதானம் ஆகி அவர்களின் உரையாடல் மீண்டும் தொடங்கும்.  

நான் கவனித்துக் கொண்டே இருப்பேன்.  தலையிடுவது இல்லை. 

எப்போதும் போல அன்று இருவரும் பேசிக் கொண்டிருந்தவர்கள் கிறிஸ்துவ, இஸ்லாமிய மதங்களைப் பற்றி பேசிக் கொண்டு இருந்தார்கள்.  அப்போது நான் பார்த்துக் கொண்டிருந்த என் வேலையை நிறுத்தி விட்டு அவர்களின் உரையாடலை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன்.

திடீரென்று இருவரும் வந்து ஒரே சமயத்தில் என்னிடம் ஒற்றுமையாக வந்து நின்றார்கள்.

அல்லா என்றால் யாருப்பா? என்று ஒருவர் கேட்க அதுவும் சாமி தான் என்றேன்.

அப்புறம் எதுக்கு ஏசு என்று மற்றொருவர் கேட்க அதுவும் இன்னோரு சாமி தான் என்றேன்.

அப்ப நாம் இந்து மதத்திலே ஏன் இத்தனை சாமிகள்? என்று விடாமல் இருவரும் ஒரே சமயத்தில் கேட்க அவங்க அவங்களுக்கு எந்த உருவம் பிடிக்குதோ அதை வைத்துக் கொண்டு கும்பிடுகின்றார்கள் என்று பொத்தாம் பொதுவாக அடித்து விட்டேன்.

அப்புறம் எதுக்கு நம்ம மனசு தான் முதல் சாமின்னு நீங்க சொல்றீங்க? என்று மேற்கொண்டு அவர்கள் கேள்வி எழுப்ப இருந்தவர்கள் அம்மாவைப் பார்த்ததும் உள்ளே சென்று விட்டார்கள்.

கடந்த இரண்டு வருடங்களாகத்தான் மூவருக்கும் மதங்கள் குறித்து அதன் வித்தியாயசங்கள் குறித்து புரியத் தொடங்கியுள்ளது.  

இருபது வயதுக்கு மேல் எனக்கு உருவான புரிதல்கள் இவர்களுக்கு பத்து வயதில் தொடங்கியுள்ளது.

வகுப்பறையில் மாற்று மத தோழியர்கள் அவர்களது பண்டிகை தினத்தன்று கொண்டு வரும் திண்பண்டங்கள், அவர்களுடன் உரையாடும் விதம் போன்றவைகள் இந்த மத வேறுபாடுகளை கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகம் செய்து கொண்டு இருக்கின்றது.  

நல்லவேளையாக இவர்கள் படிக்கும் பள்ளியில் இது போன்ற மத மாச்சரியங்கள் உள்ள வேறுபாடுகளை ஊக்குவிப்பதில்லை என்ற போதிலும் ஏதோவொரு வகையில் இவர்களின் அனுபவங்கள் இவர்களுக்குள் இருக்கும் மதம் சார்ந்த கேள்விகளுக்கு பதில் கிடைத்துக் கொண்டே இருக்கின்றது.  

இந்த நிமிடம் வரைக்கும் இவர்களுக்கு சாதி என்ற சொல் அறிமுகம் ஆகவில்லை என்பது கூடுதல் தகவல்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளியில் சாதிச் சான்றிதழ் வேண்டும் என்று இவர்களது டைரியில் எழுதி எழுதி அனுப்பிய போதிலும் நான் இன்று வரையிலும் கொண்டு போய் கொடுக்கவில்லை.

வகுப்பாசிரியர் நேரிடையாக வரவழைத்தும் என்னை கேட்டார்.  "என்ன சார், யார் யாரோ வந்து கொடுத்துட்டு போயிட்டாங்க.  உங்களுக்கென்ன சார்?" என்று வரையிலும் நைச்சியமாக பேசிய போதும் கூட இதுவரையிலும் கொடுக்க வில்லை.  

அவர் யார் யாரோ என்று கேட்டதற்குப் பின் சில தேவையற்ற சமாச்சாரங்கள் உள்ளது.  அது அவரது பார்வையில் உள்ள வித்தியாசங்கள். 

எங்கள் குடும்ப பின்புலம் பற்றி வகுப்பாசிரியருக்கு தெரியும் என்பதால் கூடுதல் உரிமையுடன் பேசிய போதும் பள்ளி மாறும் போது தானே தேவைப்படும். அது வரையிலும் பொறுத்திருங்க என்று சிரித்து சமாளித்து வந்து விடுவேன்.  

வீட்டில் கத்திப் பார்த்து காரியம் ஆகவில்லை என்ற நிலையில் இப்போது கத்துவதை குறைத்து கெஞ்சத் தொடங்கியுள்ளார்.

"ஏதாவது பிரச்சனையின்னு வந்தா நான் தான் பொறுப்பு.  கவலைப்படாதே " என்று சொன்னதற்குப் பிறகு இப்போது அந்த விசயமாக என்னை நச்சரிப்பதில்லை.

எத்தனை காலம் இப்படி தள்ளிப் போட முடியும்? என்பது பெரிய கேள்விக்குறி என்ற போதிலும் எனக்குள்ளும் சின்னச் சின்ன ஆசைகள் இருக்கத்தான் செய்கின்றது. முதல்வன் படத்தில் வருவதைப் போல யாரோ ஒரு புண்ணியவான் நான்கு என்று பிரித்து வைத்து இந்த சாதிப் பெயர்கள் வெளியே தெரியாமல் உருவாக்க வருவானா என்ற நடைமுறையில் சாத்தியப்படாத பல கனவுகளை வைத்து தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.

