Monday, May 20, 2013

கற்றுக் கொண்டால் தப்பில்லை


எனக்கு தமிழ் இணையம் அறிமுகமான நேரத்தில் திரட்டிகள் எதுவும் அறிமுகமாகவில்லை. அது குறித்த தேடலும் என்னிடமில்லை. அது குறித்து தெரிந்தால் தானே தேட முடியும்?

வேர்ட்ப்ரஸ் அறிமுகமானதும், எழுதியதை மாட்டி வைக்க/வெளியிட கற்றுக் கொண்ட போது அதுவே எனக்கு அப்போது இருந்த மனோநிலையில் போதுமானதாக இருந்தது. 

தொடக்கத்தில் தினந்தோறும் எழுதி வெளியிட்டுக் கொண்டிருந்தேன். எழுதுவதென்பது மற்றவர்களைப் போல மிக கடினமாக எனக்கில்லை. 20 வருடங்களுக்குப் பின் தமிழிலில் டைப்புவதும் எளிதாகவே இருந்தது. முழுக்க முழுக்க திருப்பூர் குறித்த வாழ்க்கை அனுபவங்கள்.

வேர்ட்ப்ரஸ் ல் எழுதி மாட்டிய பின்பு அடுத்தடுத்து ஒவ்வொருவராக வந்த போதிலும் இவர்களுக்கு எப்படி இந்த தளம் தெரிகின்றது என்பதே எனது ஆராய்ச்சியாக இருந்தது. 

ஒரு மாதத்திற்குள் மனதில் இருந்த கடந்து வந்த வாழ்க்கை அனுபவங்களில் பெரும்பாலான சம்பவங்களை எழுதி முடித்து இருந்தேன். நம்மைப் போல ஏராளமான பேர்கள் இதே போல் எழுதிக் கொண்டு இருக்கின்றார்கள் என்பதே இரண்டு மாதத்திற்கு பின்பே தெரிய வந்தது.

அந்த சமயத்தில் எனக்கு அறிமுகமானவர் இதை படித்துப் பாருங்க என்று உண்மைத்தமிழன் பதிவின் இணைப்பை கொடுத்தார்.  

1992ல் வாசிப்பதை நிறுத்திய நான் 2009 ல் தான் மீண்டும் வாசிப்பு பக்கமே வர முடிந்தது. இடைப்பட்ட  வருடங்களில் வாசித்த வாரப் பத்திரிக்கைகளும், தினசரிகளும் சொற்பமே. இடையில் திருப்பூரில் உள்ள நூலகம் மூலம் புத்தகம் எடுத்து வந்து படிக்க முற்பட்ட போது அதுவும் தோல்வியில் தான் முடிந்தது.

முதல் இருபது வருடங்கள் வெறுமனே பாடப்புத்தகங்கள், அத்துடன் ஊரில் இருந்த நூலகத்தில் இருந்த புத்தகங்கள் என்பதோடு சமூகம் குறித்த எந்த அறிவும் இல்லாமல் புத்தக அறிவைக் கொண்டு தான் இந்த சமூகத்தின் உள்ளே வர முடிந்தது.  

அடுத்து வந்த 18 ஆண்டுகள் வாசிக்க நேரம் என்பதே இல்லாமல் முழுமையாக மக்களோடு மக்களாக பழகும் சூழ்நிலை அமைந்தது.  

இரண்டும் வெவ்வேறு  துருவங்கள்.

புது இடம், புதிய மனிதர்கள். 12 கிலோ மீட்டரில் இருந்த காரைக்குடிக்கு கல்லூரி சமயத்தில் தான் வர முடிந்த எனக்கு மாவட்டங்கள், மாநிலங்கள் தாண்டிய பயணம் என்பது இறுதியில் பல நாடுகள் வரைக்கும் சென்றாக வேண்டிய சூழ்நிலையை அடுத்தடுத்து என்னை நகர்த்திக் கொண்டிருந்தது. 

மொழி, கலாச்சாரம், பழக்க வழக்கம் அப்படியே மாறிப் போயிருந்தது. 

ஏற்றுக் கொள்ளவும் முடியாமல், ஊருக்கு திரும்பவும் முடியாமல் திரும்ப திரும்ப காலுக்குள் சிக்கிய பந்து போல தடுமாறிய காலமது. 

பெண்கள் மட்டுமல்ல.  ஆண்கள் கூட வீட்டை விட்டு தாண்டாமல் வளர்ந்து வெளியே வரும் போது ஏறக்குறைய ஒரு பெண்ணின் நிலையில் தான் தொடக்க வாழ்க்கை அமையப் பெறுகின்றது. 

வாழ்ந்த ஊர் நினைவுகள் முழுமையாக மனதில் இருந்து மறையவே மூன்றாண்டுகள் தேவைப்பட்டது.

காரைக்குடி மொழியை மாற்றிக் கொள்ள ஆறு ஆண்டுகள் தேவைப்பட்டது. 

தொழில் ரீதியாக தன்னை நிலைப்படுத்திக் கொள்ளுதல், போட்டியில் இருந்த தப்பித்துக் கொள்ள, முந்திவர, கற்றுக் கொள்ள வேண்டிய நடைமுறை தந்திரங்கள் என்றும் படிப்படியாக அறிமுகமான பின்பே வாழ்க்கை குறித்த ஒரு தெளிவு வந்தது. 

ஊர் மறந்தது. பணம் குறித்த தேடலே வாழ்வின் தேவையாக மாறிப் போனது.

பட்ட பின்பே ஞானம் அல்லது அனுபவமே ஆசிரியர் என்பார்களே அது தான் இது.  

திருமணம், மனைவி, குழந்தைகள், உயர்பதவி, சொந்த தொழில், வெற்றி, தோல்வி, என்று மாறி மாறி காட்சிகள் நகர்ந்து கொண்டே செல்ல ஓய்வு நேரமும் உணர வேண்டிய நேரமும் கிடைக்க எதிர்பாராத சூழ்நிலையில் இந்த தமிழ் இணையம் அறிமுகமானது.