எப்போதும் என்னுடைய வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சமூகம் விதித்துள்ள சின்னச் சின்ன கோடுகளை தாண்டுவதையும், அழிப்பதையும் என்  வழக்கமாக வைத்துள்ளேன்.  

சில எல்லைகளை முடிந்த வரைக்கும் மீறிப் பார்ப்பதுமுண்டு. . 

இது எந்த அளவுக்கு சாத்தியப்படும் என்பது எனக்குத் தெரியவில்லை.

ஆன்மீகம் என்பதை உண்மையாகவே மிக அழகாக நெருங்கிப் பார்த்த காலமும் உண்டு.

அதை விட்டு விலகி நிற்கும் காலத்திற்குள்ளும் வந்துள்ளேன்.  

எது குறித்தும் விமர்சிப்பதில்லை.  ஒவ்வொன்றும் அவரவர் மனம் சார்ந்த, அனுபவங்கள் சார்ந்த படிப்பினைகள் என்பதில் கவனமாக இருக்கின்றேன். ஆனால் என் முன் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பதிவாக்கி விட வேண்டும் என்பதில் கவனமாக இருக்கின்றேன்.  

அது என் கருத்தாகத்தான் இருக்கும். மற்றவர்களுக்கு பிடிக்க வேண்டும் என்று அவசியமில்லை.

பத்தாயிரம் புத்தகங்கள் தராத விசயங்கள் நாம் வாழ்வில் நடக்கும் ஒரு சிறிய அனுபவம் தந்து விடும் என்பதில் உறுதியாக இருக்கின்றேன். 

எந்த நிலையிலும் சலனமற்ற மனோநிலை தான் தேவை என்பதை அடிப்படை கருத்தாக வைத்துள்ளேன். 

இது சாத்தியப்படுமா? என்றால் முயற்சித்துப் பார்க்கலாமே? என்பேன்.

எனது திருப்பூர் நிறுவன அனுபவங்களில் இங்குள்ள எந்த நிறுவனமும் இஸ்லாமியர்களை ஏற்றுக் கொள்வதில்லை.  அப்படியே இருந்த போதிலும் அடிமட்ட வேலைகளில் மிக மிக குறைவான சதவிகிதத்தில் தான் இருக்கின்றார்கள்.  

என்னால் பொறுக்க முடியாமல் ஒரு முறை ஒரு முதலாளியிடம் முறையிட்ட போது "அவர்கள் வேறு நாம் வேறு" என்று பொதுவாக முடித்து வைத்து விட்டார்.  விளம்பரங்கள் கொடுத்து நேரமுகத் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரும் போதே இந்த வடிகட்டல் கண்களுக்குத் தெரியாமல் நடத்தப்படுகின்றது என்பதும் உண்மை.

கிறிஸ்துவ சமூகத்தில் உள்ளவர்களுக்கு பெரிய அளவுக்கு பிரச்சனைகள் இல்லாத போதும் இன்றும் நதி மூலம் ரீஷி மூலம் ஆராய்வ்தில் கவனமாக இருக்கின்றார்கள்.  பெரிய பதவிகளில் தனது சமூகம் சார்ந்தவர்கள், உறவுகளை வைத்துக் கொள்வதில் தான் அனைவரும் கவனமாக இருக்கின்றார்கள்.

ஆனால் இந்த இரண்டு சமூகம் மொத்தமாக பார்க்கும் போது ஒதுங்கித்தான் இருக்கின்றது. சமூக நீரோட்டத்தில் அதிக அளவு ஒன்றிணைய முடியவில்லை. ஆனால் தொழிலாளர் வர்க்கத்தில் இந்த பாகுபாடு இல்லை. மற்ற இடங்களில் எப்படியோ? இங்கு நிச்சயம் அந்த வேறுபாடுகள் இல்லை.

மைனாரிட்டி சமூகத்திற்கு எத்தனையோ நலத்திட்டங்கள் இருந்த போதிலும் அது குறிப்பிட்ட சிலரின் பைகளுக்குத்தான் இன்று வரை சென்று கொண்டு இருக்கின்றது.

இட ஒதுக்கீடு மூலம் ஒடுக்கப்பட்டவர்கள் மேலே வந்து கொண்டு இருப்பது தெரியவில்லையா என்று கேட்டால் அதுவும் முறையற்ற வழியில் பலன் அடைபவர்களைத்தான் போய்ச் சேர்ந்து கொண்டு இருக்கின்றது.

இங்கே எதுவும் பேசமுடியாது. பேசவும் கூடாது.

பாதிக்கப்பட்டவர்களும், பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பவர்களும் பரஸ்பரம் அவநம்பிக்கைகளை சுமந்தபடியே தான் இருக்கின்றார்கள். வெளியே காட்ட முடியாத வன்மத்தை துப்ப முடியாமல் தடுமாறிக் கொண்டு தான் இருக்கின்றார்கள்.

பல இடங்களில் மௌன சாட்சியாக ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன். ஆனால் எந்த நிலையில் எனக்கு இந்த சாதீயம் இதுவரையிலும் தீண்டியதில்லை.  