அப்போது தான் வாசிப்பதற்கான நேரமும் முழுமையாக கிடைத்தது. .  வாசிக்க வேண்டிய தேவைகள் என்னை படிப்படியாக நகர்த்தியது.

மீண்டும் விருப்பமான பலவற்றையும் வாசிக்க நேரம் கிடைத்தது. 

இணையம் மூலம் அதிர்ஷ்டவாய்ப்பாக நல்ல நண்பர்கள் முதல் இரண்டு மாதங்களில் இருந்தே கிடைக்கத் தொடங்கினார்கள். இன்று மிக நெருக்கமான நிலையில் நூற்றுக்கணக்கான பங்காளிங்க என்னோடு தொடர்பில் இருக்கின்றார்கள்.

அவர்கள் மூலம் பலவற்றையும் கற்றுக் கொள்ள முடிவதும், பகிர்ந்து கொள்ள வாய்ப்பு அமைந்ததும் ஜென்ம புண்ணியம் போலத் தான் என்று ஒவ்வொரு சமயமும் மனதில் நினைத்துக் கொள்வதுண்டு. காரணம் முதல் நாள் படித்த எதுவும் அடுத்த நாள் மனதில் நிற்பதில்லை. தொடர்ந்து வரும் நாளில் உருவாகும் மன அழுத்தத்தில் அத்தனையும் மறந்து புதிய வாழ்க்கையின் பரிணாமங்களை ஒவ்வொரு முறையும் அறிமுகம் செய்து விடுகின்றது.

கண்ட அனுபவங்களே என் எழுத்தாக மாற்றி விட எழுதுவதற்கு இயல்பானதாக அமைந்து விடுகின்றது.

அதிகமாக சேர்த்த பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தடுமாறிக் கொண்டிருப்பவர்கள்,

தேவைக்கு அதிகமான பணத்தை வைத்திருப்பவர்கள்,

ஐந்து இலக்கம் முதல் ஆறு இலக்கம் முதல் சம்பளமாக வாங்கிக் கொண்டிருப்பவர்கள்,

மாதச் சம்பளத்தை பத்து நாளைக்குள் செலவழித்து விட்டு அட்வான்ஸ் எழுதி வந்து கேபினுக்கு வெளியே நிற்பவர்கள்,

மாதம் முழுக்க வேலை செய்தும் 9000 ரூபாயை தாண்ட முடியாதவர்கள்

எப்படி உழைத்தாலும் 5000 ரூபாய்க்கு மேலே பார்த்திராதவர்கள் என்று அத்தனை தரப்போடும் தினந்தோறும் உறவாட வேண்டிய வினோத கலவையோடு அமைந்த வாழ்க்கையில் கற்றுக் கொள்ள நிறைய சந்தர்ப்பங்கள் இயல்பாகவே அமைந்துள்ளது.

அதுவே எழுத நிறைய எழுத்துக்களை தந்து கொண்டேயிருக்கின்றது.

வாழ்ந்து கொண்டிருப்பவனின் அனுபவங்கள் வாசிப்பவனுக்கு புரிய வேண்டும் என்ற அவசியமில்லை. அங்கே தான் நம்ப முடியாதவற்றை எழுதுகின்றாய். உன் உலகம் குறுகிய வட்டத்திற்குள் உள்ளது என்பது வரைக்குமான உரையாடலை நீட்டித்துக்கொண்டே செல்கின்றது.

எனக்கு முதன் முதலாக வாசிக்க கிடைத்த உண்மைத்தமிழன் எழுத்தென்பது வலைபதிவின் தினந்தந்தி போன்றது.  வலைபதிவுக்குள் முதன் முதலாக உள்ளே வருபவர்கள் முதல் நன்றாக அறிமுகமாகி பிற்பாடு எழுத கற்றுக் கொண்டவர்கள் வரைக்கும் எவருக்கும் ஏதோவொரு வகையில் சுவராசியத்தை தரக்கூடியவர் 

இன்னமும் உண்மைத்தமிழன் பதிவுகளில் உள்ள ஆர்வம் எனக்கு குறைந்தபாடியில்லை.

நம்முடைய தமிழர்களின் வரலாற்றைப் பற்றி எழுதிக் கொண்டிருந்த போது அவர் மேல் உள்ள பிரியத்தின் காரணமாகவும், பொருத்தமான தலைப்பாக இருந்த காரணத்தாலும் உண்மைத்தமிழன் என்ற பெயரில் ஒரு கட்டுரையும் எழுதினேன்.

முகமும் முகவரியும் தெரிந்துவிடக்கூடாது என்ற இந்த இணைய உலகில் சென்னைத்தமிழனாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் இன்றும் முழுமையான வெள்ளந்தியான மனுஷன் உண்மைத்தமிழன். ஆனாலும் என் நீநீண்ண்ட பதிவுகளைப் பார்த்து விட்டு நீங்க என்ன உண்மைதமிழன் பங்காளியா என்று கேட்டவர்களும் இருந்தார்கள்.

நான் தொடக்கத்தில் எழுதத் தொடங்கிய போது தீர்க்கமான  கொள்கைகள் எதையும் எடுத்துக் கொள்ளாமல் மனதில் தோன்றிய அனைத்தையும்  எழுத வேண்டும் என்ற நோக்கத்தில் தான் எழுதிக் கொண்டிருந்தேன்.

ஆனால் எழுத்து நடை, பிழைகள், குறிப்பாக இலக்கண பிழைகள் என்று ஒவ்வொன்றாக பலரின் விமர்சனத்தின் மூலம் என்னைத் தாக்கத் தொடங்கியது.

நிகழ்காலம், இறந்த காலம், எதிர்காலம் மூன்றையும் குழப்பி அடித்து குழிப்பணியாரம் கணக்காக சுட்டு வைக்க பலரின் அறிவுரைகள் என்னை பதம் பார்க்கத் தொடங்கியது.