ஆனால் தீண்டி பாதிக்கப்படுவர்களுக்கு அலுவலக ரீதியாக என் எல்லை வரைக்கும் சென்று உதவிக் கொண்டு தான் இருக்கின்றேன்.

"பெரியார் தான் என் உண்மையான கடவுள்" என்று சொல்கின்ற உங்கள் தொடர்பில் உள்ள நண்பர்களை,பிரபல்யங்களை இப்போது உங்கள் நினைவில் கொண்டு வாருங்கள். அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் அத்தனை பேர்களும் திவ்யமாக சாமி கும்பிட்டுக் கொண்டுருப்பார்கள்.  

காரணம் கேட்டால் அது அவர்களது தனிப்பட்ட உரிமை. இது என் தனிப்பட்ட கொள்கை என்பார்கள்.

வீட்டையே திருத்த முடியாதவன் ஏன்  நாட்டைப் பற்றி மதத்தைப் பற்றி சாதியைப் பற்றி பேச வேண்டும்? எழுத வேண்டும்?

போன பதிவில் எழுதிய மருத்துவர் ராமதாஸ் அவர்கள் இந்த நிமிடம் வெளியே வந்து விட்டார்.  

எப்போதும் போல அவர் "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்று தான் செயல்படப் போகின்றார்.

இதே பா.ம.கா வை கலைஞர், ஜெயலலிதா என்று மாறி மாறி தான் வளர்த்தார்கள்.  அப்போது எல்லோருக்கும் இருந்த வாய் என்ற உறுப்பு பின்னால் போய் கிடந்தது.

மதவாத கட்சி என்று முத்திரை குத்தப்பட்ட பா.ஜ.க. கட்சியை இங்குள்ள அத்தனை கட்சிகளும் ஆதரித்ததோடு அமைச்சரவையிலும் இடம் பிடித்து பல புதிய தத்துவங்கள் சொன்னார்கள்.  அவர்கள் தான் இன்று  நரேந்திர மோடியை வேறுவிதமாக சொல்கின்றார்கள்.

கொலை செய்தவனை விட கொலைக்கு உடந்தையாக இருந்தவனையும் நமது இ.பி.கோ சட்டம் கடுமையான பார்வையில் தான் பார்க்கின்றது. ஆனால் நாம் அனைத்தையும் மறந்து விட தயாராக இருப்பதால் கட்சிகளின் கொள்கை என்பது தேர்தல் அறிக்கைக்காக மட்டுமே என்கிற ரீதியில் மாற்றம் பெற்றுள்ளது.

ஆதிக்க சாதியினர் இனச் சுத்திகரிப்பு செய்வது போல இந்த அளவுக்கு அக்கிரமம் செய்யலாமா? என்று கேள்வி வரும் போது மற்றொரு கேள்வி உங்களுக்கு வர வேண்டுமே?

ஏன் திருமாவளவனும் கிருஷ்ணசாமியும் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டமைப்பு உருவாக்கலாமே?  

ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், சீர்மரபினர் என்று சமூகத்தால் காலம் காலமாக வஞ்சிக்கப்பட்ட அத்தனை பேர்களை ஒன்று திரட்டி "பாருங்கப்பா இனிமேலாவது நாம அத்தனை பேர்களும் ஒற்றுமையாக இருந்த சமூக நீதியைப் பெற வேண்டும்" என்று சொல்ல வேண்டாமா?

செய்ய முடியுமா?  

இல்லை இரண்டு பக்கமும் இவர்களை செய்யத்தான் விடுவார்களா?  

இருவரின் தலையும் அவர்கள் உடம்பில் இருக்காது.  

அங்கேயும் பிரச்சனை. அதற்குள்ளும் ஆயிரெத்தெட்டு பிரிவினைகள்.

ஒருவரைக் கண்டால் மற்றொருவருக்கு ஆகாது.  எனக்கு கீழே தான் நீ என்று மாற்றி மாற்றி உள்ளூற பொங்கும் வன்மத்தின் வெளிப்பாடு 

இங்கே மட்டுமல்ல

ஒவ்வொரு சாதிக்குள்ளும், அதன் கிளைப்பிரிவுக்குள்ளும் பரந்து பட்டு நிற்கின்றது.  

இது இன்று நேற்றல்ல.

பூட்டனுக்கு பூட்டடென்னல்லாம் உழன்று போய் போராட முடியாமல் மண்ணோடு மண்ணாகிப் போனவர்களை சரித்திரங்களை சுமந்து தான் இந்த பூமி இன்றும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

பின்னூட்ட பெட்டிகளை மூடிக்கொண்டு, மூகமூடிகளை அணிந்து கொண்டு, பெயர் இல்லாமல், இருட்டுக்குள் இருந்து கொண்டு கல்லெறியலாம். நாரசார வார்த்தைகளால் சிலம்பு கூட சுற்றலாம்.  தவறில்லை.  

அது அந்த சமயத்தில் நமக்கு கிடைக்கும் ஒரு விதமான குரூர மனத்திருப்தி.  

அத்தோடு ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்து விட்டு மறுபடியும் இந்த நிஜ சமூகத்தில் உலவும் போது உங்களை ஏதோவொரு வகையில் இந்த சாதீயம் தாக்கத்தான் செய்யும்.

அவரவர் தங்கை அக்காக்களை ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தில் திரும்ணம் செய்து கொடுப்போம் என்று அவரவர் குடும்பத்தில் போய் சொல்லிப் பாருங்கள்? 