ஆகா ஒரு ஸ்பீட் ப்ரேக் தேவை போல என்று அடுத்த கட்டத்திற்கு நகர முடிந்தது.

எழுதிக் கொண்டிருந்த சொந்த விசயங்களை நிறுத்தி விட்டு புத்தகங்களை படித்து அதில் உள்ள விசயங்களை என் பார்வையில் எழுதத் தொடங்கிய போது கியர் மாற்றத் தேவையில்லாத நிலையில் பறக்கத் தொடங்கியது.  அங்கும் பிரச்சனை வேறு விதமாக உருவாகத் தொடங்கியது.

கேள்வி கேட்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் அது குறித்து மேலும் தெரிந்து கொள்ள இன்னும் பல புத்தகங்களை தேடிப்பிடித்து ஓடத் துவங்க ஓட்டம் இன்னும் வேகமாக மாறியது.

ஒரே வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தால் உலகம் என்ன நினைக்கும்? என்று அன்றாட நிகழ்வுகளை என் பார்வையில் எழுதத் தொடங்கிய போது தான் எழுத்து கொஞ்சம் கைவசமாகி உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.  அதுவே குழந்தைகள் குறித்த அனுபவங்களை எழுதத் தொடங்கியபோது தான் படிப்பவர்களின் ரசனைக்கும் எழுதுபவனின் ரசனைக்கும் இடையே உள்ள மெல்லிய கோடு தரும் சுகத்தையும் உணர முடிந்தது.

மூன்று படிகளை தாண்டி வந்த போது சமூகம் குறித்து ஆழமான கட்டுரைகளை எழுத வேண்டும் என்று தோன்றியது.

அலட்சியமான போக்கு, அவசர கதி இல்லாமல் என்னாலும் பல கட்டுரைகளை எழுத முடிந்ததுள்ளது.

ஆனால் கருத்து விவாதங்கள், மோதல்கள் என்று இன்று வரையிலும் நான்கு பக்கத்தில் இருந்தும் ஏவுகணைகள் போல தாக்கிக் கொண்டே தான் இருக்கின்றது.

இறுதியாக உனக்கு அரசியலும் தெரியாது, வரலாறும் தெரியப்போவதில்லை என்பது வரைக்கும் மகுடங்கள் வாங்கியாகி விட்டது.

சாதி, மதம், அரசியல் பற்றி எழுதினால் எளிதில் ஒரு முத்திரை குத்தி முச்சந்திக்குள் நிறுத்தி கும்மத் தொடங்கி விடுகின்றார்கள். உடன்பிறப்புகள் அத்தனை பேர்களும் இன்று வரைக்கும் ஜெ ஆதரவாளன் இவன் என்று வம்புக்கு இழுக்க சும்மா ஒரு கடிதம் வரைக்கும் கொண்டு போய் நிறுத்தியது.

ஆனால் நாங்கள் கொடுத்த முத்திரை தான் உன் முகத்திரை என்று ஒரு பக்கம் வாறத் தொடங்கி வரும் வாந்தி பேதிகளை கண்டு கொள்ளாமல் என் கடன் பணி செய்து கிடப்பதே என்று எழுதினாலும் குத்துக்கள் ஏதோவொரு பக்கத்தில் இருந்து இன்றும் வந்து கொண்டேதான் இருக்கின்றது.

குத்து வாங்கிய களைப்பு தீர்ந்தவுடன் மீண்டும் எந்திரித்து எழுதத் தொடங்க இவனைத் திருத்த முடியாது என்று ஒதுங்கி விடுகின்றார்கள்.

ஆனால் அடுத்த வாய்ப்புக்காக காத்திருக்கின்றார்கள்.

குறிப்பாக மருத்துவர் ராமதாஸ் அவர்கள் குறித்து எழுதியதற்குப் பிறகு வந்த எதிர்வினைகள் மிக அதிகம்.  குழலி என் மனதில் உள்ளதை மிகத் தெளிவாக எழுதியிருந்தார்.

மதம் பற்றி எழுதிய போது கோவி கண்ணன் சொல்லிய வார்த்தை பெரிய அங்கீகாரமாக எனக்குத் தெரிந்தது.


ஜோதிஜி நல்லப் பதிவு, மற்றவங்களுக்கு பிடிக்குமா, தன்னைப் பற்றி என்ன நினைப்பாங்க என்கிற எண்ணங்களைக் கடந்து இதை எழுதி இருக்கிங்க, பாராட்டுகள், பதிவுலகத்தில் இதெல்லாம் நமக்கு கிடைக்கும் நல்ல வாய்ப்பு.
மொத்தத்தில் எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுத முடியும்.

ஆனால் அதற்கான உழைப்பு தேவை என்பதை இந்த நான்கு ஆண்டுகள் எனக்கு உணர வைத்துள்ளது.

வாழ்க்கையில், அலுவலகத்தில், தொழிலில் நடந்த அதே படிப்படியான வளர்ச்சி.

திடீரென்று எதுவும் என் வாழ்வில் நடந்ததில்லை.  இடைவிடாத முயற்சியும் தனிப்பட்ட ஆர்வமான துரத்தலும் தான் இன்றைய வாழ்வில் பலநிலைகளை என்னிடம் கொண்டு வந்து சேர்த்துள்ளது.

ஆனால் தொடக்கம் முதலே மிகத் தெளிவான பாதையை வகுத்துக் கொண்ட பலரையும் என் வாழ்வில் சந்தித்துள்ளேன். தன் வாழ்க்கை, தன் நோக்கம் என்பதில் மட்டும் சரியாக இருந்து அமைதியாக சென்று கொண்டு இருப்பவர்கள் அநேகம் பேர்கள்.