என்ன நடக்கும்.?  முதலில் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருப்பவர்களே பணபலம் பார்க்காமல் மன பலம் பார்த்து திருமணங்கள் நடந்தாலே மாற்றத்தின் முதல் படியில் காலடி வைத்தது போலவே இருக்குமே?

ஆனாலும் இங்கே ஏதோவொரு வகையில் மாறுதல்கள் நடந்து கொண்டே தான் இருக்கின்றது.  

மன உறுதி உள்ளவர்கள் எங்கேயோ ஒரு பக்கம் தங்களால் முடிந்த அளவுக்கு உடைத்துக் கொண்டே இருக்கின்றார்கள். ஆனால் அது சிறுபுள்ளி.  

அதுவும் கரும்புள்ளியாகத்தான் குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு மாறிவிடுகின்றது.  காரணம் இங்கே தனி மனிதனுக்கு சமூகம் தரும் அழுத்தங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றது.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் மிக தைரியமாக கலப்பு திருமணங்கள் செய்து கொண்டு இன்றும் தங்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்ய முடியாமல் தடுமாறும் எத்தனையோ நபர்களை நான் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றேன்.

மாற்று மதங்களை சமப்படுத்தி வாழ்வில் ஜெயித்து வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் இன்றும் பலரும் என் பார்வையில் இருக்கத்தான் செய்கின்றார்கள். 

ஆனால் அது வேறொரு பிரச்சனைகளையும் உருவாக்கத்தான் செய்கின்றது. என் மதத்தில் தான் பெண் (அ) மாப்பிள்ளை பார்க்க வேண்டும் போன்றதொரு வித்தியாசமான பிரச்சனைகளை தலையெடுக்கின்றது.

அப்படியென்றால் இந்த அளவுக்கு நாகரிகம் வளர்ந்துள்ளதே? இன்னுமா மாறவில்லை என்று கேள்வி வர வேண்டுமே?  

ஆமாம் உடைகளில், உணவுகளில், அன்றாட பழக்கவழக்கங்களில் போலித்தனமான நாகரிகம் வளர்ந்துள்ளது.  

மனதளவில் எந்த எந்த மாறுதலும் இல்லை.  

முன்பு கல்யாண புரோக்கர் ஊருக்கு ஊர் அலைந்து ஆட்கள் பிடித்து வந்து கொண்டு இருந்தார். இன்று அந்த வேலையை மேட்ரிமோனியல் என்ற பெயரில் பத்திரிக்கையும், கணினி வழியேயும் நாகரிக உலகம் முன்னேறியுள்ளது.

அ.மார்க்ஸ் தனது முகநூலில் தனக்கு வீடு மறுப்பதற்கான காரணத்தை எழுதியிருந்தார்.  அவர் அளவுக்கு சமூக மாறுதலுக்கு அக்கறையோடு எழுதிய கட்டுரைகளை படிக்க பதிவுலகம் தாங்குமா? என்று தெரியவில்லை.  

அவரின் நிலையே இப்படி இருக்கும் போது உங்களால் என்னால் என்ன செய்ய முடியும்? என்று நம்புகின்றீர்கள்.

எல்லோருக்கும் ஆசைகள் உடம்பு முழுக்க இருக்கிறது.  

சாதி இல்லாத சமூகம் உருவாக வேண்டும். இந்த சாதீயம் அழிய வேண்டும். மனிதர்களை மனிதராக மதிக்க வேண்டும் என்று.  ஆனால் இது அத்தனையும் நமக்கான ஆசைகள்.

இதற்கான முதல் படியில் நாம் கால் வைக்க விரும்புவதில்லை என்பது தான் உண்மை. 

காரணம் மாற்றங்கள் என்பது வெளியே நடக்க வேண்டும் என்று தான் ஒவ்வொருவரும் விரும்புகின்றோம்.

நாம் தான் மாற்றத்தை உருவாக்க வேண்டும்.  நம் குடும்பத்தில் இருந்து தான் அந்த மாற்றத்தை தொடங்க வேண்டும் என்று கனவில் கூட நினைப்பது இல்லை.

காரணம் இப்போது மாற்றங்கள் என்பது நொடிப்பொழுதில் தான் நடந்து கொண்டு இருக்கின்றது. 

நேற்று என்ன நடந்தது என்பது பற்றி யோசிப்பதற்குள் அதற்குப் பின்னால் பத்து மாற்றங்கள் நம்மை அடித்துக் கொண்டு சென்று விடுகின்றது.  நம்மை புறந்தள்ளி விடுவார்களோ? காலத்தோடு ஒட்டி ஒழுகாதவன் என்று முத்திரை குத்தி விடுவார்களோ என்ற அச்சமும், தன் இருப்பு குறித்த பயமும் ஒவ்வொருக்குள்ளும் நெருஞ்சி முள் போல குத்திக் கொண்டே இருக்கின்றது.  

இரத்தத்தை துடைத்துக் கொண்டே நாமும் வெட்கம் இல்லாமல் எதை எதையோ நோக்கி முன்னேறிக் கொண்டேயிருக்கின்றோம்.

அடிமைத்தனம் ஆதிக்க மனப்பான்மையை வளர்த்தது.  

ஆதிக்கம் தொடங்கிய போது தன் சுயநலம் மேலோங்கி நின்றது. 