அதே போலத்தான் இந்த வலைபதிவின் தொடக்கம் முதல் இன்று வரையிலும் மிகத் தெளிவான பார்வையில், பாதையில் மிகுந்த தன்னம்பிக்கையோடு ஒருவர் மேலேறி வந்து கொண்டு இருக்கின்றார்.  

அவர் தான் நிசப்தம் என்ற தளத்தில் எழுதிக் கொண்டிருக்கும் வா. மணிகண்டன்

2005 முதல் எழுதிக் கொண்டிருக்கின்றார்.

இவரின் மின்நூல் சைபர் சாத்தான்கள்

கடந்த நான்கு ஆண்டுகளில் நான் படித்த ஏராளமான பதிவுகளில் பிடித்த, பிடிக்காத, ஏற்றுக் கொள்ளவே முடியாத பல கருத்துக்களை தாண்டி வந்தாலும் வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பு வந்த போது பலரின் பதிவுகளை ஒரு ஆராய்ச்சி ரீதியான பார்வையில் வைத்து பார்க்கத் தோன்றியது. 

இரண்டு தடவை வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பில் இருந்த போதும், அதற்குப் பிறகும் பலரின் பதிவுகளை அவர்கள் எழுதத் தொடங்கிய காலம் முதல் ஒவ்வொரு பகுதியாக எடுத்து பார்த்துக் கொண்டே வருவதுண்டு. இந்த ஆராய்ச்சியில் இதுவரையிலும் 50 பதிவுகளுக்கு மேல் ஆராய்ந்ததுண்டு.

எழுதிய விதம், சொன்ன விதம், எடுத்துக் கொண்ட விசயம் என மூன்றையும் கணக்கில் வைத்து பார்த்த நிறை குறைகளைத் தாண்டி அதிக ஆச்சரியத்தை தந்தது தான் நிசப்தம். 

படிப்பதற்கு ஏராளமான விசயங்கள்.
படிப்பதற்கு ஏற்ற வடிவமைப்பு
ரசனையோடு பார்க்கும் விசயங்களை படைக்கும் தன்மை.
திரைப்பட விமர்சனம் என்று கொன்னு கொலையெடுக்காமல் விட்டது
இதைவிட அளவோடு தரும் அழகியல்.

தீராத ஆச்சரியமாக எனக்குத் தெரிகின்றார்.

ஏற்கனவே மூன்று பேர்கள் இந்த தளத்தைப் பற்றி என்னிடம் சொல்லியிருந்தார்கள்.  சென்னையில் இருக்கும் நண்பர் முரளி திருப்பூர் வந்த போது அவரும் வா. மணிகண்டன் தளம் படிங்க. குறிப்பாக உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும் என்ற போது சுவராசியத்தின் எல்லை விரிவிடைந்து கொண்டே சென்றது. 

சொன்னவர் எவரும் அந்த தள இணைப்பு தரவில்லை.

எப்போதும் போல கூகுளில் தேடிய போது வந்த விழுந்த தளத்தை சொடுக்கி உள்ளே நுழைந்து வெறுமனே பார்த்து விட்டு வந்து விட்டேன்.

தள வடிவமைப்பும், தளத்தின் பெயரும் ரொம்பவே பிடித்துப் போயிருந்தது. 

கடந்த இரண்டு வாரத்தில் கிடைத்த ஓய்வில் மனதில் ஏற்கனவே இருந்த பல தளங்களை பல பதிவுகளை பார்த்துக் கொண்டு வந்து ஒரு வட்டம் போல முடிந்து நின்றது.  

சிலர் தொடக்கத்தில் எழுதியே ஆக வேண்டும் என்ற நடைவண்டி பயணத்தை தொடங்கியிருக்கிறார்கள். சிலர் கவிதை என்ற பெயரில் ஒரு கதக்களியே நடத்தியிருக்கின்றார்கள். எதைப் பற்றி எழுதுவது என்றே தெரியாமல் சிலர் டைரி போல கிறுக்கியும் அதையும் எழுத்தென்று வலையேற்றியிருப்பதை பார்த்த போது தான் பல விசயங்கள் புரிந்தது.

ஏறக்குறைய வலைபதிவில் ஒவ்வொருவருக்கும் ஒரு வருடங்கள் கழித்தே இந்த எழுத்துக்கள் வசமாகியிருப்பதை புரிந்த போது தான் மணிகண்டனின் பலம் புரிந்தது.

தொடக்கம் முதலே இது பாதை

இது தான் என் பாதை என்பதை தீர்மானமாகவே மனதில் வைத்திருப்பார் போல.

ஒழுங்கான படிப்பு, தொடர்ச்சியான உயர்படிப்பு, நேரத்தில் கிடைத்த வேலை, சரியான நிலையில் நடந்த திருமணம் என்று படிப்படியான வாழ்க்கையில் எல்லை விரிவிடைந்து வந்த போதிலும் அதன் சுகத்தில் திளைக்காமல் தனது சுயத்தையும் இழக்காமல் எனக்கு எழுதுவது பிடிக்குது.  பிடிச்சா படி. நான் விமர்சனத்தை எதிர்பார்க்கல என்கிற அதீத அவரின்  தன்னம்பிக்கை தான் எனக்கு அதிக ஆச்சரியத்தை தந்தது.

வட்டம், சதுரம் என்று எதையும் உருவாக்க விரும்பாமல் எழுதுவதே என் நோக்கம் என்று வரையறை வைத்துக் கொண்ட காரணத்தால் இன்று நினைத்தவுடன் நினைத்த விசயங்களை இவரால் எழுத முடிகின்றது.

எவருக்கும் இவர் எழுதிய விதம் புரியும்,

கற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்கும் பிடிக்கும் இவரின் எழுத்து நடை.

மற்ற எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு ஒரு கடமை போல தினந்தோறும் நிசப்தத்தின் உள்ளே குதித்து விட்டேன்.  அலுவலகம் முடிந்தது வந்த பிறகு நள்ளிரவு வரைக்கும் ஒரு யோகி போல படிக்கத் தொடங்க மனதின் உள்ளே அலறல் தொடங்கியது. 