சுயநலம் பெருகப் பெருக சக மனிதனை கேவலப் பொருளாக பார்க்க நாகரிகம் என்ற வார்த்தை நமக்கு பலவற்றையும் கற்றுக் கொடுத்தது.  

ஆனால் இந்த படிப்படியான வளர்ச்சியில் ஒவ்வொரு இடத்திலும் வன்மத்தோடு கலந்த பொறாமைகள் நம்மோடு தொடந்து கொண்டேயிருப்பதால் மனிதன் என்ற போர்வையில் நாட்டில் வாழும் மிருகம் போலத்தான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். 

இதுவே தான் ஒரே சாதி ஆனால் பொருளாதார ரீதியாக சம அந்தஸ்த்து என்கிற அளவில் மாற்றம் பெற்றுள்ளது.

பணபலத்தில் சமமாக இல்லாதவன் ஒரே சாதியாக இருந்த போதிலும் கூட அவனும் தள்ளி நிற்க வேண்டியது தான்.

சமூகத்தில் ஒவ்வொரு கால கட்டத்திலும் நடக்கும் மாற்றங்களை வந்து போகும் தலைவர்கள் உருவாக்குவதில்லை. 

நாம் மனதில் உள்ளே வைத்திருப்பதை, விரும்புவதை செய்து காட்டும் காரியவாதிகளாகத்தான் அவர்கள் இருக்கின்றார்கள்.

தொடர்புடைய பதிவுகள்


9 comments:

எஸ் சம்பத் said...

யதார்த்தத்தை உள்ளபடியே சொன்ன நீண்ட நெடிய பதிவு. அதையும் களம் 1, களம் 2, களம் 3 என தனித்தனியாக சொல்லி மூன்றிற்கும் தொடர்பு இருப்பதை உணர வைத்தது அருமையாக இருந்தது.
அரசியலில் இன்று சாதியில்லாமல் எந்த கட்சியும் இல்லை. இடது, வலது கம்யூனிஸ்டுகளே தொகுதிக்கேற்ற வேட்பாளரை சாதியை வைத்து தீர்மானிக்கும் போது, மற்றவர்களை என்ன சொல்வது.
மரம் வெட்டியே ஒரு கட்சியை வளர்த்தவர், இன்று பசுமை தாயகம் என்ற அமைப்பின் வழியே புதிய கன்றுகளை நட்டுக் கொண்டிருக்கிறார். அந்த NGO அமைப்பிற்கு எங்கிருந்தெல்லாமோ (அயல்நாடுகள்)நிதிகள் வந்து கொண்டிருக்கிறது என எனது பத்திரிகையாளர் நண்பர் தெரிவிக்கிறார்.
ஒரு சில சாதிகளை என்றோ அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை வைத்து ஆதிக்க சாதியினர் என்றும், இத்தனை சமூக மாற்றங்களுக்கு பின்னரும் சிலரை தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர் என்கிற நிலை தொடர்கிறது. இன்றும் பல ஆதிக்க சாதியினர், தங்கள் ஆதிக்கத்தை காண்பிக்கின்றனர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே போல் தாழ்த்தப்பட்டவர்களில் சிலர் வன்கொடுமை சட்டத்தை தவறாக பிறரை மிரட்ட பயன்படுத்துகிறார்கள் என்பதும் யதார்த்தத்தில் சில இருக்கத்தான் செய்கிறது.
தாங்கள் விரும்பினால் சாதியை பள்ளியில் தெரிவிக்காமல் இருப்பதற்கு அரசாணை வந்துவிட்டது.
//மைனாரிட்டி சமூகத்திற்கு எத்தனையோ நலத்திட்டங்கள் இருந்த போதிலும் அது குறிப்பிட்ட சிலரின் பைகளுக்குத்தான் இன்று வரை சென்று கொண்டு இருக்கின்றது.
இட ஒதுக்கீடு மூலம் ஒடுக்கப்பட்டவர்கள் மேலே வந்து கொண்டு இருப்பது தெரியவில்லையா என்று கேட்டால் அதுவும் முறையற்ற வழியில் பலன் அடைபவர்களைத்தான் போய்ச் சேர்ந்து கொண்டு இருக்கின்றது.
இங்கே எதுவும் பேசமுடியாது. பேசவும் கூடாது.