அவரின் குறிசொல்லில் வைத்துள்ள பதிவுகளை ஒவ்வொன்றாக படித்துக் கொண்டே வந்த போது தான் இவரை இத்தனை நாளும் எப்படி நாம் பார்க்காமல் விட்டுள்ளோம் என்று ஆதங்கம் உருவானது.

என் மனைவியின் சமையலை எங்கள் குடும்பம் முழுக்க பாராட்டித்தள்ளுவார்கள். மற்ற மருமகளை விட என் அம்மாவுக்கு இவர் என்றால் தனி கவனிப்பு. நான் மட்டும் ஒன்னுரெண்டு பரவாயில்லை கணக்காக பொருமும் போது அம்மா தவறாமல் ஒன்றை ஒவ்வொரு முறையும் சொல்லுவார்.  

"உன்னையும் உங்கப்பனையும் உலகத்திலே ஒருத்தராலலேயும் திருப்தியே படுத்த முடியாது. ரெண்டு பேருக்கும் ஜெயிலு தான் லாயிக்கு" என்பார்.  

காரணம் முழுமையாக திருப்தியடையாதவர்களின் வாழ்க்கையில் தேடல் இருந்து கொண்டே தான் இருக்கும்.  ஆனால் அப்பாவுக்கு அந்த தேடல் இல்லை.  உணவின் ருசி என்ற சின்ன வட்டத்திற்குள் அவர் வாழ்க்கையை முடித்துக் கொண்டு விட்டார்.

என்னுடைய தேடல் கடலை தாண்ட வைத்துள்ளது. பல சமயம் கண்ணீரையும் விட வைத்துள்ளது. 

இது போன்ற சூழ்நிலையில் உள்ளவனுக்கு 70 சதவிகிதத்திற்கும் மேல் மணிகண்டன் எழுதிய கட்டுரைகள் அனைத்தும் பொக்கிஷமே என்று சொல்லும் போது உங்களால் என்ன நினைக்கத் தோன்றும்?

என்னுடைய தளத்தில் ஒருவர் விமர்சனம் மூலம் கேட்டிருந்தது இன்றும் நினைவில் உள்ளது.  நீங்க முழு நேர வலைபதிவராக இருப்பீங்க என்று நினைத்துக் கொண்டு இருந்தேன் என்றார். 

காரணம் இங்கே 70 சதவிகித மக்கள் அலுவலக சூழ்நிலையில் தான் வலையில் மேய்கின்றார்கள். வந்த வேகத்தில் பொருத்தமான தலைப்பு என்று பார்க்காமல், பரபரப்பான தலைப்பிற்குள் நுழைந்து விட்டு நகர்பவர்கள் தான் அதிகம். ஆசைப்பட்டு தமக்கென்று ஒரு வலைபதிவை தொடங்குபவர்கள்  தொடர்ந்து எழுத முடியாத நிலைக்கு போய் விடுகின்றார்கள். இறுதியில் அனானி ரூபத்தில் பேயாய் அலையத் தொடங்குகின்றார்கள்.

வாசிப்பதில் உள்ள ருசியை படித்த பின்பு அனுபவிக்கும் போது தான் தெரியும்.
எழுத்து என்பது எழுதி எழுதி முன்னேறும் போது தான் புரியும்.

வீட்டில் இருந்தபடியே படிப்பவர்கள், எழுதுபவர்கள் மிக மிக சொற்பமே.  

கடந்த இரண்டு வாரமாக மணிகண்டனின் ஒவ்வொரு கட்டுரையையும் தினந்தோறும் என் மின் அஞ்சலில் வந்து கொண்டிருக்க எனக்கும் குழப்பம் அதிகமாகி விட்டது.  இது எப்படி சாத்தியம் என்று அழைத்துப் பேசிய போது தான் அவரின் வேலை, பதவி, பின்புலம் போன்றவற்றை ஓரளவிற்கு புரிந்து கொள்ள முடிந்தது.

என்னை ஒப்பிட்டுக் கொண்டு மணிகண்டனை பேசக் காரணம் எழுதுவது என்பது சிலருக்கு ஏதோவொன்றினால் உந்துதல் மூலம் உருவாகின்றது. சிலருக்குத் தான் அது இயல்பாகவே அமைந்து விடுகின்றது.

மணியின் திறமையென்பது பத்திரிக்கைகளுக்கு தேவைப்படும் பெருந்தீனி.  ஆனால் தற்போது அது போன்ற வாய்ப்பில்லை.  பரபரப்பு உலகில் பாந்தமான வார்த்தைகளும், தடவிச் செல்லும் சுகமும் உள்ள கட்டுரைகளை பெரும்பாலான பத்திரிக்கைகள் விரும்புவதில்லை.

பெரும் முதலீடு ஒரு பக்கம். போட்டிகள் அதிகமானது மறுபக்கம்.

இன்றைய மக்களின் மனோபாவமும் மாறிவிட்டது. நீ வாசிப்பா என்பதே யாசிப்பதைப் போல கேட்கும் நிலையில் இன்று பதிப்புலகம் இருக்கின்றது. புத்தக வாசிப்பு என்பது அருகிப் போய்விட்டது என்பதை விட இது தேவையா? என்கிற அளவிற்கு மக்களின் மனமும் மாறிவிட்டது. 

இவர் எழுதிய மின்னல் கதைகள் என்ற பக்கம் மட்டும் நான் இன்னமும் செல்லவில்லை.

எல்லா பக்கமும் போய்விட்டு வந்து விட்டோம்? இது ஒன்று தான் பாக்கி என்று நம்மால் முடியுமா என்று நானும் ஒரு சிறிய தொடர் போல ஒன்றை எழுதிப் பார்த்தேன்.

இந்த தளத்தில் எழுதியதில் அதிகப்படியான பாராட்டுகளை கொண்டு வந்து சேர்த்தது என்ற போதிலும் இன்னமும் அது குறித்த அக்கறையின்றி தான் இருக்கின்றேன். 

நிசப்தத்தை முழுமையாக படித்து முடித்து விட்டு மணி உங்களிடம் பேச வேண்டும் என்று குறுஞ்செய்தி கொடுத்தேன்.

காரணம் "என்னடா இந்தாளு நம்மள மாதிரி காரஞ்சாரமான ஆளுக்கு உள்ள தீனி போடாமல் இருக்கிறாரே" என்று யோசித்த போது தான் புரட்சி குறித்த ஒரு பதிவு வந்து என் மின் அஞ்சலில் விழுந்து கிடந்தது.  

அந்த நிமிடமே படித்து விட்டு அழைத்தேன். 

படிப்பவனுக்கு ஏதோவொரு வகையில் மனதிற்குள் ஒரு தாக்கத்தை உருவாக்கும் அளவிற்கு நீங்கள் இனி எழுத வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன்.  

அது சரியா? தவறா? என்று எனக்குத் தெரியல. 

எல்லா சமயத்திலும் தாக்கத்தை உருவாக்கிக் கொண்டேயிருந்தால் "வாழ்க்கை முழுக்க திசையெங்கும் கொட்டு முரசே" என்பதாக மாறிப் போய்விடும்.

அதற்கென்று ஆட்கள் தனியாக இருக்கின்றார்கள் என்று மனதில் மணி மனதில் நினைத்திருக்கக்கூடும்.  

எழுத்தாளர் சுஜாதா பற்றி இன்று பலரும் பல்வேறு வகையில் சிறப்பாக பேசுகின்றார்கள். நான் ஒரு விசயத்தில் அதிகமாக ஆச்சரியமாக அவரை பார்த்ததுண்டு.  தான் பணிபுரிந்த வேலையில் இருந்து கொண்டே, இலக்கிய கூட்டங்கள், அலுவலக கூட்டங்கள், பெங்களூருக்கும் சென்னைக்கும் அலைந்து கொண்டே இத்தனை விசயங்களையும் சாதித்துள்ளார். 

இது தவிர திரைப்படத்துறையிலும் தனது பங்களிப்பை செலுத்தியதோடு இப்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் வாக்கு எந்திரத்தை உருவாக்கிய பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதோடு அது சார்ந்த சச்சரவுகளுக்காக நீதிமன்றம் வரைக்கும் தங்கள் ஆய்வுக்குழுவின் நம்பகத்தன்மையை எடுத்து வைத்தும் சாதித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள எழுத்தாளர்களில் பலரும் அரசு "அலுவலகத்தில்" பணிபுரிந்தபடியே இந்த எழுத்துலக சேவையை செய்து கொண்டு இருக்கின்றார்கள்.  

ஆனால் சுஜாதா இருந்தது அரசாங்கத்தோடு பாதுகாப்பு சம்மந்தப்பட்ட ஆராய்ச்சி ரீதியான துறை. 

அப்படிப்பட்ட முக்கியத்துவம் பெற்ற துறையில் ச்சும்மா ஜல்லியடிப்பவர்கள் காலம் தள்ள முடியாது. வெளியே தள்ளி விடுவார்கள். இது போன்ற நிலையில் இருந்து கொண்டே எழுத்துலகில் சாதித்து இருப்பது என்பது எல்லோராலும் முடியுமா? என்பது கேள்விக்குறியே.

எல்லோருக்கும் உள்ள அதே 24 மணி நேரம் தான்.  ஆனால் மனுஷன் சாதனையாளன்.  

தினந்தோறும் எழுதும் மணிகண்டனைப் பார்க்கும் போது எனக்கும் இப்படித்தான் மனதில் தோன்றியது.  இவரின் இப்போதைய வயதில் எனக்கு திருமணமே ஆகவில்லை. ஆனால் இன்று எனக்கு எப்படி எழுத வேண்டும் என்று கற்றுத் தந்துள்ளார்.

இந்த முறை உயிர்மை மற்றும் சுஜாதா அறக்ககட்டளை மூலம் மணிகண்டனுக்கு வழங்கப்பட்ட விருது மிக மிக பொருத்தமாகவே இருக்கின்றது.

22 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

முந்தைய பதிவில் மனதில் உருவான ஒரு புயல் - இது தான் என்பது, யோசித்து வைத்த சிறிய யூகம் சரி...

நிசப்த விமர்சனம் அருமை...

வா. மணிகண்டன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

இராய செல்லப்பா said...

இன்னொருவரை வாய்விட்டுப் பாராட்டுவதே அருகி விட்ட இன்னாளில், மணிகண்டனை இவ்வளவு தெளிவான காரணங்களுக்காகப் பாராட்டும் உங்களைப் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.

Avargal Unmaigal said...

செல்லப்பா அவர்கள் சொன்னதையே இங்கே நான் வழிமொழிகிறேன்

அகலிக‌ன் said...

வா மணிகண்டன் தளத்தில் எல்லா விதமான உணர்வுகளும் காணக்கிடைக்கும், அதே நேரம் அவர் Comment கட்டம் வைக்காதது என்னை மிகவும் கவர்ந்தது. "சித்திரமும் கை பழக்கம் செந்தமிழும் நா பழக்கம்" உண்மைதான் என்றாலும் அது கைகூடுவது வெறும் பழக்கம் மட்டுமே காரணம் அல்ல என்பது வா மணிகண்டனை வாசிக்கையில் உறுதிபடுகிறது. மற்ற தளங்களைப்பற்றி இத்தனை ஆழமான கவனிப்பும் அதை பாராட்டுதளோடு பகிர்ந்துகொண்டதும் பெருமைக்கும், பாராட்டுதலுக்கும் உறியது.

pichaikaaran said...