பாதிக்கப்பட்டவர்களும், பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பவர்களும் பரஸ்பரம் அவநம்பிக்கைகளை சுமந்தபடியே தான் இருக்கின்றார்கள். வெளியே காட்ட முடியாத வன்மத்தை துப்ப முடியாமல் தடுமாறிக் கொண்டு தான் இருக்கின்றார்கள்.//
நிச்சயமாக அதுதான் உண்மை.
//ஆன்மீகம் என்பதை உண்மையாகவே மிக அழகாக நெருங்கிப் பார்த்த காலமும் உண்டு.
அதை விட்டு விலகி நிற்கும் காலமும் நடு நடுவே தோன்றும்,
எது குறித்தும் விமர்சிப்பதில்லை. ஒவ்வொன்றும் அவரவர் மனம் சார்ந்த, அனுபவங்கள் சார்ந்த படிப்பினைகள் என்பதில் கவனமாக இருக்கின்றேன்.//
எனக்குள்ளும் அந்த நிலை உண்டு. ஆன்மீக நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளேன். சுயமரியாதை திருமணத்தை வாழ்த்தியும் பேசியிருக்கிறேன்.
நான் பணியிலிருக்கிற நிறுவனம் அரசு போக்குவரத்துக் கழகம் என்பதால் மட்டுமல்ல நான் படிக்கிற காலத்திலிருந்தே, ஒவ்வொரு மோதலுக்கும் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவதை வேதனையுடன், வருத்தத்துடனும்தான் பார்த்து வந்திருக்கிறேன்.
2009 கொங்கு வேளாளர் பேரவை தலைவர் தனியரசு தாக்குதல் - 25 பேருந்துகள் உடைப்பு, கல்லெறியில் ஒரு ஓட்டுனர் மரணம்
ஜூன் 2011 தலித் தலைவர் முடக்கத்தான் பாண்டி கொலை - திருமாவளவன் பந்த் அறிவிப்பு - 110 பேருந்துகள் உடைப்பு
செப் 2011 -பரமக்குடி துப்பாக்கி சூடு - 129 பேருந்துகள் உடைப்பு - 10 நாட்கள் தென் மாவட்டங்களில் 30 சதவீத சர்வீஸ் கட்
டிச 2011 - பெரியார் டேம் பிரச்சனை - 12 பேருந்துகள் சேதம்
ஜன 2012 - தேவேந்திர குல வேளாளர் தலைவர் பசுபதி பாண்டியன் கொலை - 52 பேருந்துகள் சேதம் - ஒரு வாரத்திற்கு காலையிலும் மாலையிலும் சர்வீஸ் தாமத துவக்கம், சீக்கிரம் முடிவு
ஜூன் 2012 - திமுக முன்னாள் அமைச்சர் ஐ பெரியசாமி கைது - 15 பேருந்துகள் சேதம்
ஆக 2012 - அம்பேத்கா், இமானுவேல் சேகரன் சிலைகள் உடைப்பு - 25 பேருந்துகள் சேதம் - 20 நாட்களுக்கு 20 சதவீத சர்வீஸ்கட் (அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு அம்பேத்கா் சிலையின் கீழும் பாவம் இரண்டு காவல்துறை ஏட்டுக்கள் படுத்து உறங்கி காவல் பணியில்)
அக் 2012 - மருதுபாண்டியர், தேவர் ஜயந்தி - 25 பேருந்துகள் சேதம்
காவிரி பிரச்சனை - மாநிலங்களுக்கிடையிலான பேருந்து இயக்கம் ஒரு வாரம் பாதிப்பு - சில பேருந்துகள் சேதம்
ஏப்ரல 2013 - பிஜேபி பந்த் - நாகர் கோவில், கோவையில் மொத்தம் 40 பேருந்துகள் சேதம்
ஏப்ரல் 2013 - மரக்காணம் கலவரம் - இது வரை 450 பேருந்துகள் சேதம் - சில மாவட்டங்களில் பேருந்து ஓட்டுனர்கள் ஹெல்மெட் அணிந்து பேருந்து ஓட்டும் அவலம்
இதையெல்லாம் பார்க்கிற போது மனிதன் காட்டுமிராண்டியிலிருந்து நாகரீக உலகிற்கு மாறிவிடாமல் இருப்பதற்கு என்றும் அரசியல் துணையாக இருக்கிறது என்றே தோன்றுகிறது.
ஆனால் நீங்கள் தெரிவிப்பது போல் இன்றைய குழந்தைகள் சிந்திப்பதை பார்க்கிற போது, இவைகள் மாறலாம் என்கிற நம்பிக்கை கொஞ்சம் இருக்கத்தான் செய்கிறது.