உள்ளத்தில் இருப்பதை கொட்டி தீர்த்திருக்கிறீர்கள்..அனைத்தும் இனிமையான இருந்தன...உண்மைத்தமிழனை பற்றி எழுதியது 100% உண்மை...

http://thavaru.blogspot.com/ said...

நிறைய கற்றுகொள்கிறேன்....இனியும் கற்பேன் தங்களை போன்றவர்களிடமிருந்து....

வவ்வால் said...

ஜோதிஜி,

//இறுதியாக உனக்கு அரசியலும் தெரியாது, வரலாறும் தெரியப்போவதில்லை என்பது வரைக்கும் மகுடங்கள் வாங்கியாகி விட்டது.
//

ரொம்ப ஃபீலிங்ஸ் ஆஃப் இந்தியாவாகிட்டிங்களோ :-))



உங்க "breaking point' கொஞ்சம் குறைவாக இருப்பதால் இதோட விட்டேன் , பெரும்பாலும் அவசரக்கதியில் ,அள்ளித்தெறித்தார் போல வரலாற்று,அரசியல் சமாச்சாரங்களை நீங்கள் கையால்வதாக எனது அவதானிப்பு உங்க தொடர்களை படிக்கும் போதெல்லாம் அடிக்கடி நினைப்பது ,ஆனால் சொல்வதில்லை, சரி அடுத்த பதிவில் மேம்படுத்திவிடுவார்னு நினைத்து சென்று விடுவது,சரி சொல்லாமலே இருப்பதை விட சொல்லிடுவோம்னு அந்தப்பதிவில் சொல்லிவிட்டேன் :-))

சமீபத்தில் வந்து கொண்டிருக்கும் ஈழப்பதிவுகளில் கூட "கருத்து" சொல்வதை நிறுத்திவிட்டேன், ஏன் எனில் நான் மட்டுமே குற்றம் கண்டுப்பிடிப்பதாக தோற்றம் உருவாகிவிடும் என்பதால் , பாராட்டுவது நல்ல குணம் என்ற பொது புத்தி சிந்தனைகள் வேரூன்றிய சமூக சூழலில் சரியான விமர்சனத்திற்கு எல்லாம் இடமிருப்பதில்லை என்பதை பலரின் "கருத்துக்களின்" மூலம் அவதானித்துள்ளேன்.

இம்புட்டு நொரநாட்டியம் சொல்லுறியே ஒழுங்கா உனக்கு எழுத தெரியுமா, எழுதிக்காட்டு பாருனு சொன்னால் முடியாது தான், சாம்பாரில் உப்பில்லைனு சொல்ல சமைக்க தெரிஞ்சிருக்கனும்னு நான் நினைப்பதில்லை :-))

# //ஆனால் சுஜாதா இருந்தது அரசாங்கத்தோடு பாதுகாப்பு சம்மந்தப்பட்ட ஆராய்ச்சி ரீதியான துறை.

அப்படிப்பட்ட முக்கியத்துவம் பெற்ற துறையில் ச்சும்மா ஜல்லியடிப்பவர்கள் காலம் தள்ள முடியாது. வெளியே தள்ளி விடுவார்கள். இது போன்ற நிலையில் இருந்து கொண்டே எழுத்துலகில் சாதித்து இருப்பது என்பது எல்லோராலும் முடியுமா? என்பது கேள்விக்குறியே.//

சில பந்து வீச்சாளர்கள் பந்து வீச வந்தால் சில பேட்ஸ்மேன்களுக்கு குதுகளமாகிவிடும் மனசு ,ஹி...ஹி அதே போல தான் உங்க கருத்துக்களும் எனக்கு :-))

சுஜாதா விசிறினு நினைக்கிறேன்,அதுக்குனு இப்படிலாம் அப்பாவியா இருக்கப்படாது, பெஞ்ச் தேய்ப்பதில் முன்னணியில் இருப்பதே அரசு ஆய்வுத்துறைகள், DRDO,போன்றவை தான், ஒரே புராஜெக்ட்டை பல வருஷங்களுக்கு இழுப்பார்கள், கேட்டால் நிதி ஒதுக்கீடு கம்மினு சொல்லிடுவாங்க. நேராவே பார்த்தும் இருக்கேன், சில உறவினர்கள் வேலை செய்றாங்க , எனவே எப்படி வேலை அனுபவம் இருக்கும்னும் தெரியும். உள்ளே போறது தான் கஷ்டம் ,போனப்பிறகு வழக்கமான அரசு வேலை தான், 10 பேரு சின்சியராக வேலை செய்ய 90 பேரு பகோடா சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க :-))

"EVM" வடிவமைத்தது சுஜாதா தான்னு நம்பும் அப்பிராணியாவே இருக்கீங்களே, அவர் பிராஜெக்ட் மேனஜர், அவர் கீழ இருந்தவங்க வேலை செய்தாங்க, வழக்கு என வந்தால் தலைமை பொறுப்பில் இருப்பவர் தான் ஆஜர் ஆகனும், மேலும் நம்ம ஊரு ஓட்டு மெஷின் சமாச்சாரம் ஒன்னும் பெரிய கம்பசூத்திரமெல்லாம் இல்லை, சீனாக்காரன் கிட்டே சொன்னால் , 10ஆம் கிளாஸ் படிச்சவங்களை வச்சு,சல்லீசா முடிச்சிடுவான் :-))

சிக்கலான கணினி, கைப்பேசி ஆகியவற்றின் தயாரிப்புப்பணியில் பெரும்பாலும் ,10,+2 படிச்ச மக்கள் தான் "தயாரிப்பினை முழுமை' செய்கிரார்கள்.பெத்த படிப்பு படிச்சவங்க எல்லாம் மேற்பார்வை தான்!