நீண்ட பதிவிற்கு வாழ்த்துக்கள்

வவ்வால் said...

ஜோதிஜி,

உங்களுக்கு புரிஞ்சதை வைத்து "கருத்து" சொல்ல முற்பட்டிருக்கிறீர்கள் பாராட்டுக்கள்! நல்லா நீட்டமா வார்த்தைகளை வளைச்சுப்போட்டு தான் சொல்லியிருக்கீங்க, சுருக்கமாக உங்கள் பதிவின் சாரம்சம் என்னவென்றால் ,

//வீட்டையே திருத்த முடியாதவன் ஏன் நாட்டைப் பற்றி மதத்தைப் பற்றி சாதியைப் பற்றி பேச வேண்டும்? எழுத வேண்டும்?//

பொத்திக்கிட்டு சும்மா இருங்க ,என்ன நடந்த உங்களுக்கு என்ன ஏன் கவலை மட்டும் படனும்னு சொல்வதே :-))

நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கிறது,ஆனால் வீட்டை திருத்த முடியவில்லை என்பதால் விருப்பப்பட்ட கருத்தை சொல்லாமல் இருக்க வேண்டும் என்பது என்ன நியதி?

முதல்வன் படத்தில் அர்ஜூன் ஊழல் செய்வதை ,சந்தர்ப்பவாத அரசியல் செய்வதை கேள்விக்கேட்டதும் உன்னால ஒரு நாள் சி.எம் நாற்காலில உட்கார முடியுமா? கேட்டு அர்ஜூன் முதலில் மறுத்ததும் ஆங் அது , இப்படித்தான் பேசுவீங்க நீ வந்து செய்யுனு சொன்னா செய்ய மாட்டிங்கன்னு சொல்ற சீன் தான் நியாபகம் வருது :-))

நீங்க கேட்ட அதே கேள்வியை நான் திருப்பிக்கேட்டால் உங்க மனசு தான் சங்கடப்படும், திருப்பூரில் நடக்காத விதி மீறல்கள், மனித உரிமை மீறல்களே இல்லை அதை எல்லாம் பார்த்துக்கொண்டு அதிலே தொழில் புழங்கிக்கொண்டு சமூக மேம்பாடு பற்றிலாம் பேசலாமானு கேட்டாக்கூட உங்களால் பதில் சொல்வது கடினம்னு எனக்கு தெரியும் ,ஹி...ஹி அடையாளம் தெரியாம கல்வீசலாம்னு ஈசியா சொல்லிட்டு கடந்து போயிடலாம் :-))

திருப்பூரில் தொழிலோடு சம்பந்தப்பட்டவங்க யாரும் நீர் மாசு ,இயற்கை பாதுகாப்பு பற்றி பேசவே தகுதியற்றவர்கள்,எல்லாவற்றையும் நாசம் பண்ணிட்டு நாசம் ஆகிடுச்சுனு கவலைப்படுவதால் என்ன பயனோ அதே பயன் தான் வீட்டை திருத்த முடியாமல் பதிவில் எழுதும் "இணைய போராளிகளின்" கதையும்.

செத்தவன் திரும்ப எழுந்து வரவா போறான் நீ ஏன்டா வீணா அழுது நேரத்தை வீண்பன்றனு கூட சொல்லலாம் ஆனால் அப்படி யாரும் இழவு வீட்டில் சொல்லிட முடியாது :-))

இழவு வீட்டில் கூட நினைச்சதை சொல்லுற கருத்து சுதந்திரமே இல்லாத உலகத்தில் நாம வாழ்கிறோமேனு கவலை இன்னும் அதிகமாகுது!

// ஆனால் என் முன் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பதிவாக்கி விட வேண்டும் என்பதில் கவனமாக இருக்கின்றேன்.

அது என் கருத்தாகத்தான் இருக்கும். மற்றவர்களுக்கு பிடிக்க வேண்டும் என்று அவசியமில்லை.//

அப்புறம் இப்படியும் சொல்லிக்கிறீங்க, நீங்க சொன்ன இக்காரணமே தான் வீட்டை திருத்த முடியாத வெண்னைவெட்டி இணைய சிந்தனாவாதிகளின் நோக்கமும், பார்த்ததை எழுதி வைப்போம் அது என் கருத்து ,அடுத்தவனுக்கு பிடிச்சா என்ன பிடிக்காட்டி என்னனு எழுதுறாங்க :-))
------------

//எப்போதும் என்னுடைய வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சமூகம் விதித்துள்ள சின்னச் சின்ன கோடுகளை தாண்டுவதையும், அழிப்பதையும் என் வழக்கமாக வைத்துள்ளேன்.
//

பெரியா ஆளா இருப்பீங்க போல , நீளம் தாண்டுதல் உயரம் தான்டுதல் எல்லாம் தெரியுமோ?

ஹி...ஹி நாம எல்லாம் இந்தக்கோட்டை தாண்டி நானும் வரமாட்டேன் நீயும் வரக்கூடதுனு கோடு போட்டு வாழுறவங்க என்ன செய்ய அவ்வ்!

# //சில எல்லைகளை முடிந்த வரைக்கும் மீறிப் பார்ப்பதுமுண்டு. . //

இந்தியா பாகிஸ்தான் எல்லையைக்கூட மீறிப்பார்த்திருப்பாரோ ?


#//ஆன்மீகம் என்பதை உண்மையாகவே மிக அழகாக நெருங்கிப் பார்த்த காலமும் உண்டு.//

நித்தியானந்தா கூட அழகா நெருங்கி ஆன்மீகத்தை பார்த்தாராம் :-))

# உங்களைப்போன்ற மாபெரும் சமூக,தத்துவ,ஆன்மீக பேரொளிகளின் சேவை நாட்டுக்கு மிகவும் தேவை , வருங்கால சனாதிபதி ஜோதிஜி வாழ்க!


திண்டுக்கல் தனபாலன் said...

/// காரணம் கேட்டால் அது அவர்களது தனிப்பட்ட உரிமை. இது என் தனிப்பட்ட கொள்கை என்பார்கள். ///

உரிமையோ உரிமை என்று ஊரெங்கும் மேடை போட்டான்...
கடமையோ கடமை என்று காரியம் செய்தால் என்ன..
காரியம் செய்தால் என்ன…?
சொல்லாதே யாரும் கேட்டால்
எல்லோரும் தாங்க மாட்டார்…


/// வீட்டையே திருத்த முடியாதவன் ஏன் நாட்டைப் பற்றி மதத்தைப் பற்றி சாதியைப் பற்றி பேச வேண்டும்? எழுத வேண்டும்? ///

'திருத்த முடியாதவன்' என்று சொல்லாதீர்கள்... திருத்தத் தெரியாதவர்கள்... அந்த நினைப்பே இல்லாதவர்கள் தான் என்றும் கூட சொல்லலாம்... வேறு வேலை வேண்டும் அல்லவா...? (புரணி-பரணி-தரணி - எனது பதிவு படித்துள்ளீர்கள் தானே...?)

/// ஒரு விதமான குரூர மனத்திருப்தி. ///

வளர்த்த விதம் அல்லது வளர்ந்த விதம்...!

///எல்லோருக்கும் ஆசைகள் உடம்பு முழுக்க இருக்கிறது. ///

நிறைய... நிறைய... நாம புகழோடு வாழ்க்கை நடத்த வேண்டும் என்பது ஆசை... ஆனா... உலகத்திலேயே நாம மட்டுமே புகழோடு இருக்கணும் என்று நினைக்கிறது....? ---> /// சுயநலம் பெருகப் பெருக சக மனிதனை கேவலப் பொருளாக பார்க்கும் நாகரிகம் //

/// நாம் தான் மாற்றத்தை உருவாக்க வேண்டும். நம் குடும்பத்தில் இருந்து தான் அந்த மாற்றத்தை தொடங்க வேண்டும் என்று கனவில் கூட நினைப்பது இல்லை. ///

"இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்..." நான் சொல்லவில்லை... P.S. வீரப்பா...! இன்று நிறைய வீரப்பாக்கள்... அவ்வளவே...!

/// முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் மிக தைரியமாக கலப்பு திருமணங்கள் செய்து கொண்டு இன்றும் தங்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்ய முடியாமல் தடுமாறும் எத்தனையோ நபர்களை நான் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றேன். ///

உண்மை...

நரம்பில்லாத நாவால் எதையும் வரம்பில்லாமல் கூறிடுவார்...
இருந்தால் வருவார் இழந்தால் பிரிவார் - நாளுக்கு நாள்தான் மாறிடுவார்...
காய்ந்த மரம்தான் கல்லடிபடுமென கண்கூடாய் நாம் பார்த்ததுண்டு...
புத்தன் இயேசு காந்தியைக்கூட குற்றம் சொல்லி கேட்டதுண்டு...
பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் போகட்டும் விட்டுவிடு...


Be Careful ! என்னைச் சொன்னேன்... ஹிஹி...

தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

குழலி / Kuzhali said...

உங்களுடைய பதிவுகளில் உங்களுக்கு அறிந்ததை உண்மையாக நம்புவதை எழுதுபவர் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

நாயக்கர் என்ற சாதியின் முன்னால் "காட்டு" என்று போட்டு காட்டுநாயக்கர் என்று சர்ட்டிபிகேட் வாங்குவது தாசில்தாரே ஆனாலும் எளிதல்ல, அனைத்து சாதி சர்ட்டிபிகேட்டிலும் கையெழுத்து போடுபவர் தாசில்தார், ஆனால் எஸ்டி சர்ட்டிபிகேட்டில் கையெழுத்து போடுபவர் கலெக்டர். எங்கள் வீட்டின் அருகே உள்ள காட்டுநாயக்கர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த எஸ்டி சர்டிபிகேட் வாங்க கடும் போராட்டங்களை மேற்கொண்டுள்ளார்கள், ஆனாலும் இன்று வரை கிடைக்கவில்லை அவர்கள் செய்வது பன்றி மேய்க்கும் வேலை. அனைத்து ஆதாரங்களும் அவர்கள் குறவர்கள் தான் என்று இருந்தும் இன்று வரை கிடைக்கவில்லை.மேலும் எஸ்டி சர்ட்டிபிகேட் வாங்குவதில் பல விதிமுறைகள் உள்ளன, கையெழுத்து போட்ட கலெக்டர் சஸ்பெண்ட் ஆகிவிடுவார். எனவே உங்கள் நண்பருக்கு இடம் கிடைத்தது எஸ்டி சர்ட்டிபிகேட்டால் தானா அல்லது அது உங்கள் அனுமானமா?

அழகப்பா பாலிடெக்னிக் அரசு பாலிடெக்னிக் தான், ஆனால் அங்கேயும் மேனேஜ்மெண்ட் கோட்டா உண்டு, அரசு கல்லூரி என்றாலும் அழகப்பா எஞ்சினியரிங் கல்லூரியிலும் மேனேஜ்மெண்ட் சீட் கோட்டா உண்டு எனவே உங்கள் நண்பர் பேமெண்ட் கொடுத்து மேனேஜ்மெண்ட் சீட் வாங்கியிருக்க வாய்ப்புண்டு. உங்கள் நண்பர் அழகப்பாவில் படித்ததாலேயே அவர் எஸ்.டி. கோட்டாவில் தான் படித்திருப்பார் என்று எப்படி சொல்கிறீர்கள்?

ஜோதிஜி said...

நாம் பேசும் போது இது குறித்து உங்களுக்குச் சொல்கின்றேன். 100 சதவிகிதம் உண்மையைத் தான் நான் எழுதுவேன் என்ற உங்கள் நம்பிக்கையை எப்போதும் போல காப்பாற்ற நினைப்பேன் என்பதையும் மனதில் வைத்திருங்க குழலி.

Anonymous said...

yow wavvalu nee yenya jothijiya pottu kuthikitte kidakkara?
avaruthan unakku pathil solrathe illaiye
appuram enna ..........kku nee commantukittu irukkara !!!!????

ஜோதிஜி said...

வவ்வால்

ஏமாற்றம் தந்த விமர்சனம்.

பேசுவதற்கு நிறைய மையக்கருத்துக்கள் இங்கே இருந்தாலும் என்னை கலாய்ப்பதில் உங்களுக்கு திருப்தி வந்து விட்டது.

ஜோதிஜி said...

தனபால் நீங்க தான் எழுதியதா என்று ஆச்சரியப்பட்டேன்

ஜோதிஜி said...

என் பதிவை விட உங்கள் நீண்ட ஆதார பூர்வமான விமர்சனத்திற்கு நன்றி சம்பத்