இந்த ஓட்டு மெஷின் குறைகள்,அதை எப்படி ஏமாத்தலாம்னு ஒரு கட்டுரை கூட எழுதினேன், அப்புறம் பாதியில தொங்க விட்டாச்சு, கொஞ்சம் தகவல்கள் முழுமையாக கிடைக்கவில்லை. கிடைச்சிருந்தா எலக்‌ஷன் கமிஷனுக்கு பெட்டிஷனே போட்டிருப்பேன் :-))
-------

உங்க மனசில் "புயலை கிளப்பியவர்' வா.மணிகண்டன் அவர்களா, ஆச்சர்யமா இருக்கு, எப்படி புயல் கிளம்பிச்சுனு :-))

நீங்களே சொன்ன டயரி குறிப்பு வகைனு நான் நினைத்துக்கொள்வதுண்டு அவரது அனுபவங்களை படிக்கும் போது!

முன்னர். மா.சிவக்குமார் என்ற பதிவர் இது போல அனுபவங்களை எழுதினார், இப்போ பிசியாகிட்டார் போல காணோம். டயரியில் எழுதுவது போல எழுதுறிங்களேனு கேட்டும் இருக்கேன்,ஆமாம் டயரியில் எழுத நினைப்பதை எல்லாம் தான் எழுதினேனு சொல்லிடுவார் :-))

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களின் பார்வைக்கு : http://kavipriyanletters.blogspot.com/2013/05/blog-post.html (தொடரும்…)

வவ்வால் said...

ஜோதிஜி,

உ.த அண்ணாச்சி பற்றி எதுவும் சொல்லாமல் போயிட்டமேனு மீன்டும் வந்தேன்,

// உண்மைத்தமிழன் எழுத்தென்பது வலைபதிவின் தினந்தந்தி//

ஹி...ஹி உண்மையோ உண்மை ,நானும் இப்படி ஒரு முறை சொல்லி இருக்கிறேன். எழுத்து நடை"டாக்குமெண்ட் ரைட்டர்" போல இருந்தாலும்,என் அப்பன் முருகன் என்ன மட்டும் ஏன் இப்படி சோதிக்கிறான் என அண்ணாச்சி பொலம்புவதை படிப்பதில் ஒரு தனி இன்பம் :-))

சினிமா விமர்சனம்னு சொல்லிட்டு மொக்கையா கதையை அப்படியே எழுதுறிங்களேனு கூட சொல்லி இருக்கிறேன் ஆனாலும் கோச்சுக்கவே மாட்டார்,ரொம்ப்ப நல்லவர் :-))

ஜோதிஜி said...

போன ஜென்மத்ல நாங்க உங்களை லவ் பண்ணி பாதியிலே விட்டுட்டு மேலே போய் சேர்ந்திருப்பேன் போல,

ஜோதிஜி said...

ரெண்டு நிமிடத்திற்கு முன் தான் யாரையாவது பாராட்டி இருக்குறீங்களா கேட்கத் தோன்றியது. அடே.......... ஊனா தானா நீங்க ரொம்பவே கொடுத்து வச்சவரு

ஜோதிஜி said...

படித்தேன். நன்றி தனபாலன்

ஜோதிஜி said...

நீங்கள் எழுதிய விமர்சனத்திற்கு தலைப்பு தான் என் பதிலும். பரஸ்பரம்.

ஜோதிஜி said...

உங்கள் வலைச்சர எழுத்தினை ரொம்பவே ரசித்தேன். உங்கள் பெயரில் தான் மற்றொருவரும் வலைதளத்தில் இருப்பதாக நினைக்கின்றேன்.

ஜோதிஜி said...

உங்களுக்குத்தான் பலவகையில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

ஜோதிஜி said...

கில்லாடி நீங்க

ஜோதிஜி said...

மிக்க நன்றிங்க.

ஜோதிஜி said...

நன்றி நண்பா

எம்.ஞானசேகரன் said...

நல்ல அறிமுகம்! இதோ நிசப்தத்தை கலைக்க உள்ளே நுழைந்து விட்டேன்.

Ranjani Narayanan said...

கற்றக் கொள்ளலாம் - இந்தப் பதிவைப் படித்த போது என் பதிவுக் கால ஆரம்பம் நினைவுக்கு வந்தது. இத்தனை பேர் நம் எழுத்தைப் படிக்கிறார்கள் என்பதே நீண்ட காலம் கழித்துத்தான் புரிந்தது.
யாரிடமிருந்து வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கற்கலாம். தப்பில்லைதான்.
மனம் விட்டு இன்னொரு பதிவை பாராட்டி இருப்பது உங்கள் கற்றலின் பெருமையை கூறுகிறது.
உங்களிடமிருந்து நாங்களும் நிறையக் கற்கிறோம்.

வா. மணிகண்டன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவரை எங்களுக்கு அறிமுகம் செய்த உங்களுக்கு பாராட்டுக்கள்.

அம்பாளடியாள் said...

பிடித்த ஒரு வலைப் பதிவரின் ஆக்கத் திறனை எவ்வித சிரமமும்
பார்க்காமல் மிகவும் ரசித்துப் பாராட்டும் தங்களைப் போன்றவர்கள்
எமது ஆக்கங்களையும் காணக் கிடைத்தால் உண்மையில் மனம்
மகிழ்ச்சிப் பூரிப்பில் உறைந்து போகும் .எழுதுவது என்பதை விடவும்
பல ஆக்கங்களைப் பொறுமையாக வாசித்து அதன் கருத்துக்களை
உள்வாங்கிக் கொள்பவர்களே பிற ஆக்கங்களுக்கும் கருத்துச் சொல்லத்
தகுதியுடையவர்கள் என்பது எனது கருத்து அந்தவகையில் தங்களுடன்
சேர்ந்து நண்பர் மணிகண்டன் அவர்களையும் இந்நேரம் வாழ்த்துவதில்
நானும் பெருமை கொள்கின்றேன் .மிக்க நன்றி சகோதரரே சிறப்பான
பகிர்வு இதற்க்கு .

ஜோதிஜி said...

அவசியம் வருகின்றேன்